தேவை, சுய தணிக்கை!

இஸ்லாமிய வாழ்வியல்

நம் மனதில் எத்தனையோ நிகழ்ச்சிகள் பசுமையாகப் பதிந்திருக்கின்றன. நாம் பிறந்த வளர்ந்த ஊர், இளம் பருவத்தில் செய்த குறும்புத்தனங்கள், பள்ளிப் பருவத்தின் சாதனை நாட்கள், கல்லூரியின் இனிய வசந்தங்கள், வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள், போராட்டங்கள், பிரச்னைகள்… இப்படிப் பல்வேறு நிகழ்ச்சிகளின் நினைவலைகள் நெஞ்சத்தில் வீசத்தான் செய்கின்றன.

கடந்த கால நிகழ்ச்சிகளை அவை சுவையானவை ... இருந்தாலும் சரி, சுமையானவையாக இருந்தாலும் சரி, நாம் அவ்வப்போது நினைத்துப் பார்க்கத் தவறுவதில்லை. ஆனால், இவை அனைத்துக்கும் மேலாக ஒரு முக்கியமான விஷயத்தை, நம் வாழ்க்கைக்கே அடிப்படையாக விளங்கும் ஒரு விஷயத்தை நம்மில் பெரும் பாலோர் நினைத்துப் பார்ப்பதே இல்லையே, அது ஏன்?

ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்து பதில் சொல்ல வேண்டும். ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு பத்து நிமிடமாவது நாம் மறுமையைப் பற்றிச் சிந்திக்கிறோமா? நாம் இறந்த பிறகு இறைவனின் நீதிமன்றத்தில் நிற்க வேண்டுமே? அதைப் பற்றிக்  கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றோமா? அனைத்துச் செயல்களும் வெட்ட வெளிச்சமாகி விடும் அந்த நாளில் நாம் எதையுமே மறைத்து வைக்க முடியாது.

இறைவனின் நீதிமன்றத்தில் நம்முடைய செயல்கள் துல்லியமாக ஆராயப்பட்டால்…? நாம் அழிவிலிருந்தும் தப்ப முடியுமா? நினைக்கும்போதே மேனியெல்லாம் நடுங்குகிறதே! ஈடேற்றம் பெற வழியே இல்லையா? உண்டு; நிச்சயமாக உண்டு. இதோ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்: ‘‘மறுமையில் உங்களிடம் கணக்கு கேட்கப்படுவதற்கு முன்னர் உலகில் உங்கள் கணக்கை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.’’

ஆம், உண்மைதான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறைநீதிமன்றத்தில் நிற்கப் போவது நிச்சயம். அதைத் தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால் அதற்கு முன்பே நம்முடைய செயல்களை நம் மனசாட்சியிடம் ஒப்படைத்து ஏன் சுய தணிக்கை செய்யக்கூடாது?

நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் மனசாட்சியைக் கொடுத்துள்ளான். ஏதேனும் கூடாத காரியத்தைச் செய்துவிட்டால் நம் மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதேசமயம் இறைவழிகாட்டுதலுக்கு ஏற்ப நாம் நடந்து கொண்டால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் பிறக்கின்றன.

எனவே, மறுமையில் இறைவனின் நீதிமன்றத்தில் நிற்பதற்கு முன்னால் நம் செயல்களை மனசாட்சியின் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். நம்முடைய கணக்கை நாமே பார்த்துக் கொள்வோம்.

- சிராஜூல் ஹஸன்

இந்த வார பிரார்த்தனை

‘‘இறைவா, மறுமையில் எங்கள் கேள்விக் கணக்கை எளிதாக்கி வைப்பாயாக’’ (அஹ்மத்).

Related Stories: