வளர்ந்து வரும் இளம் நடிகை அதுல்யா ரவி. நடிக்க வந்த இரண்டு வருடங்களில் சுமார் 7 படங்களை முடித்துவிட்டு 3 படங்களை கையில் வைத்திருக்கிறார். ஒரு படத்தில் சிகரெட் புகைக்கும் காட்சியில் நடித்து நெட்டிஸன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டாலும் அதிலிருந்து மீண்டு அவர்களின் அன்பை பெறும் அளவுக்கு தினம் தினம் இணைய தள பக்கங்களில் தனது சேட்டையை அவிழ்த்து விட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த, சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் மிஷ்கின், சுசீந்திரன் உடன் இணைந்து நடித்தார் அதுல்யா.
மிஷ்கினை பார்க்கும் போதெல்லாம் தனக்கு பயமாக இருந்ததாக அப்போது ஒரு பேட்டியில் தெரிவித் தார் அதுல்யா. அடுத்து சமுத்திரக்கனியின் மாணவியாக அடுத்த சாட்டை படத்தில் நடித்திருக்கிறார். மேலும் எஸ்ஏ.சந்திரசேகர் இயக்கும் கேப்மாரி படத்தில் ஜெய் ஜோடியாக நடித்துள்ள அதுல்யாவுக்கு அப்படத்தில் ஜெய்யுடன் ஏற்பட்ட நட்பு இருவரையும் அடுத்த படத்திலும் இணைத்திருக்கிறதாம்.
வெற்றிசெல்வன் இயக்கம் புதிய படத்தில் ஜெய்யும், அதுல்யாவும் மறுபடியும் இணைகின்றனர். இதுபற்றி அதுல்யா கூறும்போது, ‘மீண்டும் ஜெய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் இயல்பாக பழகக்கூடியவர். கேப்மாரி படத்திலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். அந்த நட்பு புதிய படத்தில் இன்னும் வலுப்பெறும்’ என தெரிவித்தார். ஜெய்யுடன் நட்பு வலுப்பெறுவது சரிதான்... இது அஞ்சலிக்கு தெரியுமா? என்று அதுல்வாவை ஒரு ரசிகர் வம்பிழுத்துவிட்டிருக்கிறார்.