×

ஹீரோவின் மறைவுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் ஞானச்செருக்கு!

இயக்குநர் தரணி ராசேந்திரன்  இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச்செருக்கு’.  இந்தப் படத்தில் ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரணி ராசேந்திரனின் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படிப்பை படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இதோ... அவரே இயக்குநரான அனுபவங்களையும், ‘ஞானச்செருக்கு’ உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

“பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன். சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.இந்தக்கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரப் படமாக எடுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, ‘ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள்’ என்று கூறினார்.

எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தப் படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர். அதன்பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் -இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்குத் தெரியாது. படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்துத் திட்டினார்.

பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்தப் படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார். இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்தப் படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட்.இந்தப் படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானத்தின் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது. அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்தப் படத்தின் வேலைகளை முடித்தேன்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தைப் பற்றி வெளியே தெரிய வேண்டும்; அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.நான் எடுத்துள்ளது கமர்ஷியல் படம்தான். ஆனாலும் இந்தப் படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள்  சிறந்த படமாக அங்கீகரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இதுவரை ஏழு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் பாரதிராஜா சார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து கைகொடுத்து பாராட்டினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.

அதன் பிறகு என்னிடம்  கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு அதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. எந்த அளவிற்கு இந்தப் படம் அவர் மனதைப் பாதித்திருந்தால் எனக்கு இப்படிப்பட்ட ஒரு கவுரவத்தை அளித்திருப்பார். அவர் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்கள். இது வெகுஜன படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் வணிக சினிமாவுக்கான அனைத்தும் உண்டு. படத்தில் வரும் மூன்று ராப் பாடல்கள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கும்.

80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்தப் படம்.இந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு  முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் இது. குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. காரணம், நான் அப்படி படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நல்ல படத்தை திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை.

நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம்தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா..? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்கிறார் தரணி ராசேந்திரன்.இந்தப் படத்தை ஃபார்ச்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில்  செல்வராம் மற்றும் வெங்கடேஷ் வெளியிடுகிறார்கள்.

Tags : death ,hero ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்