சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாசலத்தை கிரிவலம் செய்ய லட்சக் கணக்கில் மக்கள் திரளுவார்கள். அவர்களோடு தேவர்களும், சித்தர்களும், ஞானிகளும் சூட்சுமமாக மலையை வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம்.ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடக்கும் சக்தி பூஜையில் பூசாரிகள் சாமியாடி இரண்டு வாள்களை குடத்தின் மீது வைத்து அந்தரத்திலும் நிறுத்துவார்கள். இதை அலகு பூஜை என்கிறார்கள்.
சித்ரா பௌர்ணமியன்று காஞ்சி வரதனை பிரம்மதேவன் பூஜிப்பார். பிரம்மன் வரதனுக்கு நிவேதிக்கும் பிரசாதம் கமகமவென மணம் வீசுமாம். உண்ட திருப்தியை
வரதனின் வதனத்தில் காணலாம் என்கிறார்கள் பட்டர்கள். சித்ரா பௌர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண்சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் தாண்டவமாடுமாம். சித்ரா பௌர்ணமியன்று பூமியிலிருந்து தோன்றும் பூமிநாதம் எனும் உப்பு நோய்களைத் தீர்க்கும் என்றார்கள், சித்தர்கள். ஆகவே அச்சமயத்தில் கிரிவலம் செய்வது உடல் நலத்துக்கு உகந்தது என்பார்கள். ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் சாத்துமுறை, சித்ரகுப்தர் திருக்கல்யாணம், ஸ்ரீ ரங்கத்தில் கஜேந்திர மோட்ச சேவை ஆகியவை சித்ரா பௌர்ணமி அன்று அமோகமாக கொண்டாடப்படும் வைபவங்கள்.சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடுவதால் கடலில் நீராடுதல் நன்று. இது கர்ம வினைகளை அறுக்கும் என்பது சித்தர்களின் திண்ணமான வாக்கு.தேனி மாவட்டத்தை அடுத்து, தமிழக - கேரள எல்லையில், ஐயாயிரம் அடி உயரமான மலைமீது மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இது சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும். சித்திரை மாதத்தில் பௌர்ணமியாக வரும் நிலவை மட்டுமே முழு நிலவு என்பது மரபு.யமனின் கணக்காளரான சித்திரகுப்தருக்குரிய நாளாகவும் சித்ரா பௌர்ணமி போற்றப்படுகிறது.திருக்குற்றால மலை மீதுள்ள சித்ரா நதி உற்பத்தியானது இதே நாளில்தான்.சித்ரா பௌர்ணமி அன்றுதான் மதுரை சோமசுந்தரப் பெருமானை தேவேந்திரன்பொற்றாமரை மலர்களால் அர்ச்சித்தான். கி.பி.985-1013ல் சோழமன்னன் சித்ரா பௌர்ணமி தினத்தில் அன்னதானம் செய்ய அறக்கட்டளை ஏற்படுத்தியிருந்ததாக திருச்சி மலைக்கோட்டை கல்வெட்டு தெரிவிக்கிறது.உளுந்தூர்பேட்டைக்கு அருகே கூவாகத்தில் அரவான் களபலி உற்சவம் திருநங்கைகளால் சித்ரா பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திருநங்கைகள், இந்நாளில் கூவாகத்தில் ஒன்று திரளுவர். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் செய்யும் வைபவம் நடக்கிறது.பொதுவாகவே பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் ஒரே சமயத்தில் சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் நிகழ்வதைக் காண்பது ஆனந்தம் தரும். அதையே சித்ரா பௌர்ணமி அன்று காண்பது பேரானந்தம். - அனந்த பத்மநாபன்