×

உத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு

நடிகர் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ.8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.

தற்போது விஷால் நடிப்பில் “சக்ரா” என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியிட தயாராக உள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 2 வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு தாக்கல் செய்த பின்னர்தான் சக்ரா படத்தை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23ம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

Tags : iCourt ,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு