பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது' என்பார்கள். அந்த அளவுக்கு பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு 'கோமாதா' என்ற சிறப்பான பெயரும் உண்டு. 'கோ' என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.
கோமாதாவை வழிபட வேண்டிய முறை:
பசுவை இறைவனின் வடிவமாகக் கருத வேண்டும். கோமாதா பூஜையின்போது, கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி, கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல் மற்றும் பல்வேறு வகையான பழங்களைப் படைக்க வேண்டும்.
நெய் விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். எடுத்தப் பின்னர் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின்பு மீண்டும் நெய் தீபத்தால் ஆரத்தி எடுத்து மூன்று முறை கோமாதாவை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜையின்போது கன்றுடன் சேர்த்துதான் பூஜிக்க வேண்டும்.
வீட்டில் பூஜை நடத்த இயலாதவர்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச் சென்று வழிபடலாம். கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கோபூஜையில் வழிபடலாம்.
கோமாதாவை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்:
* கோமாதாவைத் தெய்வமாக நினைத்து விரதமிருந்தால், கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
* பசுவுக்கு உணவளித்தால் நம் கர்ம வினைகள், சாபங்கள் நீங்கும்.
* எந்தக் கிரகத்தால் நமக்குத் தொல்லையோ அந்தக் கிழமையில் பொங்கல் வைத்துப் படைக்க, கிரக பாதிப்புகள் விலகும்.
* கோமாதாவுக்கு வாழைப்பழத்துடன் வெல்லம் சேர்த்துப் படைக்க பிதுர் தோஷம் நீங்கி புத்திரப் பாக்கியம் உண்டாகும்.
* பாதியில் நின்ற கட்டடங்களில் பசுவைச் சுற்றி வரச் செய்தால் தடை விலகி, நின்ற பணிகள் நிறைவுபெறும்
* சனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சனிக்கிழமை பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்துவர, பாதிப்புகள் குறையும்.
கோபத்தால் விளையும் தீவினைகள் தீரும்.
* கோமாதாவின் பிருஷ்டபாகத்தை வழிபட்டால் முன்ஜன்ம பாவங்கள் நீங்கும்.
* காலையில் கண்விழித்ததும் தொழுவத்தில் பசுவைக் காண்பது சுபசகுனமாகக் கருதப்படும்.
* பசுவை ஒரு முறை சுற்றி வந்தால் உலகம் முழுவதும் சுற்றி வந்த புண்ணியம் உண்டாகும்.