சென்னை: வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிக்க, கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ள படம், ‘ஜோரா கைய தட்டுங்க’. இதை ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ வினீஷ் மில்லினியம் எழுதி இயக்கியுள்ளார். மேஜிக் நிபுணரின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை கொண்ட இதில் ஹரீஸ் பெராடி, ‘விக்ரம்’ வசந்தி நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி, இசை. மது அம்பாட், ஒளிப்பதிவு. வரும் 16ம் தேதி ரிலீஸ். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, தனஞ்செயன் கலந்துகொண்டனர். அப்போது யோகி பாபு பேசியதாவது: என் சம்பளம் எனக்கு தெரியாது. அதை நான் முடிவு செய்வதில்லை. மற்றவர்களே முடிவு செய்கின்றனர். சம்பளத்தை முடிவு செய்பவர்கள், நான் நடித்த பிறகு அதை சரியாக கொடுத்தாலே போதும். அதை கேட்டால் எதிரியாகி விடுகிறோம். எனது அசிஸ்டெண்ட் ஒருவர் ஹீரோவாக நடிப்பதாக சொன்னார்.
அதில் நான் இரண்டு நாட்கள் நடிக்க வேண்டும் கேட்டார். அந்த படத்தின் புரமோஷனுக்கு நான் 7 லட்ச ரூபாய் கேட்டதாக சொல்கின்றனர். எனக்கு எவ்வளவு பேர் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? பெரிய பட்டியலே இருக்கிறது. அதை நீங்கள் வசூலித்து தருகிறீர்களா? எதுவும் தெரியாமல் என்னை பற்றி தவறாக பேசாதீர்கள். நான் காமெடியாக நடிக்க வாங்கும் சம்பளத்தை விட, கதாநாயகனாக நடிக்க குறைவாக வாங்க வேண்டும் என்று தனஞ்செயன் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னபடி என் சம்பளத்தை குறைக்க தயார். அவரே எனக்கு சம்பளத்தை வாங்கி கொடுக்கட்டும்.