அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் தங்கள் குரலை சமூக வலைத்தளங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை எமி ஜாக்சன் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்து: நிறவெறிக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு நேற்றைய தினம் ஒரு முதல்படி. ஆனால், இது ஒரு வெற்று உரையாடலாக இருந்துவிடக் கூடாது. ஒருமுறை பதிவு செய்துவிட்டு, பிறகு அதை மறந்துவிட்டு, அடுத்த பிரச்னைக்கு சென்றுவிடும் விஷயமாகவும் மாறிவிடக் கூடாது.
என் மகனையும், என் எதிர்கால குழந்தைகளையும் இனவெறி இல்லாத அன்பான மனிதர்களாக வளர்ப்பேன் என்று உறுதி ஏற்கிறேன். பெற்றோராகவும், தாய்மார்களாகவும் இதுபோன்ற அராஜகங்கள் இனி நடக்கவிடாமல் தடுக்கும் பொருட்டு, எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. தோலின் நிறத்தில் பாகுபாடு காட்டாத நிறவெறியற்றவர்களாக நம் மகன்களையும், மகள்களையும் வளர்க்க வேண்டியது நம் கடமை.