கலாச்சாரத்தின் நுழைவு வாயிலே கோலமாகும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம் பாரத கலாச்சாரத்தில் முக்கிய பங்கு  வகிக்கிறது கோலம். எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் முதலில் அந்த நிகழ்ச்சியை அலங்கரித்து வரவேற்பது கோலமே ஆகும் . கோலம் போடுவது ஒரு மங்களகரமான செயல் ஆகும். கோலம் என்பது அரிசி மாவு, சுண்ணாம்பு, சுண்ணாம்புத் தூள் அல்லது பாறைப் பொடியைப் பயன்படுத்தி, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தி, இலங்கையில், இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் கோவா, மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளான  இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசிய நாடுகளில் இந்த கலாச்சாரம் இருக்கின்றது. கோலம் என்பது வளைந்த சுழல்களால் ஆன வடிவியல் கோடு வரைதல் ஆகும், இது புள்ளிகளின் கட்டம் வடிவத்தைச் சுற்றி வரையப்படுகிறது.

பொதுவாக  இந்துக் குடும்ப உறுப்பினர் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் கோலம் போடுவது பரவலாக நடைமுறையில் உள்ளனர். கோலம்  என்னும் சொல் நம் பாரத பூமியில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன, மகாராஷ்டிராவில் ரங்கோலி, மிதிலாவில் அரிபன், கர்நாடகாவில் ஹேஸ் மற்றும் ரங்கோலி, ஆந்திராமற்றும் தெலுங்கானாவில் முகுலு என்றும் கூறுவர். வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி நாம் காண்போம்

*கோலம் - இப்பெயரை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகுதான். ஆனால், அழகிற்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது. பல மருத்துவக் காரணங்களுக்காகவும், காலம்காலமாக கடைப்பிடித்து வரும் சம்பிரதாயத்திற்காகவும் கோலம் போடுகிறார்கள். வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

*காலையிலேயே குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டமானது சீராகிறது.

*கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி எனக் கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதோடு உங்கள் சிந்தனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.

*மேலும் புள்ளிக்கோலத்தை போடும்; போது உங்களது கண் ஒரு புள்ளியைச் கூர்ந்து கவனிப்பதால் உங்கள் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும்.

*பசு சாணத்தாலோ, தண்ணீராலோ வாசலை தெளிக்கும்போது, வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகின்றன. இதனால் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.

*விரல்களால் கோலமாவை எடுத்து, வளைத்து கோலம் போடும்போது, அது நம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் நன்றாக வேலை செய்கின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

*கோலம் போடுவதால் நம் கற்பனைத் திறனும், நினைவாற்றலும் வளர்கிறது.

*அழகாகக் கோலம் போடுபவரின் கையெழுத்து பார்க்க அழகாக இருக்கும்.

*குனிந்து பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் இவையெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப்பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை தரக்கூடியது.

*கோலமிடுதல் என்பது வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம், மேலும் வீடு மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

*தினமும் விடியற்காலையில் கோலம் போடுவதால் வீட்டிற்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை. அதைப் போடும் பெண்களுக்கும் புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, உற்சாகம், செயலில் கவனம், பொறுமை, பிரச்னைகளை கையாளும் திறன் ஆகியவையும் கிடைக்கப்பெறுகிறது.

பூஜையறையில் குறிப்பாக  மூன்று கோலங்களை அனைத்து வீடுகளிலும் போடுவார்கள். எதற்காக இந்த மூன்று கோலங்களை மட்டும்  பூஜை அறையில் போடுகிறார்கள்? என்பதை  நாம் தெரிந்து கொள்வோம், கோலம் போடுவது தெய்வங்களை நம் வீட்டிற்குள் வரவழைப்பதற்கு தான். காலையில் எழுந்ததும் முதல் வேலையே இதை செய்வதற்கு இதுதான் காரணம். எந்த ஒரு வீட்டில் நாள்தோறும் தவறாமல் கோலம் போடு கிறார்களோ! அந்த வீட்டில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.

ஐஸ்வர்ய கோலம்

ஐஸ்வர்ய கோலம் எனப்படும் ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடியதாகும். சகல ஐஸ்வர்யம் பெற  இந்த கோலத்தை பூஜையறையில் போடுவது வழக்கம்.  வீட்டில் முக்கிய விசேஷ தினங் களில் இந்த கோலத்தை போடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எப்பொழுதும் பூஜை அறையில் இந்த கோலம்  போட்டு வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த கோலத்தை பச்சரிசி கலந்த கோல மாவில் நீங்களே கோலம் போட்டால் பலன்களும் அதிகம் உண்டாகும்.

ஹ்ருதய கமலக் கோலம்

ஹ்ருதய கமலக் கோலம் எனப்படும் அஷ்ட ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும் பெருக்க கூடியதுமான அற்புதமான கோலம். இந்த கோலம் போடுவதற்கு சற்றே சிரமமாக இருக்கும் என்றாலும் கற்றுக்கொண்டால் எளிதானது தான். வீட்டில் பணரீதியான பிரச்னைகள் மேலோங்கும்பொழுது இறைவனை நாடி நாம் பிரார்த்தனைகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹ்ருதய கமலக் கோலம் பூஜை அறையில் போடுவதால் பணப் பிரச்னை ஏற்படாது என்று நம்பப்படுகிறது.இந்த கோலத்தை  நாம் வீட்டுவாசலில் போடக்கூடாது. ஹ்ருதய கமல கோலத்தை பொறுத்தவரை இதனை பூஜைஅறையில் மட்டுமே போட வேண்டும்.

லட்சுமி குபேர கோலம்

லட்சுமி குபேர கோலம் மிகவும் விசேஷமானது. பூஜை அறையில் போடப்படும் கோலங்களில் லட்சுமி குபேர கோலம் மிகவும் எளிமையானது. லட்சுமி, குபேரன் என்பது செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமியையும், குபேரனையும் குறிப்பதாகும்.  எனவே இந்த  கோலத்தை போடுவதால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் லட்சுமி குபேர கோலத்தைப் போட்டு பூஜை அறையை அலங் கரிப்பது சிறப்பாகும்.

பூஜை அறையில் போடப்படும் கோலங்களை பூக்களால் அலங்கரிப்பது மிகவும் முக்கியமாகும். குறிப்பு : இந்த கோலங்களை தெய்வீக கோலமாக குறிப்பிடுவதால் மற்றவர்களின் கால்களில் மிதிபடுவது நல்லதல்ல. எப்பொழுதும் கோலம் போடும் பொழுது இறைவனின் உருவப்படத்தை வாசலில் போட்டு மற்றவர்களின் கால்களை மிதிபடும்படி வரையக்கூடாது.

தொகுப்பு: அனுஷா

Related Stories: