அளவில்லா வரங்களை பொழியும் வேங்கடவன்

15-10-2022  புரட்டாசி 4-வது சனிக்கிழமை

சென்னை - சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். மேலும், விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. வருடந்தோறும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோற்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாயார் அலர்மேல்மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார். இங்கு தலவிருட்சமாக செண்பக மரம் உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 9.கி.மீ. தொலைவில் மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள இத்திருக்கோயிலுக்கு வந்தடையலாம்.

மதுரை

அப்பன் திருப்பதி கோவில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவர், ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார், அலர்மேல் மங்கை. சித்திரை திருவிழாவின்போது அழகர்கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர், இத்தல மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்கிச் செல்வார். கருவறையில் ஸ்ரீநிவாசப் பெருமாள், தன் தேவியருடன் அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

தரமணி

இராகவபட்டாச்சார்யார் என்பவர் திருமலை  திருப்பதியிலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவரால் தொடர்ந்து திருப்பதியில் கைங்கர்யம் செய்ய முடியவில்லை. எனவே, அவருடைய வேண்டுகோளின்படி அன்பர்கள், தரமணியில் இந்தத் திருவேங்கடவன் ஆலயத்தினை நிர்மாணித்தார்கள். சுமார் 1976ல் கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும்  எம்பெருமானுக்கு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்கின்ற திருநாமமாகும்.

‘‘பென்னை மாமணியை அணியார்ந்ததோர்

மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்

என்னை யாருடை ஈசனை எம்பிரான்

தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே’’

என்று திருமங்கையாழ்வார் அருளும் அழகை தரமணியிலும் சேவிக்கலாம். சென்னை, தரமணி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2.கி.மீ. தொலைவில் இராஜாஜி தெருவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம், உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும். பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதி தாயாரும் அருள் பொழிகிறார். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

   

வாடபல்லி (கிழக்கு கோதாவரி)

கிருஷ்ணா நதிக் கரையில் ``வாடபல்லி’’ என்னும் பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று தீபாலய லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரசிம்ம  ஷேத்திரமாகும். மற்றொன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இந்த வாடபல்லிதான் வேங்கடேச திருத்தலமாகும். ஏறக்குறைய, நானூற்றைம்பது வருடங்களான பழமை வாய்ந்த திருத்தலமாகும். இங்கு பெருமாளின் திருநாமம் வேங்கடேஸ்வர சுவாமி ஆகும். இத்திருத்தலம், சின்னத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

அலர்மேல்மங்கைத் தாயாருடன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.ஆந்திர பிரதேசம் மாநிலம், விஜயவாடாவிலிருந்து சுமார் 180 கி.மீ. தொலைவில் வாடபல்லி உள்ளது.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து பெருமாள் சேவை சாதிக்கிறார். கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் தோரணை பெருமாளுக்கு. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து  15.கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

காடிடம்

மருத நிலமாகிய வயல்வெளிகளிலும் முல்லையும், குறிஞ்சியும் மயங்கிய நிலமாகிய சிறிய குன்றுகளும் செறிந்த பகுதியில் ஸ்ரீலட்சுமி வேங்கடரமணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ரங்க மண்டபம், முக மண்டபம், அந்தராளம் ஆகியவற்றைக் கடந்து கருவறையை அடையவேண்டும். கருவறையில், எம்பெருமான் ஸ்ரீதேவி - பூதேவியுடன் ஸ்ரீவேங்கடரமணனாக எழுந்தருளி யிருக்கிறார். ஏழு நிலைகளுடைய கோபுரம் ராஜகோபுரமாக உள்ளது. சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் இந்தத் திருக்கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்து கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், இந்த கோயிலினுள் கஜானனர் என்னும் தும்பிக்கையாழ்வார், அழகிய சிங்கர் (நரசிம்மர்), கருடாழ்வார், அனுமன் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர். கர்நாடக மாநிலம், பாகேபள்ளியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் காடிடம் திருத்தலத்திற்கு வந்துவிடலாம்.

மந்திராலயம்

மகான் ஸ்ரீராகவேந்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடரமணர் ஆலயம்  உள்ளது. இந்த ஆலயம் ராகவேந்திரரின் மூல பிருந்தாவனமான மந்திராலயத்தில் தான் உள்ளது. ராகவேந்திரரை சேவித்தவுடன், அங்கிருக்கும் மடத்தின் ஊழியர்களிடத்திலோ அல்லது உள்ளூர் மக்களிடத்திலோ கேட்டால், அவர்கள் இந்த

ஸ்ரீவேங்கடரமணர் கோயிலுக்கு வழி சொல்வார்கள். நடந்தே செல்லலாம்.

மகான் ஸ்ரீராகவேந்திரஸ்வாமிக்கு, திருப்பதி வெங்கடாஜலபதியே குலதெய்வமாவார். அதனால் மகான் ஸ்ரீ ராகவேந்திரர், வேங்கடரமணரைப் பிரதிஷ்டை செய்த பின்னரே, மாஞ்சாலத்தில் மற்ற பணிகளைத் தொடங்கினார். ஆகவே, மந்திராலயம் சென்று வேங்கடரமணரை தவறாமல் தரிசிப்பது சிறப்பானதாகும்.

ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 283 கி.மீ. தொலைவில் மந்திராலயம் உள்ளது.

கும்பகோணம்

கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற ஸ்ரீதேவி - பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள் பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார். தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

திருமலை வையாவூர்

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வைத்துவிட்டு கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது அனுமனால் சஞ்சீவி மலையை தூக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை நகரவிடாது தடுத்தது. ‘ஐயனே நான் என்ன செய்ய?’ என்று நெஞ்சுருகி ராமனை பிரார்த்தித்தார்.

அங்கே புன்னகையுடன் வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார். இன்றும் நம் பொருட்டு அலர்மேல் மங்கையோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்தோடு இறைவன் சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னையிலிருந்து 70.கிமீ. தொலைவிலும், செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம் கூட்டு ரோடிலிருந்து 4.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கோட்டூர்

‘கோடு’ என்பது தந்தத்தின் பெயர்களில் ஒன்று. வராகப் பெருமாள், தம் தந்தத்தின் மூலம்தான் கடல் நீரிலிருந்து பூமியை எடுத்துக் காத்தார். அத்தகைய தந்தத்தின் பெருமை தோன்றும் படி இத்திருத்தலத்திற்கு, `கோட்டூர்’ என்று பெயர் ஏற்பட்டது. தற்போது இந்த திருத்தலம், கோட்டூர்புரம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீநிவாசப் பெருமாள் இங்கு அலர்மேல்மங்கைத் தாயாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

பெருமாள் இங்கு நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். ஸ்ரீராம நவமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி ஆகிய முக்கியமான நாட்களாக இவ்வாலயத்தில் கொண்டாடப்படுகிறது. மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பழங்கால கோயில் இது என்று கூறப்படுகிறது. சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எல்.ஆர்.ஐ) பின்புறம் அமைந்துள்ளது இந்த கோயில்.

சித்திரவாடி

மதுராந்தகத்திலிருந்து கூவத்தூர் செல்லும் வழியில் 8.கி.மீ. தொலைவில் முதுகரைக்கு அருகில் இந்த அழகான சித்திரவாடி சிற்றூர் உள்ளது. இங்கே பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இங்கே வேங்கடவன் அன்பர்களுக்காக மனமுவந்து கோயில் கொண்டிருக்கிறார். சனிக்கிழமை தோறும் விளக்கேற்றி பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டால், பக்தர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக ஐதீகம் உள்ளது. மதுராந்தகத்திலிருந்து கூவத்தூர் செல்லும் பாதையில், முதுகரைக்கு அருகில், 8 கி.மீ. தொலைவில் சித்திரவாடி உள்ளது.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தைப் பொறுத்தவரையில் மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் 15-வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

திருப்பாற்கடல்

திருவேங்கடமுடையாள், ஸ்ரீபிரசன்ன வேங்கடாலசலபதி எனும் திருநாமத்துடன் காஞ்சிபுரம் அருகிலிருக்கும் திருப்பாற்கடலில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த திருத்தலம் முந்தைய காலத்தில் விஜய கண்ட கோபாலபுரம் எனவும், அவனி நாராயண சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. புண்டலீகரெனும் திருமாலடியாரான முனிவர், இந்த ஊருக்கு அருகில் வரும் பொழுது, ஆவுடையார் மேலிருந்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்டார். முனியே நான் முகனே!முக்கண்ணப்பா!  என்று நம்மாழ்வார் விளித்தபடி, நாராயணனின் திருமேனியில் அங்கமாக சிவபெருமானைத் தரிசித்தார்.

ஸர்வாந்தர்யாமியை, அர்ச்சாவதாரமாக சேவித்தார். அன்று முதல், இந்த பெருமானுக்கு ‘புண்டலீகவரதன்’ என்று மற்றொரு திருநாமம் ஏற்பட்டது. திருத்தலத்தின் புஷ்கரணிக்குப் புண்டலீகதீர்த்தம் என்றே  பெயர். காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருப்பாற்கடல் திருத்தலத்திற்கு வந்தடையலாம்.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் இது. உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள். பொதுவாக கோயில்களில் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினத்தன்றும் கருட சேவை சாதிக்கப்படுகிறது. மனக்குறையுடன் வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, நீண்டநாள் மன நோயாளிகளும் பூரண நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி - சேலம் பாதையில் 24.கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வெண்பாக்கம்

அலர்மேல் மங்கைத் தாயாருடன் னிவாசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் அழகான திருக்கோயில்தான் வெண்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். பல ஆச்சாரியப் புருஷர்கள் இப்பெருமாளைச் சேவித்திருக்கிறார்கள். மிகுந்த பழங்காலத் திருக்கோயிலாகும். காஞ்சிபுரத்திலிருந்து, வடமேற்கில் 16 கி.மீ. தொலைவில் வெண்பாக்கம் உள்ளது. சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்தும் செல்லலாம். சிங்கப்பெருமாள் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மரைச் சேவித்து விட்டு வெண்பாக்கம் செல்லலாம்.

செஞ்சி

செஞ்சிக் கோட்டை என்றே புகழ் பெற்றிருக்கும் பெரிய கோட்டை இங்குள்ளது. மேலும், ஏறத்தாழ இரண்டு ஏக்கர் பரப்பளவில் செஞ்சி ஸ்ரீவேங்கடரமணப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. தொல்லியல் துறையினரின் பாதுகாப்பின் கீழ் இந்த திருக்கோயில் உள்ளது. ஓவியர்கள், சிற்பிகள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருள் அறிஞர்கள் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, பக்தர்களுக்கும் இந்த கோயில் மிகவும் முக்கியமானதாகும். வந்து பாருங்கள் மீண்டும் மீண்டும் வரத்தோன்றும் அழகிய திருக்கோயில். திருவண்ணாமலையிலிருந்து, 35 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவிலும் செஞ்சி ஸ்ரீவேங்கடரமணப் பெருமாள் கோயில் உள்ளது.

துறையூர்

துறையூரை அடுத்த கொல்லிமலை - பச்சை மலைத் தொடரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த மலைகோயில் ராஜராஜசோழன் பரம்பரையினரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இங்கு பெருமாள் திருமண கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.

அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு 1554 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்லவும் 5.கி.மீ. தொலைவிற்கு மலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை திருப்பதி பெருமாள் தனக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களை இங்கேயே செலுத்தலாம் என்று பிரசன்னமாகி எழுந்தருளிச் சொன்னதாக தலவரலாறு

கூறுகின்றது. இத்தலம் திருச்சி, துறையூருக்கு அருகேயுள்ளது.

ஆப்பூர்

சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்து பெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் தலத்தில் மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுவது வித்தியாசமான வழக்கமாக இருக்கிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

பாதூர்

ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர். இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னனான மூன்றாவது கிருஷ்ணனால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜிராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் இந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார். விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது.

அரியக்குடி

முன்னொருகாலத்தில், காரைக்குடி பகுதியிலிருந்த அடியவர் ஒருவர், திருவேங்கட முடையானைத் தினமும் சேவிக்க ஆவல் கொண்டார். முதிர்ந்த வயது காரணமாக அவரால் திருமலைக்குச் சென்று சேவிக்க முடியவில்லை. தினமும் உறங்கும் முன், திருமலையப்பனை நினைத்துக் கொண்டே அவர் உறங்கினார். ஒருநாள் அவரின் கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான், அரியக் குடியிலேயே தம்மை எழுந்தருளச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தார். அதன்படி, அரியக்குடியில் வேங்கடாசலபதி திருக்கோயில் எழுப்பப்பட்டது.

அன்று முதல் அந்த அடியவர், இந்த வேங்கடாசலபதியை வணங்கி மகிழ்ந்தார். ஆகையால், வயதானவர்கள் மற்றும்  திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து தரிசிக்கலாம். பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் காரியங்கள் உடனடியாக நிறைவேறுவதாக உள்ளூர் பக்தர்கள் கூறுகிறார்கள். காரைக்குடி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ, தொலைவில் அரியக்குடி கிராமம் உள்ளது.   

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நாமக்கல்லில் இருந்து  18.கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

தொகுப்பு : ஜி.ராகவேந்திரன்

Related Stories: