×

கொள்ளிக்காடர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒருமுனையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கட்டைக்குக் கொள்ளிக்கட்டை என்று பெயர். எதனையும் பற்றி எரித்துத் தன்வயமாக்கிக் கொள்ளுவதால் ‘‘காரணப் பெயராகத் தீயிக்குக் ‘‘கொள்ளி’’ என்பதும் பெயராயிற்று. தீக்கு - அக்னி என்ற பெயர் வழங்குவது போல, அச்சத்தை தருகின்றதும், பாதுகாப்பு அற்றதுமான தீக்கு நடைமுறையில் கொள்ளி என்பது பெயராகும்.
சிவபெருமான் சுடலைகளில் ஓயாது நடனம் புரிகின்றார்.

அவருக்கு வெளிச்சம் காட்டப் பேய்கள் கொள்ளிக்கட்டைகளை விளக்காகப் பிடிக்கின்றன. இதனை திருஞானசம்பந்த பெருமான் ‘‘பேய் உயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாட’’ என்று திருச்சிராப்பள்ளி தேவாரத்தில் குறிக்கின்றார். இதனை தேவாரத்திற்குள் பலநூறு இடங்களில் பூதங்களும் பேய்களும் கொள்ளிக் கட்டைகளை ஏந்தி வெளிச்சம்காட்டப் பெருமான் ஆடுவது குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அக்னி நட்சத்திர வழிபாடு

சிவபெருமானின் மூன்றாவது கண்ணாகிய நெற்றிக்கண் நெருப்பின் வடிவமாக இருப்பதாலும், அச்சம் தரும் நெருப்பை உமிழ்வதாலும், அது கொள்ளிக்கண் எனப்பட்டது. அதனால், அவருக்குக் கொள்ளிக் கண்ணன் என்பது பெயராயிற்று. அக்னி வழிபட்டுப் பேறுபெற்ற திருமுறைத் தலங்களில் ஒன்று ‘கொள்ளிக்காடு’’ ஆகும். அங்கு சிவபெருமான் அக்னீஸ்வரர், தீவண்ணர் என்ற பெயர்களில் எழுந்தருளியுள்ளார்.

சூரியன், மேஷ ராசியில் உள்ள சித்திரை மாதத்தில் பரணி நான்காம் பாதம் தொடங்கி, அதிலிருந்து பதினான்கு நாட்கள் `அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும். இந்த நாளில் சூரியனின் வெப்பம் மிகமிக அதிகமாக இருக்கும். இதனை `கத்திரி’ என்பர். இந்த நாளில் உச்சி வேளையில் சிவலிங்கத்திற்கு மேலே தாரா பாத்திரம் அமைத்து, அதன் மூலம் சிவலிங்கத்தின் மீது நீர் தாரையாக விழச் செய்வர். அப்போது ருத்திரம், சமக்கம் ஓதப்படும். நீர்மோர், பானகம் இவற்றுடன் தயிர்சாதம் நிவேதிக்கப்படும். திருவாரூர் தியாகராஜசுவாமிக்கு வெள்ளரிப் பிஞ்சுகள் முதலான குளிர்ச்சியைத் தரும் பொருட்கள் நிவேதிக்கப்படும்.

தொகுப்பு: எஸ்.கிருஷ்ணஜா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?