பிச்சைக்காரன், இவன் தந்திரன், உரு, பூமராங், சிவப்பு மஞ்சள் பச்சை படங்களின் ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமாருக்கு கோலிவுட்டில் கொரில்லா கேமராமேன் என்ற ஒரு பெயர் இருக்கிறது. அது என்ன, ‘கொரில்லா’ என்றபோது பதில் அளித்தார். எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலை கொரில்லா தாக்குதல் என்பார்கள். சினிமாவில் எதிர்பார்க்காமல் நடத்தும் ஷூட்டிங்கைத்தான் அப்படி சொல்கிறார்கள். படப்பிடிப்பு நடத்துவதற்கு பல இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை.
அதனால் திடீரென்று ஒரு இடத்துக்கு செல்வோம். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கேமராவை வைத்து பட பட வென்று காட்சிகளை படமாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுவோம். சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு நிறைய பைக் ரேஸ் காட்சிகளை டிராபிக் நிறைந்த பகுதிகளில் படமாக்க வேண்டியிருந்தது. அப்போது இதுபோன்று கொரில்லா ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம். சென்னை, புதுச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடந்தது.
பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை என இயக்குனர் சசியின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கு காரணம் எங்கள் இருவருக்குமான புரிதல் மிக அதிகம். அவர் என்ன கேட்பார் என்று எனக்கு தெரியும். அதை அப்படியே படமாக்கி தருவேன். மற்ற இயக்குனர்களிடமும் எனக்கு அதே நட்பு உண்டு. இதுவரை ஒரு மலையாள படம், 5 தமிழ் படங்களில் பணியாற்றியிருக்கிறேன் எல்லாமே வெற்றியாக அமைந்தது. அடுத்தடுத்தும் சவாலான படங்களில் பணியாற்ற விரும்புகிறேன்’ என்றார்.