×

நடிகருக்கு ராஜமவுலி ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்

ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கிய படம் 2.0. இதில் வில்லன் கதாபாத்திரத்துக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க கேட்டனர். அவர் மறுத்த நிலையில் பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கனை நடிக்க கேட்டார் ஷங்கர். இதுபற்றி இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் பின்னர் அவரும் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் அக்‌ஷய்குமார் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரும் தொகை சம்பளமாக தரப்பட்டது. கோலிவுட்டில நடிக்க மறுத்த அஜய்தேவ்கன் தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஹீரோக்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கின்றனர். ஹீரோயினாக இந்தி நடிகை அலியாபட் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜய்தேவ்கன் பங்கேற்று நடித்து வருகிறார். அவர் தங்குவதற்காக ஸ்டார் ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. காலை முதல் மாலைவரை ராஜமவுலியும் அஜய்தேவ்கனும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தாலும் அஜய்தேவ்கனின் சில தர்மசங்கடங்களை போக்குவதற்காக அவரிடம் நட்பு ரீதியாக பழக தொடங்கியிருக்கிறார் ராஜமவுலி.

படப்பிடிப்பு முடிந்து அஜய்தேவ்கன் ஓட்டல் அறையில் தங்குவதற்கு புறப்பட்டு சென்றபிறகும் அவரை நேரில் சென்று ராஜமவுலி சந்தித்து பேசுகிறார். சினிமா பற்றி மட்டுமல்லாமல் பொதுவான விஷயங்கள் பற்றியும் இருவரும் பேசுகின்றனர். நேற்றும் அஜய்தேவ்கனை ராஜமவுலி சந்தித்து பேசினார். மும்பையில் இருந்து மொழி தெரியாத வேறு மாநிலத்துக்கு வந்துவிட்டோமோ என்ற தனிமை உணர்வு அஜய்தேவ்கனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக இப்படியொரு நெருக்கத்தை அவரிடம் ராஜமவுலி காட்டுகிறாராம்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்