ஒரே டைட்டிலுக்கு மோதும் ஹீரோக்கள்

கோலிவுட்டில் அவ்வப்போது பட டைட்டில் பிரச்னை எழுகிறது. தற்போது இரண்டு ஹீரோக்கள், ஒரே டைட்டிலுக்கு மோதும் சூழல் உருவாகி உள்ளது. நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என பெயரிடப்பட்டிருக்கிறது. காக்கா முட்டை படத்துக்கு வசனம் எழுதியதுடன் குற்றமே தண்டனை படத்தின் திரைக்கதை எழுதியவருமான ஆனந்த் அண்ணாமலை இப்படத்தை இயக்குகிறார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது.

இதில் பைக் ரேசராக விஜய்தேவரகொண்டா நடிக்கிறார். மாளவிகா மோஹனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பேட்ட படத்தில் நடித்தவர். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என பெயரிடப் பட்டிருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகி யாக நடிக்கிறார். ஒரே நாளில் இரண்டு படங்களின் டைட்டிலும் ஒரே பெயரில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தங்களுக்குதான் படத்தின் தலைப்புக்கு உரிமை உள்ளது என இரு பட தரப்பிலும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆனந்த் அண்ணாமலை கூறும்போது,’ஹீரோ டைட்டில் தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இதற்கு அனுமதி இருக்கிறது. இதே டைட்டிலை இப்பட தயாரிப்பாளர், தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்திருக்கிறார்.

வெவ்வேறு மொழிகளில் இப்படம் வெளியா வதால் ஒவ்வொன்றுக்கும் பெயரை மாற்றாமல் ஒரே பெயராக வைக்கவே ஹீரோ என டைட்டில் தேர்வு செய்யப்பட்டது. இந்த தலைப்பை வைக்க எங்களுக்கு தான் உரிமை உள்ளது’ என்றார். சிவகார்த்திகேயன் பட தரப்பில் கூறும்போது, ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்தான் நாங்கள் வைத்த ஹீரோ தலைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான தஸ்தாவேஜுகள் எங்களிடம் உள்ளது. இந்தவிஷயம் தொடர்பாக சங்கத்தில் தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாமல் போயிருக்கலாம்’ என்றார்.

Related Stories: