×

வெற்றி வாகை சூட வைக்கும் வாராஹி தேவி

வாராஹி நவராத்திரி 29-6-2022 முதல் 8-7-2022 வரை

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராஹி.மகாகாளி, தாருகாசுரனோடு போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி. சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். சிங்கமதை வாகனமாய்க் கொண்டு மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள், இந்த அம்பிகை. லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என  இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியம்(19/458) எட்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராஹமூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள்.
மந்த்ர சாஸ்த்ரம் அறிந்தவர்கள் பல்வேறு வடிவங்களில் இவளை வழிபடுகின்றனர்.

இந்த வாராஹி, லலிதா தேவியின் புரத்தின் 16வது பிராகாரமான மரகதமணியால் ஆன பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்த பிராகாரத்தின் வட கிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் சர்வாலங்காரங்களுடன் அருள்பவள் இத்தேவி. வடகிழக்குப் பகுதி என்பது ஆராதனைக்குரியது. அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றை தருவது. அப்படி வளம் கொடுக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாள் வாராஹி. அதனால் தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள்.

நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன. தந்திரராஜ தந்த்ரம் எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே அது இத்தேவியை வர்ணிக்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், ‘வாராஹி பித்ரு ரூபா’ என ஆமோதிக்கிறது. இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். ‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியைப் போற்றுகின்றார்.

காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள். என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராஹி காவல் தெய்வம். காலம் எனும் கடலில் நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள். வாராஹி உபாசனை உக்ர நரசிம்ம உபாசனையைப் போல் பயங்கரமானது என்று பாமரரிடையே எண்ணம் உள்ளது. வித்யா பூஜை முறையில் மஹாவாராஹியின் இடம் மிக மிக உயர்ந்தது. மஹாவாராஹியை ஏதோ பயங்கர தேவதையாகக் கருதுவது தகாதது. கருணைக்கடலான தேவி அவள்.

இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது, தன் பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற அனந்த கல்யாண குணங்கள் கொண்ட மனைவியாய் இவள் திகழ்வதை உணர்த்துகிறது. வலக்கரம் அபய முத்திரை காட்டி அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குகிறது. இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படிச் செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும் புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது.

ஆதி வாராஹி

நீலநிறம் கொண்டவள், சந்திரன், சூர்யன், அக்னி மூவரையும் த்ரிநேத்ரங்களாகக் கொண்டவள். தேவர்களாலும், மூவராலும் பணிவிடை செய்யப்படுபவள், சகல மாத்ருகா தேவதைகளும், சதுஷ்ஷஷ்டி கோடி பைரவர்களாலும் பாதுகாக்கப்படுபவள். சர்வாலங்கார பூஷிதையாக பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் சாத்திரங்களையும் அஸ்திரங்களையும் ஏந்தி கலப்பை உலக்கையுடன் காட்சி தருபவள்.

லகுவாராஹி எனும் உன்மத்த பைரவி

பக்தர்களின் துயரங்களைத் தீர்த்து அவர்களின் பயத்தை நீக்கியருள்பவள். அவர்களின் எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவரின்
அறிவுத்திறனை உன்மத்தமாக்குபவள்.  வாராஹியின் அங்கதேவி. திருமாலின் ஆத்மசக்தியாய் திகழ்ந்து கடலிலிருந்து பூமியை மூக்கின் நுனியில் சுமந்து வந்த மகாசக்தி. இத்தேவியை மிகப்
பெரிய கொம்புகள் கொண்ட சரீரமுடையவளாக தியானிக்க வேண்டும்.

பஞ்சமி

லலிதா த்ரிபுரசுந்தரியைத் தாங்கும் பஞ்சமூர்த்திகளில் சதாசிவனின் பத்தினி இந்த பஞ்சமி. அவருடன் இணைந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களைப் புரிபவள். சாலோக்யம், சாமிப்யம், சாருப்யம், சாயுஞ்யம், மற்றும் கைவல்யம் எனும் ஐந்து மோக்ஷ நிலைகளில் கடைசியதான கைவல்ய நிலையை அருள்பவள் இவளே.  பக்தர்களை தந்தையைப் போல் காப்பவள். மனிதனின் எலும்புக்கு அதிதேவதை இவள். எலும்புஉறுதியாக இருந்தால்தானே அதைச்சுற்றி ரத்தமும் சதையும் நன்றாக நிலைபெறும். பஞ்சமி பஞ்சபூதேசி என லலிதா ஸஹஸ்ரநாமம் இவளைத் துதிக்கிறது. அபிராமி பட்டரோ பஞ்சமி பைரவி பாசாங்குசை எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலில் இவளை போற்றி மகிழ்ந்தார்.

அஸ்வாரூடாவாராஹி

அபராஜிதம் எனும் யாராலும் வெல்லமுடியாத குதிரையின் மீதேறி வருபவள் அஸ்வாரூடா வாராஹி. இவள் லலிதாபரமேஸ்வரியின் குதிரைப்படைத்தலைவி. ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தி, மறு கரத்தில் பாசம், மற்றொரு கரத்தில் அங்குசம், மேலுமொரு கரத்தில் சாட்டை ஏந்தி பறக்கும் கூந்தலுடன் கருணை மழை பொழியும் கண்களுடன், சர்வாலங்கார பூஷிதையாய் இவளை தியானம் செய்தால் கிட்டாததுதான் ஏது?

அம்பிகையை குதிரை மேலும் யானைமேலும் ஆரோகணித்து வரும்படி வழிபாடு செய்கிறோம். குதிரையும் யானையும் எங்கோ காடுகளில் இல்லை. மனம் குதிரையாகவும். மதம் எனும் அகங்காரம் யானையாகவும் நம்மிடையே  இருக்கிறது. இந்த இரண்டையும் நம் வசப்படுத்தினால் எவ்வளவோ நல்ல காரியங்களை நாம் சாதிக்கலாம். இந்த இரு மிருகங்களைத் தவிர கோபம், மோகம், லோபம், ஆச்சர்யம் போன்றவையும் நம் மனதில் இருந்து வருகின்றன. அவைகளை வேட்டையாடிக் கொல்ல வேண்டும். அதற்கு அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அளிக்க வேடுவ, வேடுவச்சியாக வந்த சிவபார்வதியரே அருளவேண்டும். இந்தப் பொருள் வரும்படியான ஸ்லோகத்தை ஆதிசங்கரர் தன் சிவானந்தலஹரி 43ம் ஸ்லோகமான மாகச் ச என்பதில் கூறியிருக்கிறார்.  என் மனதில் உள்ள காமக்ரோதாதி குணங்களை வேட்டையாட நீதான் வர வேண்டும். அவைகளை வதம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

உலக சம்சாரபந்தத்திலிருந்து குடும்பத்தை தர்மமார்க்கத்தில் நடத்த அஸ்வாரூடாவின் ஆசி பெற்று நான் எனும் மமதையை அழித்து பழக்கப்பட்ட யானையைப் போல் ஸம்பத்கரி தேவியின்  அருளால் இந்த உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு அதை ஆட்டிப்படைக்கும் இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்தி சத்சங்கத்தாரோடுசேர்ந்து வாராஹி தயவால் கர்மாக்களை ஒழுங்காகச் செய்து  அம்பிகையின் அருளைப் பெற வேண்டு என்பதே இந்த யானை, குதிரைகளின் தத்துவம்.

ஸ்வப்ன வாராஹி

கருநிறமேக நிறங்கொண்டவள். முக்கண்கள், வராஹமுகம் கொண்டவள், புன்னகை பூத்த முகத்தினள், கத்தி, கேடயம், பாசாங்குசம் ஏந்தியவள். உலகை உய்விக்க குதிரையில் ஏறி வருபவள் என மந்த்ரமஹோததி எனும் நூலும், தத்வநிதி எனும் நூலும் இத்தேவியை போற்றிப்பணிகின்றன. இத்தேவியின் மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்று ஜபித்து வந்தால் அவர்களின் கனவில் தேவி தோன்றி நற்பலன்களை உரைப்பாள்.

கோர்ட், வழக்கு என அலைந்து கொண்டிருப்பவர்கள் இத்தேவியை வழிபட சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை. ராஜராஜசோழன் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வாராஹியை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பது வழக்கம். வாராஹியை வெற்றி தெய்வம் என்றே போற்றினார் அவர்.காசியில் பாதாள வாராஹியாகவும், திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி வடிவில் மகாவாராஹியாகவும், உத்ரமேரூரில் மஹா

வாராஹியாகவும், பள்ளூரில் அரசாலை அம்மனாகவும், தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் ஆதி வாராஹியாகவும், இலுப்பைக்குடியில் ஸிம்ஹாரூடாவாகவும், பூந்தமல்லியில் மஹிஷாரூடாவாகவும், நார்த்தாமலையில் ஆதிவாராஹியாகவும்  தேவி அருள்கிறாள். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட கோரிய பலன் கிட்டுவது உறுதி.

மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும் மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம் என்கிற வாராஹி யந்த்ரம்.உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரணி, கிரிபதா ஆகியோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாக அருள்கின்றனர்.

இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது.

வாராஹியைக் குறித்த வாராஹி மாலை எனும் தமிழ் துதியும் நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் எனும் வடமொழி துதிகளும் புகழ் பெற்றவை.
‘கோலாம்பா’ என்றும் வாராஹி தேவியை அழைத்து வழிபடுவோர் உண்டு. பூமியைமறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி, வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார்.

அறுபது கோடி வாராஹி கன்னிகைகள் இவள் பரிவார தேவதைகளாக ஏவல் புரிவதை  ‘தேவிசஷ்டி கோடி பிர்வ்ருதா’ எனும் திருநாமம் உணர்த்துகிறது. அதீத வீர்யம் கொண்டவள் என்பதை ‘வீர்யவதி’ என்ற நாமம் குறிக்கிறது.  வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் உதவும்.

எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். மயில் தோகை விசிறியால் விசிறி, பிரார்த்தனை செய்து முறுக்கும் வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, அந்த மூடிகளில் நெய் ஊற்றி விளக்கேற்ற, கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம். ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும் வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி, வழிபட நம் துயர்கள் தூசாய்ப் பறக்கும்.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே. இரவு அர்த்தஜாம பூஜையின் போது அகிலாண்டேஸ்வரியின் திருமுகம் வாராஹியைப் போல் தோற்றமளிப்பதாக பக்தர்கள் கூறுவதுண்டு.  அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறு துதிகளால் அன்னையை வழிபடலாம். வாராஹி மந்திரத்தில் வார்த்தாலீ, வாராஹி, வராஹமுகீ, அந்தினீ, ருந்தினீ, ஜம்பினீ, மோஹினீ, ஸ்தம்பினீ போன்ற எட்டு தேவதைகளும் அடங்கியுள்ளனர்.

காசி-த்ரிபுரபைரவி காட் அருகில் முன்பு பாதாள பைரவி என்று வணங்கப்பட்ட வாராஹி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சை பெரிய கோயில் வாராஹி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களேஸ்வரர் ஆலயம் அருகில் அருளும் வாராஹி, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலய வாராஹி, சென்னை - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலய வாராஹி, ஆந்திரா - பிரொடத்தூர் ராமலிங்கேஸ்வரர் ஆலய வாராஹி, பூரி ஜகன்நாதர் ஆலயம் அருகில் வாராஹி தெருவில் வீற்றிருக்கும் வாராஹி என நாடு நெடுக கோயில் கொண்டு அன்னை வாராஹி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள்.

பாவனோபநிஷத் குறிப்பிடும் லலிதையின் தாயாக குறிப்பிடப்படும் குருகுல்லாவிற்கும், தந்தையாக குறிப்பிடும் வாராஹிக்கும்  புவனேஸ்வருக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள கொரகொரா எனும் சிற்றூரில் தனிக் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி நம் பாதக மலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்.

ஜெயலட்சுமி

Tags : Varahi Devi ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி