நடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை

நடிகையை கத்தியால் குத்திவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் மாள்வி மல்கோத்ரா. இவர் சமீபத்தில்தான் துபாயிலிருந்து மும்பை திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடமும்பையிலுள்ள வெர்சோவா பகுதியில் காபி ஷாப்புக்கு சென்று வெளியே வந்தார். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர், மாள்வியிடம் தகராறில் ஈடுபட்டார். பின் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாள்வியின் வயிற்றில் குத்திவிட்டு தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாள்வியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மாள்வி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மாள்வியுடன் யோகேஷ்குமார் மஹிபல் சிங் என்பவர் கடந்த ஓராண்டாக நட்பாக பழகி வந்தார். மாள்வியை அவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இது தெரிந்ததும் மாள்வி அவரை விட்டு விலகினார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது காதலை ஏற்கும்படி மாள்வியுடன் யோகேஷ்குமார் தகராறு செய்துள்ளார். மாள்வி மறுத்ததால் அவரை கத்தியால் குத்துவிட்டு தப்பியுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறோம்.

Related Stories: