கடம்பாடி சின்னம்மன்

ஜமதக்னி முனிவர் தன் மகனான பரசுராமரை ஆரத் தழுவிக் கொண்டார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதால் தன் அன்னையின் தலையையே கொய்து விட்டு நமஸ்கரித்து நிமிர்ந்தார். மெல்ல தலை தாழ்த்தி தந்தையைப் பார்க்க ஜமதக்னி முனிவர் என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். அந்தக் காரிருளில் தன் மகன் என்ன கேட்பான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தந்தை கேட்டவுடன் கொடுத்து விடுவார் என்பதை பரசுராமரும் புரிந்து வைத்திருந்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து மாபெரும் சக்தியை பூவுலகத்திற்கு கொண்டுவர முடிவு செய்திருந்தனர். சக்தி எனும் மகாசக்தியை உலகம் முழுவதும் பொங்கி எழச் செய்தனர். அதற்கான அச்சாரமாய் பரசுராமர் தன் தந்தையின் முன்பு கைகூப்பி மென்மையான குரலில் பேச ஆரம்பித்தார்.‘‘தாங்கள் கட்டளையிட்டபடி என் தாயின் சிரம் கொய்து வீசி விட்டு வந்திருக்கிறேன். இப்போது தாங்கள் என்ன வேண்டுமானாலும் கேள் என்று கேட்டபடி கேட்கிறேன், என் தாய் எனக்கு வேண்டும். வெட்டுண்ட தலைகள் இணைய வேண்டும்’’ என்று அடக்கமாய் கேட்டுவிட்டு அமைதியாய் நின்றார்.

ஜமதக்னி கண்கள் மூடினார். மகாசக்தி பூவுலகத்தை மையமாக்கி, பரசுராமர் போன்ற மகத்தான ரிஷிகளால் தான் பரவவேண்டும் என காத்திருப்பது பார்த்து ஜமதக்னி மகிழ்ந்தார். ‘‘போ...உன் தாயின் சிரசையும், உடலையும் ஒன்று சேர். அவள் உயிரோடு எழுவாள்’’ என்றார். பரசுராமர் அந்த இருட்டில் தன் தாயின் சிரசை கையில் தாங்கினார். கைகளால் துழாவி உடலை எடுத்து இணைத்தார். மெல்ல நிலவொளியில் பார்க்க அதிர்ந்தார். தன் தாயின் சிரசும், வேறொரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர் பெற்றிருந்தது. மகாசக்தி தான் எளிமையாக எல்லாவிடத்திலும் அமர திருவுளங் கொண்டாள். பரசுராமர் மகாசக்தியின் அருளில் நனைந்தெழுந்தார். அவள் நானிலமெங்கும் பல்கிப் பெருகினாள். சற்று நிதானித்து அந்த மாமல்லபுரம் எனும் கடற்கரையை ஒட்டிய கிராமத்திற்குள் நுழைந்தாள். பச்சைப் பசேலென சிலிர்த்திருக்கும் வேப்பமரத்தினடியே

அமர்ந்தாள். புற்றாய் பொங்கினாள்.

பரப்பிரம்ம சக்தியாக இருந்தது. ஆணுமல்லாது, பெண்ணுமல்லாது அருவுருவாய் இருந்தது. தான் ஒரு உருவோடு வெளிப்பட வேண்டுமே என சங்கல்பித்துக் கொண்டது. மெல்ல பெண்ணுருவாய் தன்னை மாற்றிக் கொண்டது. ஊர் பெரியவரின் கனவில் தான் வேப்பமர புற்றுக்குள் இருப்பதாக சொல்லி மறைந்தாள். மெல்ல ஊராரின் எல்லோர் கனவிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.கோயிலின் முன் மண்டபமும், கருவறையும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பல மாபெரும் மன்னர்கள் தலைதாழ்த்தி பணிவாய் அம்மனின் அருளை பருகிச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதே உயிர்ப்போடு விளங்குகிறாள். சின்னம்மனின் சந்நதி மிகுந்த அதிர்வுகள் நிறைந்து வலிமையான சாந்நித்தியத்தோடு நிலை கொண்டுள்ளாள். கோயிலின் இடதுபுறம் பெரிய குளமும் வருடாவருடம் தெப்ப ஓட்டமும், தீமிதி திருவிழாவும் மிக விமரிசையாக நடைபெறுகிறது. சின்னம்மனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். வந்து தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வை பவித்ரமாக்குவாள். அன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும்  பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் பெரியவள், அதுமட்டுமல்லாது முதன்மையானவள்.சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் மாமல்லபுரத்திற்கு 10 கி.மீ. தொலைவில் இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள். சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்.  

 

 - திவ்யா

Related Stories: