முடியாது என்றால் முடியாது; டாப்ஸி கறார்

நடிகை டாப்ஸிக்கு ரசிகர் வட்டம் தரும் தொல்லை அதிகரித்திருக்கிறது. அவரது நடிப்பை பாராட்டும் ரசிகர் வட்டம் ஒரு பக்கமிருந்தாலும் அவரை வம்பிழுக்கும் கூட்டமும் இருக்கிறது. எதிலும் கறார் காட்டும் டாப்ஸி ரசிகர்கள் தரும் தொல்லையும் எல்லை மீறக்கூடாது என்று கறார் காட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’என்னதான் சினிமாவில் நடித்து பிரபலமாக இருந்தாலும் நடிகர், நடிகைகளுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று இருக்கிறது.

நடிகை ஆவதற்கு முன் எனது தோழிகளுடன் டெல்லி சாலைகளில் நடந்து சென்று பொழுதை கழிப்பேன். மால்களுக்கு செல்வோம், ஓட்டல்களில் அரட்டையடித்தபடி சாப்பிடுவோம். நடிகை ஆன பிறகு இது எதையும் என்னால் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் அன்பு எனக்கு புரிகிறது. ஆனால் அது எல்லை மீறக்கூடாது.

வெளியிடங்களில் செல்லும்போது அவர்கள் எல்லை மீறும்போது அது எனது குடும்பத்தினருக்கு சிக்கலாக அமைகிறது. அதனால்தான் வெளியிடங்களில் என்னை அணுக நினைப்பவர்களை தவிர்த்துவிடுகிறேன். நோ மீன்ஸ் நோ (முடியாது என்றால் முடியாது) இதை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற தர்மசங்கடங்களை தவிர்க்க எனக்கு தேவையான ஆடைகளை கூட நான் வெளிநாடு சென்று வாங்க வேண்டியிருக்கிறது’ என்றார் டாப்ஸி.

Related Stories: