×

இந்த வார விசேஷங்கள்

23.5.2022 - திங்கட்கிழமை   சதாசிவாஷ்டமி

கால பைரவருக்கும் சிவபெருமானுக்கும் உகந்த திதி தேய்பிறை அஷ்டமி திதி. இந்நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்தமன காலத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்தில் வரும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும்  ஒரு பெயர் உண்டு. ஒரு பலன் உண்டு.வைகாசி  தேய்பிறை அஷ்டமி சதா சிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. காலபைரவரையும் தட்சிணா மூர்த்தியையும் வணங்க வேண்டிய நல்ல நாள்.  பைரவர் நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். எனவேதான் பைரவரை வழிபடுவதன் மூலம் சனியின் சங்கட பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற் பலன்களாக மாற்றிவிட முடியும். இன்றைய தினம் மாலையில் விளக்கேற்றி பைரவரை வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கும் கடன் தொல்லைகள் அகலும்.

25.5.2022 - புதன்கிழமை  தத்த ஜெயந்தி

இன்று வைகாசி தேய்பிறை தசமி திதி.தத்தாத்ரேய ஜெயந்தி என்றும் அழைக்கப் படும் தத்தாத்ரேயரின் அவதார தினம் ஆகும். சில இடங்களில் குறிப்பாக மகாராஷ்டிராவில் மார்கழி மாதத்தின் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் ஒருங்கிணைந்த வடிவமாகும்.தத்தாத்ரேயா முனிவர் அத்திரி மற்றும் அவரது மனைவி அனுசூயாவின் பிள்ளை யாவார். தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

26.5.2022 - வியாழக்கிழமை  வரூதினி ஏகாதசி

இது வைகாசி தேய்பிறை ஏகாதசி.அருமையான குரு வாரத்தில்,ரேவதி நட்ஷத்திரத்தில் வருவது சிறப்பு. ரேவதி புதனுக்குரியது. புதன் என்றாலே பெருமாள் தானே. இந்த ஏகாதசி விரதம் பல சிறப்புக்கள் உடையது. ஒருவன் உயர்வு பெறுவதற்கு இரண்டு வழிகளைச் சாத்திரம் காட்டுகின்றது. அதில் ஒன்று தவம் செய்வது. இன்னொன்று தானம் செய்வது. தானங்களில் எது உயர்ந்தது என்பது குறித்து பல வரையறைகள் உண்டு. சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம். மற்ற தானத்தில் போதும் என்று சொல்ல மனம் வராது. ஆனால் அன்னதானம் “போதும், போதும்” என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்ட அன்னதானத்தை மேற்கொள்வதற்கு இணையான பலனை ஏதாவது ஒரு விரதம் நமக்கு கொடுக்கிறதா என்று ஆராய்ந்த பொழுது “வரூதினி ஏகாதசி விரதம்” அத்தகைய பலனை நமக்கு அருளும். ஒருவன் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்றால் , அவனுக்கு ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏகாதசியின் பெருமையை ஒருவர் படித்தாலும், யாரையாவது படிக்க வைத்து கேட்டாலும், அவர் ஆயிரம் பசுக்களை  தானம் செய்த  பலனை அடைந்து விடுவார் என்பது நிச்சயம்.

27.5.2022 - வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

இன்று மகாலட்சுமிக்குரிய  வெள்ளிக்கிழமை. முழுவதும் அசுவினி நட்சத்திர நாள். ஞான விஷயங்களையும்  பக்தி  விஷயங்களையும் அனுஷ்டிக்க  உகந்த நாள்.
துவாதசி திதி. மாலை பிரதோஷ வேளையில் நரசிம்ம மூர்த்தியை வணங்க வேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்று நந்தி பகவானையும் சிவனையும் அம்பாளையும் வணங்க வேண்டும். பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி