×

சிற்பமும் சிறப்பும்: பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்


ஆலயம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

பொழில்வாய்ச்சி

இயற்கை எழில், செழித்து வளர்ந்த சோலைகள் சூழ்ந்த, பொழில் வாய்ந்த பகுதியாக விளங்கியதால், `பொழில்வாய்ச்சி’ என்ற பழங்கால பெயர் கொண்டு அமைந்த ஊர், பின்னர் நாளடைவில் மருவி `பொள்ளாச்சி’ என்றாகியது. வளமான பகுதிகள் நிறைந்த இவ்வூர் ‘முடிகொண்ட சோழநல்லூர்’ என்று மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அழைக்கப்பட்டது.

அழகுமிகு அகத்தீஸ்வரமுடையார் ஆலயம்

கொங்குப் பகுதியை ஆண்ட விக்கிரம சோழன், பின் சுந்தர பாண்டியன் காலத்தில் (12-13 ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்டு ‘திரு அகத்தீஸ்வரமுடையார்’ என்ற பெயர் கொண்ட சிவாலயமாகவே அக்காலத்தில் இவ்வாலயம் அமைந்திருந்தது. `பொழில்வாய்ச்சி’ என்ற பழமையான பெயர் கூறும் கல்வெட்டு இவ்வாலய சுற்றுச் சுவரில் காணப்படுகிறது. பின்னர் 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு, தற்போது சுப்பிரமணியசுவாமி கோயிலாகப் புகழ் பெற்று விளங்குகிறது.

சுந்தரேஸ்வரர், மீனாட்சி சந்நதிகள் முன் உள்ள 24 தூண் மண்டபத்தில் உள்ள எழில் வாய்ந்த அரிய சிற்பங்கள், கலை ஆர்வலர் களின் கண்களுக்கு விருந்து.  தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக கங்காளர், துர்க்கை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. முதலையின் தலை, துதிக்கையுடன் கூடிய பறவை யாளியின் விசித்திர வடிவம் குறிப்பிடத்தகுந்தது.

வியக்க வைக்கும் விதானம்

மேற்கூரையில் ஒரே கல்லிலான கற்சங்கிலி, 12 ராசிகளின் வடிவங்கள் காண்போரைக் களிப்புற வைக்கின்றன. சிவன் சந்நதிக்கு முன்புறம் உள்ள மண்டபத்தின் விதானத்தில், சிம்ம யாளியின் வாயிலிருந்து தொங்கும் ஒரே கல்லால் ஆன, பிரம்மாண்டமான கற்சங்கிலி சிற்பம் வியப்பில் ஆழ்த்தும். மீனாட்சி சந்நதிக்கு முன்புறம் மேல் கூரையில் அமைக்கப்பட்டுள்ள மலர்ந்து முழுதும் விரிந்த நிலையில் வட்ட வடிவ பூவின் இதழ் மிகுந்த சிற்ப நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் இரண்டு ஐந்து தலை நாகங்கள் பின்னி பிணைந்தது போல் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பமும் மற்றொரு சிறப்பு.

ஒற்றைக்கல் கற்சங்கிலி

மேற்கூரையில் உள்ள சிம்மயாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடி போன்ற பூ வேலைப்பாடுகள் சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை அதன் வாயில் கவ்வி பிடிப்பது போல் உள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலர் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப் படுகிறது. இது போன்ற ஒரே கல்லிலான கற்சங்கிலிகள் ஒரு சில பழமையான ஆலயங்களில் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்த கற்சங்கிலியின் விட்ட அளவு மிகவும் பெரியது.

தடாதகைப்பிராட்டியார் (மும்முலை அம்மன்)

ஸ்ரீமீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

‘‘ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்தவெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப்பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள்.

கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூங்கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்.”


(641-642 திருமணப் படலம், திருவிளையாடல் புராணம்)

மரங்களிடையே சிக்கிய கண்ணன் இழுத்த உரல்

நாரதர் அளித்த சாபத்தினால் இரு தேவர்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை, கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது.

கண்ணன் அதை பலமாக இழுத்த போது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். இந்த நிகழ்வை விளக்கும் சிற்பமும் மண்டபத்தூணை அலங்கரிக்கிறது.பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூண்களில் இருக்கும் இது போன்ற பல பேரழகு புடைப்புச்சிற்பங்கள், தொல்லியல் ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Tags : Bozil Vaichi ,
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்