உலைக்கண்ணர் யார்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவபெருமானின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண் அக்னிக் கண் என்று போற்றப்படுவதாகும். அது தீயை உமிழும் தன்மையுடையது. அது உமிழ்ந்த தீயால் படைத்தல், காத்தல் அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழிலும் நடைபெறுகின்றது. நெற்றிக் கண்ணினின்று தோன்றிய ஆறு தீப்பொறிகளால் முருகன் அவதரித்தான். அதே கண்ணில் தோன்றிய தீயால், மன்மதன் எரிந்து சாம்பலானான்.

நெற்றிக் கண்ணைச் சிவபெருமான் காட்டியபோது, ``நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே’’ என்று கூறிய நக்கீரனைச் சுட்டதும் அந்த கண்ணேயாகும். சிவபெருமானின் நெற்றிக்கண், உலைக்கண் எனவும் அழைக்கப்படுகிறது. `உலை’ என்பது கனன்று பொறியுடன் புகையின்றி ஜொலிக்கும் நெருப்பாகும். உலோகங்களை எளிதில் உருக வைக்கும் ஆற்றல் கொண்டது. இத்தகைய தீயின் வடிவாக இருப்பதால், நெற்றிக் கண்ணை உலைக்கண் என்றழைக்கின்றோம்.

மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கம் என்ற பெயரில் இருப்பது உலைக்கண்ணீஸ்வரருக்கு கட்டப்பட்ட கோயிலாகும். இதில் சிவலிங்கம் அமைந்துள்ளது. முன்னாளில் இதன்மீது பெரிய விளக்கை ஏற்றி கடலில் செல்லும் மரக்கலங்களுக்குத் திசை காட்டுவது வழக்கம் என்று கூறுகின்றனர்.

அக்னி அளித்த தேர்ரிக்வேதத்தில் உள்ள அக்னியைப் போற்றும் பல மந்திரங்கள் ருத்ரனுக்கே உரியது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால், அக்னியின் குறிப்பிடத்தக்க மேன்மையான நற்செயல்கள் யாவும் ருத்ர மூர்த்தி யாகிய சிவபெருமானால் செய்யப்பட்டதாகவே அறியப்படும். எடுத்துக்காட்டாக, மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு அக்னிதேவன், பெரிய தேரையும், கொடியையும் கொடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படித் தேரானது அர்ஜுனனுக்கு அக்னியால் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது அக்னியின் அந்தராத்மாவாக இருக்கும் சிவபெருமான் கொடுத்தார் என்றே கொள்ளப்படும். இதனைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில், ‘‘அருச்சுனர்க்கு தூயமந்திரங்கள் சொல்லிக் கொடி நெடுந் தேர் கொடுத்தார் குறுக்கை வீரட்டனாரே’’ என்று அருளிச் செய்துள்ளார்.

தொகுப்பு: வசந்தன்

Related Stories: