அர்ஜுன் ரெட்டி ஒரே படத்தின் மூலம் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி பெற, முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். சினிமாவுக்கு வரும் முன் தான் பட்ட கஷ்டங்களை பற்றி மனம் திறந்து ரசிகர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறியது: சினிமாவுக்கு வரும் முன் மேடை நாடகங்களில் நடித்தேன். அப்போது பணத்துக்கு அதிகம் சிரமப்பட்டேன். நான் ஒரு சிறு வீட்டில் வசித்து வந்தேன். அந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியவில்லை. பலமுறை வாடகை பணத்தை இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என காலம் கழித்திருக்கிறேன். ஹீரோவாகும் ஆசையால் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பயிற்சிகள் எடுப்பேன். அப்போது ஜிம்முக்கான கட்டணம் செலுத்த கூட காசு இருக்காது. ஜிம் மாஸ்டரை சமாதானப்படுத்தி பணம் கட்டாமல் காலம் கழித்திருக்கிறேன். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.