×

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்   “திருவருணை” ஸ்ரீ கிருஷ்ணா

?எனக்கு இப்போது 28 வயதாகிறது. வேலை மாற்றமே இருக்காதா? எல்லோரும் முன்னேறிக் கொண்டிருக்கும்போது நான் மட்டுமே தேங்கிய
குட்டைபோல் இருக்கிறேன் என்ன செய்வது?

- கணேஷ் குமரவேல், குடியாத்தம்.


நீங்கள் மிருக சீரிஷம் நட்சத்திரம், மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். மிருகசீரிஷம் போர்க் கிரகமான செவ்வாயை அதிபதியாகக் கொண்டது. புத்தி கிரகமான புதனை தலைவராக கொண்ட மிதுன ராசியில் இது இடம் பெறுகிறது. இதனால், தீயிலிட்ட தங்கம்போல, தன்னைத்தானே உருக்கி மெருகூட்டிக் கொள்வார்கள். அலுவலகத்தில் எப்போதுமே எதிலும் ஒரு அர்ப்பணிப்பு குணம் இருக்கும். பக்கத்து இருக்கை ஊழியரின் வேலையையும் அவ்வப்போது சேர்த்து பார்ப்பதுண்டு. முன்பின் தெரியாதவர்கள் அலுவலகத்திற்கு வந்து விழித்துக் கொண்டிருந்தால் தேடிச் சென்று உதவுவீர்கள். ‘‘ரொம்ப நல்லவர்தான் ஆனா மனசை நோகடிக்கற மாதிரி ஏதாவது சொல்லிடறாரு'' என்பார்கள். உங்கள் நட்சத்திர அதிபதியான செவ்வாய் மற்றவர்களை பதம் பார்க்க மறக்க மாட்டார்.

எவ்வளவுதான் திறமையோடு வேலைக்கு சென்றாலும் பளிச்சென்று வெற்றிகளும், முன்னேற்றமும் இருக்காது. ஒருமாதிரி போராடியே வெற்றி பெறுவீர்கள். அப்படியே வேலை நன்றாக இருந்தாலும் விரும்பிய சம்பளம் கிடைக்காது. 30 வயது வரைக்கும் அப்படியும், இப்படியுமாகத்தான் இருக்கும். முதல் முப்பது முடக்கினாலும் பின் முற்பது முன்னேற்றத்தை அளிக்கும். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூரில் அருளும் மகாலிங்கேஸ்வரர் தலத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள். முன்னேற்றம் வேகமெடுக்கும்.

?என் மகனுக்கு இப்போது 14 வயதாகின்றது? அவர் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம். இப்போது ஏதேனும் ஓரளவிற்கு என்ன படிக்கலாம் என்று சொல்ல முடியுமா?
 - சண்முக சுந்தரம். வேலூர்.


உங்கள் மகன் பூர நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். இனிமையான பேச்சும் எல்லோரையும் வசீகரிக்கும் திறமையும் பெற்றிருப்பார். ஏனெனில், நட்சத்திரத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் பள்ளியிலிருந்து கல்லூரி வரை எல்லாமே பெற்றோரின் ஆசைப்படி நடக்கும். முக்கியமாக படிக்கிறார்களோ இல்லையோ நல்ல கல்வி நிறுவனத்தில் படித்து வெளியே வருவார்கள். கல்வியைக் கூட கலையாகத்தான் பார்ப்பார்கள். இதனாலேயே மொழிப் பாடங்களில் அதீத ஆர்வத்தோடு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ‘‘படிச்சாதான் வாழ்க்கையா என்ன.

படிப்பைத்தாண்டி சாதிக்க நிறைய இருக்கு’’ என்பதை பள்ளியிறுதிக்குள்ளாகவே புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவார்கள். பூரம் நட்சத்திரத்தின் அதிபதியான சுக்கிரனும், ராசி அதிபதியாக வரும் சூரியனும் ஆள்வார்கள். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் இரட்டை சூரியச் சக்தியை தன்னிடத்தே கொண்டவர்கள். பிறந்ததிலிருந்து 19 வருடம் சுக்கிர தசை நடக்கும். சிறிய வயதில் துடுக்குச் சுக்கிரனாக இவர்களிடத்தில் சுக்கிரன் செயல்படுவார். ஒருவித பிரமிப்பை தன்னைச் சுற்றிலும் உருவாக்கியபடி இருப்பார்கள். இதனாலேயே மரியாதைக்குரிய மதிப்பெண்ணை எடுத்து விடுவார்கள். 19 வயதுக்குள் காதல் அரும்பி, உதிரும். இதனால் படிப்பில் தடை ஏற்படும். முக்கியமாக ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

ஏனெனில் பெரும்பாலான இந்த நட்சத்திரக்காரர்கள் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டு ப்ளஸ் டூவில் பாஸ் ஆனாலே போதுமென்று இருப்பார்கள். 20லிருந்து 25 வரை உங்கள் ராசிநாதனான சூரிய தசையே நடைபெறும். தேசத்திற்காக போராடும் ராணுவத்தில் வேலைக்கு சேர வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். கல்லூரியில் அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். மருத்துவத் துறையில் சாதிப்பதற்கும் வாய்ப்புண்டு. மேலே சொல்லப்பட்டவைகளுக்கு வாய்ப்புகள் அதிகம். எப்போதும் ஹயக்ரீவரை வணங்கச் சொல்லுங்கள். கனவு நனவாகும்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் கோயில்கள் தினகரன் ஆன்மிக மலா் 29, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப: palanmagazine@gmail.com பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக பெயா், பிறந்த ஊர், பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?