நல்லன யாவும் அருளும் நவராத்திரி வழிபாடு

நவராத்திரி என்ன பொருள்?

நவராத்திரி என்பதை நவ+ராத்திரி என்று பிரிக்கலாம். நவம் என்பதற்கு புதுமை, நட்பு, பூமி, ஒன்பது, கார்காலம் என பல பொருள்கள் உண்டு. ஒன்பது ராத்திரிகள் செய்யவேண்டிய வழிபாடு அல்லது ஒன்பது நாள்  இருக்க வேண்டிய விரதம் என்ற பொருளில் இந்தச் சொல் அமைந்துள்ளது.

இது நமக்கு புத்தம் புதிய உணர்வுகளைத்  தருவதால் இந்த நவ (ஒன்பது) ராத்திரிகள், நமக்கு புதிய (நவ) ராத்திரிகளாக இருக்கின்றன. புதிய கற்பனைகளைத் தருகின்றன. புதிய உத்வேகத்தைத் தருகின்றன. அந்த உற்சாகத்தைப் பெறுவதற்காகவும், புதிய சக்தியைப் பெறுவதற்காகவும் நவராத்திரி பண்டிகையை நாம் கொண்டாடுகின்றோம்.

புதிய விஷயங்கள், புதிய கற்பனைகள்

நவம் என்றால் புதியது அல்லவா. இந்த 9 நாட்களிலும் அம்பிகையைப்  புதுப்புது அலங்காரத்தோடு நாம் தரிசிக்கிறோம். நம்முடைய மகிழ்ச்சி பெருகுகிறது. சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டு அலங்காரம் வைக்கமாட்டார்கள். புதிய விஷயங்கள் இருக்கும். புதிய கற்பனைகள் இருக்கும்.

புதிய உற்சாகம் இருக்கும். அதனாலும் சென்ற நவராத்திரி போல் இந்த நவராத்திரி இல்லை. இது புதிய நவராத்திரி என்பதாலும் இதை நவ (புதிய) ராத்திரி என்று அழைக்கிறார்கள். விருப்பம், விருப்பத்தினால் பெறும் அறிவு, அறிவு கொண்டு செய்யும் செயல் என 3 x 3 = 9 நாட்கள் பண்டிகை இது.

இதன் தத்துவம் இது.

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

என்ன கிடைக்கும்?

இந்த நவராத்திரி விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் துவங்குகின்றது. இதில் முதல் நாள் கும்பத்தில் மகாதேவியாகிய அம்பாளை ஆவாகனம் செய்து, ஒன்பது ராத்திரிகள் கொலு வைத்து, விரதம் இருக்கின்றோம். இந்த விரதம் மூலமாக நமக்கு அடுத்த ஓராண்டுக்குத்  தேவையான உற்சாகமும் சக்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நவராத்திரி ஒன்பதாம் நாள் ஆயுதபூஜை நாள் என்று கூறுவார்கள்.

ஒருவர் தன் வாழ்வாதாரத்திற்காக  பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபடுவதுதான் ஆயுதபூஜையின் சிறப்பு.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒருவரது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, தான் பயன்படுத்தும் கருவிகளை வணங்கியே வேலையைத் தொடங்குவார்கள். இது  இயல்பான வழக்கம்.

கலைத்திறன் வளர்க்கும் விழா

கொலு வைப்பதில் இருக்கட்டும், தினம் அம்பாளுக்கு  பல்வேறுவிதமான நிவேதனங்கள் செய்வதில் இருக்கட்டும். தினம் நாமோ ,நம் வீட்டிற்கு வருகின்றவர்களோ) புதிய ஸ்தோத்திரங்கள் சொல்வதும், பாடல்களைப் பாடுவது போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும்.

அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட வேண்டும். இவைகளெல்லாம் நமது கலைத் திறனையும் படைப்புத் திறனையும் மறைமுகமாக வளர்க்கின்றன. அதற்கான ஒரு ஏற்பாடாகவும்  இந்த நவராத்திரி பெருவிழா அமைந்திருக்கிறது.

எப்படி விரதம் இருப்பது?

நவராத்திரிக்கு வேண்டிய பூைஜக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூைஜ தொடங்கவேண்டும். அடுத்து பிரதமையில் ஆரம்பித்து முதல் எட்டு நாட்கள் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவுகளை  ஏற்கலாம். இந்துக்கள் விரதத்தில், முழுமையாகபட்டினி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய பெரியவர்கள் நிச்சயமாகச்  சொல்லவில்லை. இருந்தால் நல்லது. முடியாவிட்டால், சில எளிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைத் தொடரலாம்.

நிவேதனங்கள்

நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்பசாதம், தேங்காய் சாதம், எலுமிச்சைச் சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம். நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.இருப்பினும் வாசகர்கள் வசதிக்காக ஒரு சிறு பட்டியலைத்  தருகிறோம்.

1ம் நாள். நைவேத்தியம் - வெண்பொங்கல். வெள்ளை கொண்டகடலை சுண்டல்.

2ம் நாள் நைவேத்தியம் - புளியோதரை. பயத்தம் பருப்பு சுண்டல்.

3ம் நாள் நைவேத்தியம் - சக்கரைப் பொங்கல். மொச்சை கடலைசுண்டல்.

4ம் நாள் நைவேத்தியம் - கதம்பம் சாதம் பச்சைப் பட்டாணி சுண்டல்.

5ம் நாள் நைவேத்தியம் - தயிர் சாதம் வேர்க்கடலை சுண்டல்.

6ம் நாள் நைவேத்தியம் - தேங்காய் சாதம். கடலைப்பருப்பு சுண்டல்.

7ம் நாள் நைவேத்தியம் - எலுமிச்சை சாதம். வெள்ளை பட்டாணி சுண்டல்.

8ம் நாள் நைவேத்தியம் - பாயசம் காராமணி சுண்டல்.

9ம் நாள் நைவேத்தியம் - அக்கார அடிசல் சாதா கொண்ட கடலை சுண்டல்.

செவ்வாய் மற்றும் வெள்ளியன்று புட்டு அல்லது சிவப்புக் காராமணி இனிப்பு, சுண்டல் செய்யலாம்.

விரதம் என்பதே இறைவனை வழிபடுகின்ற மனஉறுதியைச் சொல்கிறதே தவிர, இந்த  உணவை உண்ண வேண்டும்; இந்த உணவை உண்ணக்கூடாது என்கின்ற பட்டியலை எப்பொழுதும் தருவதில்லை. படையல் நிவேதனங்கள் அவரவர்கள் உணவு பழக்கம் மற்றும் வசதி வாய்ப்புகளைச்  சார்ந்தது. ஆனால் அம்பிகையின் மீது வைக்கக்கூடிய பக்தி என்பது  பொதுவானது. அதுதான் எந்த விரதத்திலும் பிரதானம்.

ஆயுள் தோஷங்கள் நீங்க

புரட்டாசி மாதத்தை பாத்ரபத மாதம் என்று சொல்லுவார்கள். சூரியன் கன்னிராசியில் பிரவேசிக்கும் மாதம். புதனுடைய ராசி கன்னி ராசி. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பல் என்று அக்கினி புராணம் கூறுகிறது.  எமனின் கோரைப் பல்லிலிருந்து தப்ப, நிவாரணமாக,  நவராத்திரிப் பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டும்; அல்லது கோயில்களுக்குச் சென்று பண்டிகைகளின் போது கலந்து கொண்டு வணங்கி, அவள் பேரருள் பெற வேண்டும். அதன் மூலமாக ஆயுள் தோஷங்கள் நீங்கி எமனின் பிடியிலிருந்து  தப்பி வாழ்வை நீட்டித்துக்  கொள்ள  முடியும். அதற்கு அம்பிகையின் பேரருள் துணை செய்யும்.

எப்போது பூஜை செய்ய வேண்டும்?

விரதம் இருப்பவர்கள் பொதுவாக பகலில் விரதம் இருந்து, இரவு அம்பிகைக்கு பூஜை நிவேதனம் செய்து அந்தப்  பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். ஒன்பதாம் நாள் நவமி அன்று முழுமையாக உபவாசம் இருப்பது நல்லது. அது கிட்டத்தட்ட ஏகாதசி விரதம் போல. ஏகாதசிக்கு எப்படி துவாதசி பாரணை முக்கியமோ அதைப்போல மகாநவமியில் விரதமிருந்து, அடுத்த நாள் விஜயதசமியில் காலை  9:00 மணிக்குள்  பாரணையை முடிக்க வேண்டும். தினசரி இரவு 7 மணி முதல் அதிகபட்சம் 9 மணி வரை நவராத்திரி பூஜையை நிறைவேற்றுவது சாலச்சிறந்தது. தினமும் இரவில் கொலு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்தல் அவசியம்.

நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம்?

ஒன்பது நாட்களும்  அம்பாளுக்கான  பிரத்தியேகமான நாட்கள் என்பதால் அம்பிகைக்குரிய  ஸ்லோகங்களை, இசைப்பாடல்களை வாசிக்கலாம். புராணங்கள் வாசிப்பவர்கள் தேவி பாகவதம் பெரும்பாலும் படிக்கிறார்கள். இது தவிர  ராமாயணம் மகாபாரதம் படிப்பதாலும் ஒன்றும் தவறு இல்லை. அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், லஷ்மி  சகஸ்ரநாமம், சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, துர்கா அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் போன்ற எண்ணற்ற அம்பாள் வழிபாட்டு மந்திரங்களையும், அம்பிகையின் மீது இயற்றப்பட்ட எளிமையான பாடல்களையும் பாடலாம்.

குழந்தைகளுக்கு அம்பிகையின் ஆசி

குழந்தைகளுக்கு எளிமையான ஸ்லோகங்களைச் சொல்லித் தந்து, அவற்றை நவராத்திரியில் பாடச்சொல்லி, பரிசுகள் வழங்கலாம். கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களுடைய கலைத்திறனையும் படைப்புத்திறனையும் வளர்க்கலாம். இது குழந்தைகளின் திறனை மட்டுமல்லாது அம்பிகையின் ஆசிகளையும் அள்ளித்தரும்.

எத்தனை நவராத்திரிகள் தெரியுமா?

நவராத்திரி பண்டிகை பலவிதமாக கொண்டாடப்படுகிறது. ஆனி ஆடி மாதங்களில் வருவது வராகி நவராத்திரி. தைமாதத்தில் கொண்டாடப் படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் நவராத்திரி உண்டு. அதற்கு வசந்த நவராத்திரி என்று பெயர். ஆனால் புரட்டாசி மாதம் வருகின்ற நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். தென்னகத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரியாகிய புரட்டாசி நவராத்திரி.  இக்காலங்களில் தினசரி மாலையில் அம்பிகையை பூஜைசெய்து ஸ்தோத்திரங்கள் பாடி வழிபாடு நடத்த, கல்வியும் செல்வமும் வீரமும் பெற்று சகல துறைகளிலும் முன்னேற்றமான வாழ்வு பெறலாம்.

நவராத்திரி கோலங்கள்

நவராத்திரியில் கலைகள் வளர்கின்றன. கற்பனைகள் வளர்கின்றன. உற்சாகம் பிறக்கிறது என்றெல்லாம் பார்த்தோம். இந்த கற்பனையில் ஒரு வெளிப்பாடுதான் நவராத்திரியின் ஒவ்வொரு பெண்களும் பொறுமையோடு கொலு அலங்கரிப்பது. அந்த கொலுவுக்கு முன்னால் நவராத்திரி கோலம் போடுவது. கோலம் என்றாலே அழகு. கோலம் போடாமல் எந்த ஒரு பூஜையும் நாம் செய்ய முடியாது. நம்முடைய மனதின் அழகை அல்லது மனதின் கோலத்தை வெளிப்படுத்துகின்றது கோலம். இந்த வண்ணக் கோலத்தை நாம் அம்பிகையை எண்ணிப் போடுவதால் நம்முடைய திறன் வளர்வதோடு அவளுடைய அருளும் நமக்குக் கிடைக்கிறது.

பெண்களின் ஆற்றல் அளவிட...

கோலங்கள் என்பது அற்புதமானது. பெரும்பாலும் பெண்கள் தினமும் தெருவிலே கோலம் போடுகின்றார்கள். அது மஹாலஷ்மியை வரவேற்பது போலாகும். விடியலில்  கோலம் போடும் வீட்டில் மங்கள சக்திகள் நுழைகின்றன. விழாக்காலங்களிலும் கோலம் போடுகிறார்கள். நவராத்திரியிலும் கோலம் போடுகின்றார்கள். கோலம், மனதின் கோணல்களை மாற்றுகிறது. இந்த கோலத்தைப் போடவேண்டும் என்று மனதுதான் கற்பனை செய்கின்றது. அடுத்து அந்த  கற்பனை, இப்படி வண்ணத்தோடு போட்டால்  எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே படம் பிடிக்கிறது. மூன்றாவது  புள்ளிகளை இணைக்கக் கூடிய வளைவுகளும் கோடுகளும் ஒரு பெண், எத்தனை கவனத்தோடு, இந்த கோலத்தைப் போடுகின்றாள் என்பதைக் காட்டுகிறது.

இந்தப் பயிற்சி அவளுடைய மன ஒருமைப்பாட்டையும்,  கற்பனைத் திறனையும், படைப்பூக்கத்தையும்  நிதானத்தையும், புதியது கற்கும் ஆர்வத்தையும் அளவிடுகிறது. அதிகரிக்கிறது. ஒரு குடும்பத்துக்கு இவை முக்கியமான பயிற்சிகள் அல்லவா. அந்தப் பயிற்சிகளை மறைமுகமாக கொடுப்பது இந்த நவராத்திரி கோலங்கள். எனவே, தினசரி விதம்விதமான கோலத்தைப் போடுங்கள். அம்பிகையை நீங்கள் மகிழ்ச்சிப் படுத்துவது போலவே உங்கள் மனதையும் நீங்கள் மகிழ்ச்சி அடையச்செய்கின்றீர்கள். இந்த கோலத்தை பார்க்கின்ற பார்வையாளர்களையும் நீங்கள் மகிழ்ச்சி அடையச் செய்கிறீர்கள். இதன் மூலம் குடும்பம் குதூகலமாக இருக்கும்.

மங்களப்பொருட்கள் தர வேண்டிய முறை

ஒவ்வொரு நாளும் பூஜை முடிந்தவுடன் எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்து, வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு தாம்பூலத்தோடு மங்கலப் பொருள்களைத் தருகின்ற வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். நீங்கள் தயவு செய்து உங்களுக்கு யாரேனும் கொடுத்த ஒரு ரவிக்கைத்துண்டு அல்லது மஞ்சளை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். வேறு பரிசுப்பொருளாக இருந்தால் கொடுக்கலாம். பிரசாதத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மறந்துவிட வேண்டாம்.

இதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது. மலிவான விஷயமாகவோ, உபயோகம் இல்லாத ஒரு பொருளாகவோ யாருக்காவது தரலாம் என்றெல்லாம் நினைத்து, நீங்கள் எந்தப் பரிசுப்பொருளையும் தர வேண்டாம். நீங்கள் சுமங்கலிப் பொருள்களை தருகின்றபொழுது, இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. நீங்கள் எத்தனை பேருக்கு தருகின்றீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த மனநிலையில் தருகின்றீர்கள் என்பது முக்கியம்.

2. அந்தப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய தரத்தில் தரவேண்டும் என்பது அதைவிட முக்கியம். இதை மறந்து விட்டால், கடமைக்கான பூஜையாகத்  தான் இருக்குமே தவிர, கண்ணியமான பூஜையாக இருக்காது.

தாய் வழிபாடு

சக்தி வழிபாடுதான் தாய்வழிபாடு. அறு  சமயங்களில் “சாக்தம்” என்கின்ற சமயம் சக்தி வழிபாட்டின் பெருமையைச்  சொல்லுகின்றது. பழைய வேதகாலத்திலேயே சக்தி வழிபாடு இருந்துள்ளது. ரிக் வேதத்தில் உ ஷஸ் தேவதையைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அவள்தான் இந்த உலகுக்கு ஒளி  தருகின்றாள். இருளை அகற்றுகின்றாள். இதில் இருள் என்பது அறிவு குறைபாட்டையும், ஒளி என்பது ஞானத்தையும் குறிக்கும் சொல். கோடி சூரிய பிரகாசமாய் அவள் உலா வருவதாக ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவள் தான்

“வேதமாதா” என்றும் குறிப்பிடப்படுகின்றாள்.

முப்பெரும் தேவியர்களாக, இவளே பிரிந்து, முறையாக இந்நிலத்தை காப்பவள் என்று சொல்லப்படுகின்றாள். ஆகையினாலே இவளே கலைமகள், அலைமகள், மலைமகளாக இருக்கின்றாள். இதிகாசங்களான ஸ்ரீராமாயணத்திலும் மகாபாரதத்திலும் தேவி வழிபாடு குறித்து ஏராளமான தகவல்கள் உண்டு.

எல்லோருக்கும் உரிய நவராத்திரி

1. நவராத்திரி நாள் என்பது எல்லோருக்கும் உரிய நாள். ஏழை மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதற்காக மகாநவமி அன்று கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை வணங்குகின்றார்கள்.

2. தம்பதிகள் இணக்கமாக வாழவும் பல்வேறு உலகியல் பயன்  பெறவும் அம்பிகையை நவராத்திரியில் வணங்குகின்றார்கள்.

3. குழந்தைச்செல்வம் இல்லாதவர்கள், நவராத்திரி பூஜையை முறையாக முடிக்கும் பொழுது அவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படுகின்றது.

4.தொழில் வர்த்தகத்தில் உள்ளவர்கள் நல்ல லாபம் பெறுவதற்கு நவராத்திரியில் மகாலட்சுமியை வணங்கி, செல்வ வளத்தை பெருக்கிக்கொள்ளுகின்றார்கள்.

5. மனதில் தன்னம்பிக்கை வரவும், அச்சம் நீங்கவும், வீரம் பிறக்கவும், தைரியம் சிறக்கவும் துர்கா பூஜை உதவுகிறது.

6. கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை வைத்து ‘‘மகாநவமி” அன்று கலைமகளுக்கு சிறப்பான வழிபாடுகள் செய்கின்றார்கள்.

7. விவசாயிகள் தன, தான்ய விருத்தி ஏற்படவும், பசு விருத்தி ஏற்படவும் சரஸ்வதி பூஜையை ஆயுதபூஜை என்று கொண்டாடுகிறார்கள்.

சப்தமி, அஷ்டமி, நவமி

ஒன்பது நாட்களும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்கள் விரதமிருந்து அம்பிகையை வணங்கலாம்.

அதுவும் இயலாதவர்கள் அஷ்டமி தினத்தில் அவசியம் துர்க்கையை வணங்குவதன் மூலமாக பேரருள் பெறலாம். அஷ்டமி தினத்தில் அம்பிகையை வணங்குவதன் மூலமாக நம்முடைய எல்லா கஷ்டங்களும் தீரும். இந்த நாளில்தான் அனேக கோடி யோகினியருடன் தட்ச யாகத்தை அழிப்பதற்காக அம்பாள் துர்க்கையாக வீறு கொண்டு எழுந்தாள் என்று தேவி பாகவதம் தெரிவிக்கிறது.

குமாரி பூஜை  நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள். முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞ்சள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

தொகுப்பு: கோகுலகிருஷ்ணா

Related Stories: