மோகன்லாலுடன்
நடித்ததன் மூலம் ஜென்ம பயன் அடைந்தேன் என்கிறார் மிர்னா. மோகன்லால்
நடிக்கும் படம் ‘பிக் பிரதர்’. இந்தப் படத்தை ‘பிரண்ட்ஸ்’ சித்திக்
இயக்குகிறார். இதில் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக்
பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றியும் நம்மிடம்
பகிர்ந்துகொண்டார் மிர்னா.
கொங்கு தமிழில் சரளமா பேசுறீங்களே?
‘இதில்
ஆச்சரியப்பட ஏதுமில்லை. எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ்
மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்குக் காரணம், நான் கோயமுத்தூரில்தான்
எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். கொங்கு நாட்டில் வளர்ந்து தமிழ்
பேசலைன்னாதான் ஆச்சரியம்.
சினிமா வாய்ப்பு எப்படி?எங்களது
நெருங்கிய குடும்ப நண்பர் ஜோதி மேனன், இயக்குநர் சித்திக்கின் நண்பர். அவர்
ஒருமுறை இயக்குநர் சித்திக்கை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது. ஆனால், அடுத்த நாளே மோகன்லால் ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு
கிடைக்குமென்று நினைக்கவில்லை. ஏனென்றால், அனைத்து கலைஞர்களின் தேர்வும்
முடிந்திருந்தது. இது எனக்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான்.
பட அனுபவம் எப்படி?கடந்த
ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை ஏறத்தாழ 145 நாட்கள் படிப்பிடிப்பு
நடந்தது. மோகன்லாலுடன் தமிழில் ‘காவலன் படத்திற்குப் பிறகு மலையாளத்தில்
‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை இயக்கினார் சித்திக். அதன்பிறகு சித்திக்
இயக்கிய படம்தான் ‘பிக் பிரதர்’. அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது
கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது.நான் இந்தப் படத்தில்
வந்தபிறகு இன்னும் வண்ணமயமாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனென்றால், பெரிய
தொழிலதிபரின் மகளாக நன்றாக படித்த அறிவுமிக்க மற்றும் சுட்டித்தனம்
மிகுந்த பெண்ணாக நடிக்கிறேன். மோகன்லாலைத் தவிர மற்ற நடிகர், நடிகைகளுடன்
நடிக்கும்போது அவர்கள் கேமரா முன் எப்படி நிற்கிறார்கள் என்று ஒவ்வொரு
விஷயத்தையும் கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டேன். மோகன்லாலிடம்
எப்படி இவ்வளவு படங்கள் நடித்துவிட்டு எளிமையாக இருக்கிறீர்கள் என்று
கேட்டதற்கு, லேசான புன்னகையுடன் ‘நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது’
என்று கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த சிறு சிறு விஷயங்களையும்
விளக்கமாக கற்றுக் கொடுப்பார். மிகப்பெரிய நடிகருக்கு இவற்றையெல்லாம்
கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் படத்தில் நடித்ததை விட
அதிகமாக கற்றுக் கொண்டேன் என்பதுதான் மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்து மாதங்கள்
அவருடன் இருந்தது பல்கலையில் பாடம் கற்றுக்கொண்ட உணர்வைத் தந்தது.
மோகன்லால்?சமீபத்தில்தான்
நடிகர் மோகன்லால் சினிமாத் துறைக்கு வந்து 41 ஆண்டுகள் நிறைவடைந்ததைக்
கொண்டாடினோம். மேலும், மலையாளத்தில் அறிமுக நாயகியாக மோகன்லாலுடன் ஜோடியாக
நடித்தது பெருமையாக இருந்தது. மலையாள சினிமாவில் இனி நான் சாதிக்க
வேறொன்றுமில்லை எனும் அளவிற்கு இந்த வாய்ப்பு மதிப்புமிக்கது. முதல் நாள்
படப்பிடிப்பில் மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்றதும் பதட்டத்துடன்தான்
சென்றேன். ஆனால், அவருடன் கேமரா முன் நின்றதும் பதட்டம் மறைந்துவிட்டது.
மாபெரும் நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் இயல்பாகப் பழகினார்.
பிக் பிரதர் படம் பற்றி?மலையாளம்
மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ‘பிக்பிரதர்’ படத்தில்
நடிக்கிறார்கள். குறிப்பாக சல்மான்கானின் சகோதரர் முக்கிய பாத்திரத்தில்
நடிக்கிறார். அந்தவகையில் இது மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.
படப்பிடிப்பில் ஒட்டுமொத்த குழுவினருமே நகைச்சுவையோடு பேசிச் சிரித்து
கலகலப்புடன்தான் இருப்பார்கள். காலேஜ் கேம்பஸ் மாதிரிதான் நான் ஃபீல்
செய்தேன். இந்தப் படம் முற்றிலும் குடும்பக் கதையை மையமாக வைத்து
எடுக்கப்பட்ட பொழுதுபோக்கான படம். மோகன்லால் நடிக்கும் படம் பாக்ஸ் ஆபீஸ்
வெற்றியைக் கொடுக்கும். அதேபோல், இந்தப் படமும் மாபெரும் வெற்றியடையும்.
ஆக்டிங் மட்டுமில்லாமல் ஆக்ஷனிலும் கலக்கி விட்டீர்களாமே?ஆமாம்
சார். எனக்கு இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது.
ஓடுகின்ற காரில் நடக்கின்ற சண்டைக் காட்சியில் நடித்தது சவாலாக இருந்தது.
ஆக்ஷன் காட்சியில் இதுதான் எனது முதல் அனுபவம். அந்த சண்டைக் காட்சியில்,
மோகன்லாலுக்கு கையில் அடிபட்டுவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல்
படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். அதன்பின் செய்தித்தாள்களில்
பார்த்துத் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது.
இம்மாதிரி அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய மோகன்லாலைப் பார்த்து வியந்தேன்.
வேறென்ன ஸ்பெஷல்?இந்தப்
படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றது. இசை வெளியீட்டிற்குப்
பிறகு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. தீபக் தேவின் இசை
படத்திற்கு பலமாக அமையும். பொதுவாக சித்திக் சார் படம் என்றாலே திருவிழா
மாதிரி வண்ணமயமாக இருக்கும். யதார்த்தத்தோடு கமர்ஷியலும் சேர்ந்திருப்பது
இந்தப் படத்தின் சிறப்பு. படத்துல எல்லாருக்கும் முக்கியத்துவம்
கொடுக்கும் வகையில் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் கவனித்து
அமைத்திருக்கிறார். இதற்கு முன் இப்படியான பாத்திரங்களைப் பார்த்ததாக
யாருக்கும் நினைவில் வராது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப
சென்டிமென்ட் என்று எல்லாம் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்கும். இதுபோன்ற
திரைப்படம் இனிமேல் வருமா என்று தெரியாது.
எதிர்காலத் திட்டங்கள்?எந்த
மொழியில் நடித்தாலும் நல்ல திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான்
எனது விருப்பம். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமென்ற
கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறியுள்ளது. தமிழில் விஜய் மற்றும் அஜித்துடன்
நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ‘பிக் பிரதர்’ படத்திற்குப் பிறகு
மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதுபற்றிய செய்திகள்
விரைவில் வெளியாகும். ‘பிக் பிரதர்’ படத்தை எந்த மொழியில் மறு உருவாக்கம்
செய்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தில் நானே நடிக்க வேண்டும் என்ற ஆசை
உள்ளது.