பார்வையற்ற சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய இமான்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டங்கரை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இந்த வாலிபர் பார்வையற்றவர். சிறுவனாக இருந்தபோதே தாயை இழந்துவிட்டார். நன்றாக பாடும் திறமை கொண்ட திருமூர்த்தி, தனது கிராமத்தில் பாடல்களுக்காக பிரபலம். இவர் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடியிருந்தார்.

இந்த பாடலை அவரது நண்பர் டிவிட்டரில் வெளியிட்டார். இதை பார்த்த இசையமைப்பாளர் இமான், இந்த இளைஞரை தொடர்புகொள்வது எப்படி என கேட்டிருந்தார். திருமூர்த்தியின் தொடர்பு எண்ணை அவரது நண்பர் அளித்தார். இதையடுத்து தனது படத்தில் அவரை பாட வைப்பதாக இமான் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

அதன்படி டி.இமான் தற்போது ஜீவா நடித்து வரும் ’சிறு’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாட திருமூர்த்தி அவர்களுக்கு டி.இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இடம்பெறும் இந்த பாடலை பார்வதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: