×

இந்த வார ஆன்மீக விசேஷங்கள்

9.4.2022- சனிக்கிழமை - அசோகாஷ்டமி
சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்  சோலையிலே சிறை வைத்தான் இராவணன். குளிர்ந்த அந்த மலர் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் இராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப்  போக்குவதற்காக , இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து ,அவளைச்  சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த   மரம். சீதையின் தாபத்தையும்  சோகத்தையும்  தணித்த அந்த மரம் அசோகமரம். (சோகத்தைத்  தணித்த மரம்)

அந்த மரம் எப்படியாவது இராமன் வந்து சீதையை மீட்டுச்  செல்ல வேண்டும் என்று  பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது.

சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோக மரங்களை நோக்கி, “ என்ன வரம் வேண்டும்?” என கேட்டார்.“அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும்  வரக்கூடாது. “ எனக்கேட்க, சீதாதேவியும் “மருதாணிமரங்களான(அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு ) உங்களை யார் ஜலம் விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று  வரமளித்தாள்.ஆகவே தான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அறைத்து கைகளில் பூசிக் கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த  நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும்.பங்குனி மாத அமாவாசை யிலிருந்து எட் டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

10.4.2022 ஞாயிறு முனையாடுவார் நாயனார் குருபூசை
முனையடுவார் நாயனார்  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். 'அறை கொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.சிவபெருமான் திருவடியில்  பேரன் புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வத்தை  சிவனடி யார்க்கு கொடுத்து மனம் நிறைபவர். 'போர் முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும்பேறாம்.' என்ற சிந்தை உடை யவர்.வாய்மை உடையவர்;  போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார் களுக்குச் செல்வமும் உணவும் தந்து உபசரிப்பவர்.
முனையடுவார் நாயனார் நெடுங்காலம் சிவனடியார்களுக்கான தொண்டு  புரிந்திருந்து உமை யொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.முனையடுவார் நாயனார் குருபூசை நாள்; பங்குனிப் பூசம்(10.4.2022)

10.4.2022 -ஞாயிறு -ஸ்ரீராமநவமி
பகவானின்  அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புபூஜைகள் நடைபெறும்.  அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும் . மேலும் பல கோயில்களில், ராம பஜனைகள் நடைபெறும். ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம் . வீட்டில் ஸ்ரீராமநவமி  தினத்தில் வாசல், பூஜை அறை  சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.சுவாமிக்கு நிவேதனமாக  நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

12.4.2022- செவ்வாய்க்கிழமை - காமத ஏகாதசி

ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும்.  25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வோர் ஏகாதசிக்கும்  தனிச் சிறப்பும் பலன்களும் உண்டு . அவ்வாறு சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி “காமதா ஏகாதசி” என்று போற்றப்படுகிறது.காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி. இந்த ஏகாதசி பலனை புரிந்து கொள்வதற்கு ஒரு கதை உண்டு.
ஒருகாலத்தில் நாகலோகத்தில் போகீபூர் என்னும் நகரத்தை புண்டரீகன் என்கிற நாகராஜன் ஆட்சி செய்து வந்தான். அங்கு தன் விருப்பப்படி தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு வாழக்கூடிய அப்சரஸ்கள்   இருந்தனர். லலிதன்  என்ற கந்தர்வனும் லலிதா என்கின்ற அப்சரஸ் பெண்ணும்  இணைந்து வாழ்ந்து வந்தனர்.லலிதன்  கந்தர்வ கானத்தில் சிறந்தவன். அவன் நாகராஜன் சபைக்குச் சென்று பாடினான்.அவருடைய பாட்டு அற்புதமாக இருந்தது. ஆனால் திடீரென்று அவனுடைய எண்ணம் தன் மனைவியான லலிதாவின் மீது செல்லும் பொழுது கவனக்குறைவாக பாட்டில் ஸ்வரம் பிசகி தாளம் தட்டியது.

புண்டரீகன் உடனடியாக மிகுந்த கோபம் கொண்டு' நீ காம பரவசனாகி , சங்கீதத்தை அவமதித்து விட்டாய். எனவே நீ அரக்கனாக போகவேண்டும்' என்று சபித்துவிட்டான்.
உடனே லலிதனுக்கு அரக்க உருவம் உண்டாகிவிட்டது. அவருடைய வாய் மிகவும் மோசமான முறையில் கோர வடிவம் கொண்டதாக ஆகிவிட்டது. மிகுந்த துயரத்தை அடைந்தான். இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட லலிதா ஓடிவந்தாள். தன் கணவனுக்கு நேர்ந்த சோதனையைக்  கேட்டு வருந்தினாள். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்பதை முனிவர்களிடம் கேட்கலாம் என்று காட்டுக்குச் சென்றாள் .

அங்கே சிருங்கி முனிவரைப்  பார்த்து நடந்த செய்திகளைச் சொல்லி, இதற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று கேட்க அந்த முனிவர் சொன்னார்: ' சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசியில்  விரதமிருந்து முறையாக எம்பெருமானைப் பாடி, துவாதசியில் அந்தணர்களை அழைத்து தானம் செய்து, அவர்கள் முன்னிலையில் ஏகாதசி  பலனை உன் கணவனுக்கு பிராயச் சித்தமாக தத்தம் செய்து கொடுத்தால் , அவன் பழைய உருவத்தில் மீண்டு வரு வான்' என்று சொல்ல, அப்படியே அவள் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தாள் .

ஏகாதசி விரதம் ஆரம்பித்து, ஏகாதசி முழுக்க எதுவும் உண்ணாமல், எம்பெருமானை நினைத்து, அவருடைய மந்திரங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாள் . இரவெல்லாம் கண்விழித்து எம்பெருமானைப் பாடினாள் . மறுநாள் அந்தணர்களை அழைத்து ஏகாதசி உபவாசத்தின் பலனை கணவரின் “சாப நிவர்த்திக்காக அர்ப்பணம் செய்கிறேன்” என்று சங்கல்பம் செய்து அர்ப்பணித்தாள் . அடுத்த நிமிடம் ,கணவனுடைய கோர அரக்க உருவம் நீங்கி பேரழகனாக மாறி னான். ஒரு தங்க விமானம் வர, அதில் ஏறிக்கொண்டு அவர்கள் மகிழ்வுடன் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். எந்த தோஷத்தையும் நீக்கி  மங்கலங் களை செய்யக் கூடியது இந்த காமதா ஏகாதசி என்பது இதில் இருந்து தெரி கிறது.

14.4.2022-வியாழக்கிழமை -சித்திரை பிறப்பு
12 மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறப்பு தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறோம்.பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.
வானியல் கணக்குப்படி மேஷ ராசியில் ,அசுவனி விண்மீனின் முதல் பாகையில் நுழையும் தினம் இது.நாம் மட்டுமல்ல,கேரளா, மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையை  புத்தாண்டாக ஏற்றுள்ளன. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரை புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன.

பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் 'தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை' என்றும், பழமொழி நானூறு 'கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்' என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.
சித்திரை மாதத்தின் முதல் நாளில், அனேகமாக, சைவ வைணவ வேற்றுமை இல்லாது, எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லாக்  கோயில்களிலும் அன்று “பஞ்சாங்க படனம்” என்று நடத்துவார்கள். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு.

பஞ்சாங்கம் என்பது அன்றைய திதி, நட்சத்திரம்,நாள்(வாரம்),யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப்  படிப்பது. இதில் திதியைச்  சொல்வதன் மூலமாக மகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச்  சொல்வதன் மூலமாக பாவங் களிலிருந்து விடுதலையும், நாளைச்  சொல்வதினால் ஆயுள் விருத்தியும்,  யோகத்தைச் சொல்வதினாலே நோயிலிருந்து விடுதலையும், கரணத்தைச் சொல்வதால்  செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியான செவ்வாய்க் கிழமையன்று, வீட்டில் விளக்கேற்றுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை  மனதாரப் பிரார்த் தனை செய்யுங்கள்.
புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் . சர்க்கரைப் பொங்கலோ பாயசமோ நைவேத்தியமாகப் படையலிட்டு வேண்டிக் கொள் ளுங்கள்.அறுசுவை பச்சடி, வடை, பாயசம் வைத்து மகிழ்ச்சியோடு கொண்டா டுங்கள்.இந்த மகிழ்ச்சி ஆண்டு முழுதும் நீடிக்க வேண்டும்.இந்த நேர்மறை சிந்தனையோடு தமிழ் புத்தாண்டு கொண்டாட, குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். சகல செல்வங்களும் குடிகொள்ளும்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி