சென்னை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று 79வது பிறந்த நாள். இதையொட்டி நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 1969ல் நடிக்க துவங்கிய அமிதாப் பச்சன், இந்தி சினிமாவில் முன்னணி இடத்தை 1970களின் இறுதியில் பிடித்தார். தொடர்ந்து இன்று வரை அவர் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். அவரது 79வது பிறந்த நாள் நேற்று மும்பையிலுள்ள அவரது வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடும்பத்தினருடன் கேக் வெட்டி அவர் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவரது வீட்டுக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
அவர்களை சந்தித்த அமிதாப் பச்சன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர்கள் தர்மேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், சஞ்சய் தத் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் அமிதாப் பச்சனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பலர், ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கினர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். அவர்களுக்கு தனது சார்பில் அமிதாப் நன்றி தெரிவித்தார். இப்போது பிரபாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படம், அஜய் தேவ்கனுடன் மே டே, ரன்பீர் கபூருடன் பிரம்மாஸ்த்ரா, சன்னி தியோலுடன் சுப், தீபிகாவுடன் ஒரு படம், ஜுஹ்ண்ட் என்ற படம் என அமிதாப் பிசியாக நடித்து வருகிறார்.