×

தொட்டது துலங்க துளசி விவாகம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

(5.11.2022 சனிக்கிழமை)

சிவனுக்கு வில்வம் எப்படியோ, அப்படி மகாவிஷ்ணுவுக்கு துளசி. துளசியை பிருந்தை, விஷ்ணுப்ரியை, விஸ்வ பூஜிதா, புஷ்பகாரா, நந்தினி, கிருஷ்ண ஜீவனி, விஸ்வ பாவனி என்று பல பெயர்களில் அழைப்பார்கள். பகவானுக்கு மிகமிகப் பிரியமானவள் துளசிதேவி என்பார்கள். நிறைய துளசிச் செடிகள் இருக்கக்கூடிய காட்டை பிருந்தாவனம் (விருந்தாவனம்) என்று அழைப்பார்கள்.

துளசியின் மகிமை

துளசியின் மகிமையைப்பற்றியும், துளசிக்கும் பெருமாளுக்கும் நடந்த துளசி விவாகம் பற்றியும் பத்மபுராணத்தில் செய்திகள் உண்டு. துளசியின் தோற்றத்தைப்பற்றி பல புராணக் கதைகள் உண்டு. ஜலந்தரன் என்ற அசுரனுக்கு மனைவியாகி, கிருஷ்ண பக்தியினால் தனக்குரிய ஏற்றத்தை அவள் பெற்றாள் என்று ஒரு புராணம் கூறுகிறது. அந்த ஜலந்தரன் வாழ்ந்த ஊர்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலந்தர் என்று சொல்லுவார்கள். அங்கே ஒரு துளசி மந்திர் இருக்கிறது. துளசியோடு சம்பந்தப்பட்ட தலங்கள் வடநாட்டில் மதுராவும், பிருந்தாவனமும். மதுராவில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது விருந்தாவனம்.

மகாலட்சுமியின் தங்கையாக துளசியைக் கருதுவார்கள்

பாற்கடல் கடைந்தபோது, பல அற்புதமான பொருள்கள் கிடைத்தன. தேவர்கள் கடலில் இருந்து வந்த அமுதத்தைப் பெற்றனர். அவர்களுடைய நன்மையைக் கருதிய பகவான், ஆனந்தக் கண்ணீர் வடித்தபோது, அந்த ஆனந்தக் கண்ணீரின் ஒரு துளிதான் துளசியாக வடிவெடுத்தது என்றும் ஒரு புராணம் உண்டு.

ஆண்டாளும் துளசியும்

பொதுவாகவே புஷ்பங்களைத்தான் மாலையாகச் சூட்டுவது வழக்கம். ஆனால், பெருமாள், துளசி இலைகளை மாலையாகக் கட்டிப் போட்டுக்கொள்வதில் மிகுந்த விருப்பம் உடையவர். மற்ற பூக்கள் மலர்ந்துதான் மணம் வீசும். ஆனால், துளசி பிறக்கும்போதே மணத்தோடு இருக்கும். துளசிச்செடியின் அடியில்தான், ஆடிப்பூரத்தில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்தார். ஆண்டாள், தாம் பாடிய நாச்சியார் திருமொழியில், கண்ணனை விருந்தாவனத்தில் கண்டதாக ஒரு பதிகமே பாடியிருக்கிறார்.

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
- என்பது ஆண்டாள் பாசுரம்.
ஆண்டாள், கண்ணனை நினைத்துநினைத்து ஏங்குகின்றாள். அவளுடைய உடல் இளைக்கிறது. அப்பொழுது, “கண்ணன் சூடிய துளசிமாலையை எனக்குச் சூட்டுங்கள். அப்போதுதான் என்னுடைய உயிர் பிழைக்கும்” என்று கண்ணன் விரும்பிய அந்த துளசிமாலையை, தான் விரும்பு வதாக ஒரு பாசுரத்தில் பாடியிருக்கின்றார்.

ஆழ்வார்கள் பாசுரங்களில் துளசி

ஆழ்வார்கள் துளசியின் ஏற்றத்தை பாசுரங்களில் இணைந்துப் பாடியிருக்கிறார்கள். “துளவமாலை” என்று துளசிமாலையை ஆழ்வார்கள் பாடுகின்றார்கள். “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து” என்று தொண்டரடிப் பொடியாழ்வார், தினசரி துளசிமாலையை இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கிறார். மகாலட்சுமியை மார்பிலே வைத்துக்கொண்ட ஸ்ரீமன் நாராயணன், துளசியை தன்னுடைய முடியிலே வைத்துக்கொண்டார். “முடியினில் துளபம் வைத்தார்க்கு அன்பு செய்யும் அடியன்” என்பது அவர்களுடைய பாசுரம்.

துளசியைப் பறிக்கும்போது சில நடைமுறைகள்


நதிகளில் கங்கைநதி புனிதமானது. அதைப்போலவே விருட்சங்களின் துளசி புனிதமானது. துளசி சேர்த்த கங்கை நீரை யாரொருவன் கடைசித் தருணத்தில், தன்னுடைய வாயிலே விட்டுக் கொள்கின்றானோ, அவருடைய பாவங்கள் எல்லாம் நசிந்து, அவன் மறுபிறப்பு இல்லாத நிலையை அடைவான். துளசியைப் பறிக்கும்போது சில நடைமுறைகள் உண்டு. நகங்களால் கிள்ளக்கூடாது. வெள்ளிக்கிழமை, அமாவாசை, துவாதசி, பௌர்ணமி, கிரகணம் முதலிய நாள்களில் துளசியைப் பறிக்கக்கூடாது. பூஜைக்குத் தேவைப்படுகின்ற துளசியை முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகப்படுத்தப்பட்ட மலர்களை நிர்மால்யம் என்று சொல்வார்கள். அதனை மறுஉபயோகம் செய்ய முடியாது. ஆனால், துளசியை பொறுத்தவரையில் நிர்மால்யம் கூட பயன்படுத்துவார்கள். அது கட்டையாக இருந்தாலும், காய்ந்துபோனதாக இருந்தாலும் துளசியை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

கண்ணன் சொல்லும் துளசி (பத்ரம்) மகிமை

பகவான் கீதையில் தன்னுடைய எளிமையான பூஜையைப்பற்றி கூறுகின்றபோது, ஒரு மலரோ பழமோ தீர்த்தமோ கொடு என்று சொல்லாமல், ஒரு இலை என்று சொல்வது துளசி இலையைத் தான் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். பகவான் முதலில் சொல்வது பத்ரம்தான்.

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி
ப்ரயாத்மன:
 - என்று சொல்கிறார்.

`அச்நாமி’ என்றால் சாப்பிடுகிறேன் என்று அர்த்தம். பூஜை செய்யும் பத்ரத்தை யாராவது சாப்பிடுவார்களா? ஆனால் வில்வம், துளசி இரண்டையும் சாப்பிடலாம். அவை மருந்தாகவும் பயன்படுகிறது. எந்த வீட்டில் துளசிவனம் இருக்கின்றதோ, அந்த வீட்டில் பகவான் கிருஷ்ணரும் இருக்கிறார். ‘‘நாற்றத் துழாய் முடி நாராயணன்” என்பது ஆண்டாள் திருப்பாவை.

ஒரு துளசித் தளம் போதும் ஒரு நாள் சத்தியபாமை, நாரதரிடம் ஒரு கேள்வியை கேட்டாள். ``பகவான் கிருஷ்ணன், எங்களைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டபொழுது, நாரதர் சொன்னார்;

“கண்ணனை நீங்கள் யாருக்காவது தானம் தந்து, பிறகு அவர் எடைக்கு எடை பொருள் கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்” அப்படி சில விஷயங்கள் நம் சமூகத்தில் நடப்பதுண்டு. அதாவது, ஒரு பிள்ளையைத் தத்து கொடுத்துவிட்டு, அந்த பிள்ளைக்கு, எடைக்கு எடை பொருள் கொடுத்து வாங்கி கொள்கின்ற பழக்கங்கள், பழைய காலத்தில் உண்டு.

தத்து கொடுப்பதன் மூலம், கிரக தோஷங்கள் போகும் என்பது நம்பிக்கை. சத்தியபாமை யாருக்கு தானம் கொடுப்பது என்று யோசித்தபொழுது, சகல சாஸ்திர பண்டிதரும், தேவரிஷியுமான நாரதருக்கே  கொடுத்தால் என்ன என்று தோன்ற, “நாரதரே! எல்லா சாஸ்திரங்களும் அறிந்த பரம கிருஷ்ண பக்தரான உமக்கே கிருஷ்ணரை தானம் செய்தேன்” என்று தானம் செய்து கொடுத்துவிட்டாள்.

பிறகு, கிருஷ்ணரை வாங்கிக் கொள்ள வேண்டுமே! கிருஷ்ணரை ஒரு தராசில் அமரவைத்து, பலவிதமான நவரத்தினங்களை, மணிகளையும், பொற்காசுகளையும் துலாபாரத்தில் எடைக்கு எடை வைத்தாள்.அவளிடம் இருந்த அனைத்துச் செல்வங்களையும் வைத்தும், கிருஷ்ணருடைய தட்டு உயரவில்லை. இன்னும் என்ன வைப்பது என்று தெரியவில்லை.

சத்யபாமை மிகுந்த துன்பம் அடைந்தாள். அப்பொழுது நாரதர் ‘‘எந்தப் பொருள் விலை மதிக்க முடியாததோ, அந்தப் பொருளை வைத்தால் தட்டு உயர்ந்துவிடும்” என்று சொல்ல, ருக்மணி யோசித்தாள். ஒரே ஒரு துளசி இலையைக் கொண்டு வந்து “ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்” என்று சொல்லி வைக்க, அந்த தட்டு கீழே இறங்கியது. கிருஷ்ணன் அமர்ந்த தட்டு மேலே ஏறியது. ஒரே ஒரு துளசி இலை, எல்லா செல்வங்களுக்கும் சமமானது என்பதை நிரூபிப்பதற்காக, பகவான் இந்த லீலையைப் புரிந்தான் என்பார்கள்.

துஷ்ட சக்திகள் வராது

1. துளசி யாருடைய வீட்டில் வளர்க்கப் படுகிறதோ, அந்த வீட்டில் துஷ்ட சக்திகள் வராது.

2. துளசிக் குச்சியினால் தீபமேற்றினால் அந்த தீபம் மிகச் சிறந்த பலனைத் தரும்.

3. துளசியின் அடி மண்ணை எடுத்து உடம்பில் தரிப்பதன் மூலமாக, ஆயிரம் கிருஷ்ணபூஜை செய்த பலன் கிடைக்கும்.

4. பற்பல புஷ்பங்கள் பூஜைக்கு சொல்லப் படுகின்றன. ஒவ்வொரு புஷ்ப பூஜைக்கும் ஒரு பலனுண்டு. ஆனால், துளசியைப் பயன்படுத்தும்போது, அத்தனை புஷ்பங்களையும்  பயன்படுத்திய புண்ணியம் சேர்ந்துவிடுகிறது.

5. ஒருவர் இறந்துவிட்டால் அவரைத் தகனம் செய்யும்பொழுது, என்ன தான் சந்தனக்கட்டைகள் வைத்தாலும், ஒரு துளசி கட்டையோடு தகனம் செய்துவிட்டால், அவருடைய பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

6. ஹோமங்களின்போது எத்தனையோ சமித்துக்கள் பயன்படுத்தினாலும், ஒரு துளசிக் கட்டையைப் பயன்படுத்துகின்றபோது அந்த ஹோமம் அற்புதமான
பலன்களைத்  தருகின்றது.

7. இறைவனுக்கு நிவேதனம் தயார் செய்கின்ற பொழுது, அந்த அக்னியில் ஒரு துளசிக் கட்டையும் எரித்தால், அந்த அக்னியில் தயாரிக்கப்பட்ட நிவேதனம், ஈடு இணை இல்லாதவையாக மாறிவிடும்.

8. துளசி மணமானது ஒருவனைப் பரிசுத்தப்படுத்தி விடுகிறது.

9. ஒரே ஒரு துளசித்தளத்தை ஜலத்தில் போட்டு நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைத்துவிடுகின்றது. பத்துப் பசுக்களை தானம் செய்த பலனும் கிடைத்துவிடுகின்றது.

10. இராமாயணத்தில் அனுமன் கடலைக் கடப்பதற்கு முன்னர், துளசிதேவியை வணங்கிவிட்டுத்தான் கடந்தார் என்று கூறுகின்றனர்.

11. துளசியைக் கையால் தொட்டாலே சகல பாபங்களும் நீங்கிவிடுகிறது.

துளசியின் மகிமை இத்தகையது என்பதால்தான், மகான்கள் துளசியை மிகவும் போற்றுகின்றார்கள்.

துளசி விவாகம்

தீபாவளி பண்டிகைக்கு மூன்றாம் நாள், துவிதியை திதியில் துளசி விவாகத்தை செய்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இந்த விவாகம் நடைபெறுகிறது. துளசிச்செடிக்குப் பக்கத்திலேயே மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிச் செடியை வைத்து திருக்கல்யாணம் செய்வார்கள். துளசிச்செடிக்குப் பந்தல் அமைத்து மாடம் கட்டி பூக்களால் அலங்கரித்து பக்கத்திலேயே கண்ணனுடைய படமோ அல்லது சாளக்கிராமமோ வைத்து, இல்லத்தில் அல்லது கோயில்களில் எப்படி திருமண வைபவத்தை நடத்துவார்களோ அதைப்போலவே நடத்துகின்ற வழக்கமுண்டு.

சிறிய தொட்டியில் துளசி மாடம் இருந்தால், அதை வைத்து அங்கேயே விளக்கு ஏற்றி, அதற்கு மஞ்சள் ஆடை அணிவித்து, பூக்களை வைத்து, குங்குமம் மஞ்சள் இட்டு, சர்க்கரைப் பொங்கல் முதலிய நிவேதனங்களைச் செய்து வைத்து, அதற்கு மணிகள் போன்றவற்றை அணிவித்து, பக்கத்திலேயே ஒரு கிருஷ்ணருடைய படமும் வைத்து, மஞ்சள் சரடு, வேதமந்திரம் சொல்லி, துளசி மரத்துக்கு மாங்கல்யம் கட்டி, தூபதீப ஆராதனைகள் செய்து, துளசிமாடத்தை வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து மற்றவர்களுக்கு வினியோகத்தை தரலாம்.ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு அடுத்த நாள், `உத்தான துவாதசி’ என்பார்கள். `மதன துவாதசி’ என்றும் சொல்வார்கள். அன்றைக்கு துளசி விவாகம் செய்வது சாலச்சிறந்தது.

1. துளசி கல்யாணம் செய்வதால், திருமணத் தடைகள் நீங்கும்.

2. சுபகாரியங்கள் விருத்தியாகும்.

3. பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும்.

4. சகல ஐஸ்வரியங்களும் அந்த வீட்டில் பெருகும்.

5. மகாலட்சுமி, என்றென்றும் அந்த வீட்டில் இருப்பாள்.

இத்தனை நன்மைகளும் துளசி விவாகத்தினால் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. சங்கர்

Tags : Tulanga Tulsi Vikam ,
× RELATED தொட்டது துலங்க துளசி விவாகம்