நிலப்பிரச்னை தீர்க்கும் பூமீஸ்வரர்

விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி எல்லையாகவும், புதுச்சேரி மாநிலம், செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது மரக்காணம். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கருங்கற்கலைக் கொண்டு கற்றளி முறையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில். இக்கோயிலின் வடக்கு புரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கற்களைகொண்டு கட்டப்பட்ட பெரியகுளம் உள்ளது. இப்பகுதி பண்டைய காலத்தில் எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது. எயிர் என்றால் அரண் என்று பொருள் ஆகும். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகபட்டினமாக திகழ்ந்துள்ளது. அதன் பிறகு ஒய்மா நாட்டு நல்லியகோடன் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது. அந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கல் கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.

 

 இங்கு அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்ககோயில் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலை கட்டியுள்ளனர். அப்போது இந்த ஊர் ஒய்மா நாட்டு பட்டினநாட்டு பட்டனமான மரக்காணம் என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜேந்திரசோழன் காலத்தில் ஒய்மா நாட்டு பட்டன நாட்டு பட்டனம் என அழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க மன்னர் காலத்தில் மீண்டும் எயிர்பட்டினம் என அழைத்துள்ளனர். அதன் பிறகு விஜயராஜமன்னன் கம்பண்ண உடையார் ஆட்சியின் போது மரக்காணம் என பெயர் மாற்றி அழைத்துள்ளனர்.

 இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். இத்தனை வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலின் தெற்குபுரத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பக்கம் விஷ்ணு சிலையும், வடக்குபக்கம் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது. இது போல் இந்த கோயிலை தினமும் வந்து தரிசனம் செய்தால் நிலம் சம்மந்தமான பிரச்னைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்மந்தமான கோயில் என்பதால் பூமீஈஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இங்குள்ள சிவலிங்கம் தான்தோன்றி லிங்கம் என்று கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு கூறப்படும் சிறப்புக்கள் ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு வந்து இங்கு இருக்கும் சிவனை வணங்கிவிட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்னை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.

 கோயிலின் உட்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், காலபைரவர், முருகப்பெருமான் சித்தி வினாயகரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் எதிர் புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடிமரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர்புறம் சூரியன், சந்திரன் இணைந்த நிலையில் தனியாக சிறிய கோயிலும் அழைந்துள்ளது. இந்த சிற்பங்கள் தற்போதும் சிறிதுகூட சேதம் அடையாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. இந்த கோயிலில் மாதம் இரண்டு முறை பிரதோஷ விழா நடத்துகின்றனர். இந்த பிரதோஷ விழாவில் மரக்காணம், புதுவை, சென்னை, செங்கல்பட்டு போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் மாழ்கழி மாதத்தில் நடத்தப்படும் ஆருத்ரா விழாவும் மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

செல்வது எப்படி?

புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் பூமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது.

Related Stories: