×

முத்துக்கள் முப்பது-தை பிறந்தால் வழி பிறக்கும்

1. தை, சித்திரை மாதப்பிறப்பு

12 தமிழ் மாதங்களில், மாதப் பிறப்பை  சிறப்பாக கொண்டாடப்படும்படியான மாதங்கள் இரண்டு. ஒன்று சித்திரை மாதம். தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அடுத்து தை மாதம். தைத்திருநாள் உலகம் முழுக்க பொங்கல் திருநாளாகக்  கொண்டாடப்படுகிறது. சித்திரை,தை இரண்டு மாதங்களின் பிறப்பும், பண்டிகைகளாகக் கொண்டாடப்பட்டாலும், தை மாதப்பிறப்பு ஒட்டிய பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாக தொடர்ந்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தை பொறந்தா வழி பொறக்கும்

தை திருநாள் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை சொல்லும் பாடல் இது. அந்தப் பண்டிகையின் சிறப்பை மிக எளிமையாக விளக்குகிறது. ஒரு விவசாயியின் வேலைகளை படம் பிடித்துக்காட்டுகிறது.

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே
தங்கம் (தை)ஆடியிலே வெத வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே
தங்கம்

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனி யெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம் (தை)
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணிக்கைகளிலே தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம் (தை)

முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் (தை)
1958ம் வருடம் வந்த “தை பிறந்தால் வழி பிறக்கும்”
படத்தில் அ.மருதகாசி இந்த பாடலை இயற்றியிருக்கிறார்.

3. மகர சங்கராந்தி

தை முதல் நாளன்று சூரியன் மகர ராசிக்குள்  நுழையும் நேரம் மிக முக்கியமானதாகக்  கருதப்படுகின்றது. இதை “மகர சங்கராந்தி” என்று கொண்டாடுகிறார்கள். சங்கராந்தி என்றால் சங்கமித்தல். ‘‘அந்தி” என்பது ஒரு மாதத்தின் முடிவில், மற்றொரு மாதத்தின் தொடக்கம் வரும் காலம். மார்கழி மாதத்தில் முடிவும், தை மாதத்தின் தொடக்கமும் நிகழும் நாளை, மகர சங்கராந்தி என்று சொல்லுகிறோம். ஆகம விதிகளின்படி, இது புனிதமான நாள் என்பதால், எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வைணவ ஆகமத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும், பெருமாளுக்கு ஒரு பெயரும் உருவமும் உண்டு. தை மாதத்திற்கு உரிய தேவதை நாராயணன். நிறம் நீலம். ஆயுதம் 4 சங்குகள். திசை மேற்கு.

பெருமாள் ஆலயங்களை போலவே, சிவாலயங்களிலும் தை முதல் நாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். 1008 குடங் களில் நீர் நிரப்பி அபிஷேகம் செய்ததாக குறிப்புகள் உண்டு. செம்பியன் மாதேவியார் இந்த நாளில் பல ஆலயங்களிலும் வழிபாடு நிகழ்த்தியுள்ளார். அக்காலத்தில், சோழ மன்னர்கள் தை முதல் நாள் அன்று சிவாலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்தியதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில், மகர சங்கராந்தித் திருவிழா 10 நாட்கள் சிறப்பு உற்சவமாக கொண்டாடப்படுவது குறித்த கல்வெட்டுகள் உண்டு.

 4. உத்தராயண புண்ணிய காலம்

12 மாதங்களை இரண்டு ஆறு மாதங்களாகப் பிரித்து இரண்டு அயனங்கள் கணக்கிடுகிறோம். சூரியன் வடக்கு புறமாக நகர்வது என்றும், தெற்குப்புறமாக தொடங்கி நகர்வது என்றும் கணக்கு. இதில், வடக்கு பாதையில் செல்வது உத்தராயணம் என்றும், தெற்குப் பாதையில் செல்வது தக்ஷிணாயனம் என்றும் சொல்லுகின்றோம். தட்சணாயணம் முடிந்து உத்தராயணத்தில் தொடக்க நாளே தை மாதத்தின் முதல் நாள்.

பல பெருமாள் கோயில்களில் இதையொட்டி வாசல்கள் உண்டு. உத்தராயண காலத்தில், வடக்கு  வாசல் மூலமாக பெரு மாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். தட்சிணாயன காலத்தில் தெற்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். திருவெள்ளறை, குடந்தை சாரங்கபாணி கோயில் போன்ற ஆலயங்களில் இந்த வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி மாதம் வரை ஆறு மாத காலம் உத்தராயண காலம். ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாத காலம் தட்சணாய காலம்.

மார்கழி மாதம் மகாபாரதப் போர் நடந்தது. அதில், பத்தாம் நாள் போரில் பீஷ்மர் அர்ஜுனன் அம்புகளால், துளைக்கப்பட்டு கீழே சாய்கிறார். ஆனாலும், அவர் உயிர் போகவில்லை. அம்பு படுக்கையிலேயே அவர் காத்திருக்கிறார். அவரிடத்தில் காரணம் கேட்கப்பட்ட பொழுது, தட்சணாயன காலத்தில் நான் உயிரை விட விரும்பவில்லை. உத்தராயண காலத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லுகின்றார். உத்தராயண காலத்தில், உயர்வு குறித்து கருட புராணம் முதலிய சாத்திரங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

5. உழைப்பின் பயனை அறுவடை செய்யும் திருநாள்‘‘ஆடிப்பட்டம் தேடி விதை” என்று தட்சிணாயன காலத்தில் விதை விதைத்து, விளைச்சலை, உழைப்பை, உழைப்பின் பலனை, தை மாதத்திலே பெறுவார் என்பதால் ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற ஒரு பழமொழியும் ஏற்பட்டது. ஒரு காலத்தில், பெரும்பாலான சுபநிகழ்ச்சிகள் உத்தராயண காலத்தில், வளர்பிறை பருவத்தில் நடைபெறும். திருமணங்களை முன் கூட்டியே பேசி வைத்துக் கொண்டாலும், தை பிறந்து அறுவடை எல்லாம் முடிந்து ஓய்வு காலமாக இருப்பதால், சிறப்பாகக் கொண்டாடலாம் என்று முடிவெடுப்பார்கள்.

6. போகிப் பண்டிகை

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தட்சணாய காலத்தின் நிறைவு நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகி பண்டிகை. “போகி” என்பது இந்திரனின் பெயர்.
கண்ணபிரான் அவதார காலத்தில், மழை வேண்டி இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆயர்பாடியில் அனைவரும் விரும்பினார்கள். அப்போது கண்ணன், “சூரியன், இந்திரன், வாயு முதலிய அனைத்து தேவர்களும் ஸ்ரீ மந்நாராயணனுக்குக் கட்டுப்பட்டவர்கள். எனவே, இந்திரனுக்கு பூஜை செய்வதை விட, நமக்கு மழையைத் தருவதும், பசுக்களுக்கு நல்ல தழைகளைத் தருவதுமாகிய இந்த மலைக்கு பூஜை போடலாம்” என்று சொன்னான்.

 கோவர்த்தனகிரியாகிய மலைக்கு பூஜை செய்ய, கோபம் கொண்ட இந்திரன், கடுமையான மழை பொழிய, தன்னை நம்பிய ஆயர்களையும், பசுக்களையும் காப்பதற்காக கோவர்த்தனகிரியை குடையாய்ப் பிடிக்கிறான் என்பது பாகவத புராணம்.கண்ணனுடைய பெருமைகளை உணர்ந்த இந்திரன், இறுதியாக கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்கின்றான். எனவே, போகிப் பண்டிகை என்பது கோவிந்த பட்டாபிஷேக நாள் என்று வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் அன்று கோவிந்தராஜப்பெருமாளுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
 
7. போகியில் ஆண்டாள் திருக்கல்யாணம்

மார்கழி மாதம் முழுக்க ஆண்டாள் மார்கழி நோன்பு நோற்றாள். மார்கழி நோன்பின் காரணம், கண்ணனை அடைய வேண்டும், கண்ணனை தரிசிக்க வேண்டும் என்பது. இறைவனாகிய கண்ணனைச்  சந்திப்பதற்காகப் பாடிய தமிழ் “திருப்பாவை” என்பதால், இதனை சங்கத்தமிழ் என்று சொல்வார்கள். மார்கழி மாதத்தில் நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று கண்ணன்
ஆண்டாளுக்கு காட்சியளித்தான். ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டான். எனவே, ஆண்டாள் திருக் கல்யாண நாளாக போகிப்பண்டிகை இப்பொழுதும் பல வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.

8. போகி அன்று நெருப்பில் போட்டு பொசுக்கு

ஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.அன்றைய நாள்,  வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்கள் (எண்ணங்கள்) அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.பழந்துயரங்களை அழித்துப் போக்கும் பண்டிகை போகிப் பண்டிகை.‘‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில” என்பதற்கேற்ப பழைய பொருள்களை எல்லாம் தீயிலிட்டு பொசுக்கவேண்டும். தீயில் போட்டால் எதுவும் மிச்சமிருக்காது அல்லவா. (அன்று டயர்கள் போன்றவற்றை எரித்து சுற்று சூழலை மாசு படுத்தக்கூடாது) பொருள்கள் என்பது தீய எண்ணங்களையும், நடந்துபோன துயரமான நினைவுகளையும் சேர்த்துதான்.உறவுகள் மனக்கசப்பு நீங்கி ஒன்றாக வேண்டும். போக்கி என்ற சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.

9. போகிப்பண்டிகை எப்படிக்  கொண்டாடுவது?

போகிப்பண்டிகை அன்று, அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும் பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர்.அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு, அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.

10. சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை, மிகப்பழமையான பண்டிகை ஆகும். சங்க இலக்கியங்களில், பொங்கல் பண்டிகை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. “தைஇத்திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

11. தை நீராடல்

உத்தராயண புண்ணிய காலத்தில், புண்ணிய நதிகளில் நீராடுவதும், திருக்கோயில் களில் வழிபாடு நடத்துவதும், பல்வேறு தான தர்மங்களைச் செய்வதும், காலம் காலமாகச்  செய்யப்பட்டு வருகின்றது. சங்க இலக்கியங்களில், தை மாதம் முதல் நாள் நோன்பிருந்து நீராடுவதை ‘‘தை நீராடல்” என்று மக்கள் அழைத்தனர். வைகை நதியில் அக் காலத்தில் மக்கள் நதி நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.

12. வாசலில் நெற்கதிர் தோரணம்

தை நீராட்டு முடிந்தவுடன் ,பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற் கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர். அக் கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப்படியில் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை செய்வர். அதைப்போலவே அதை அழகான வளையமாகக்  கட்டி,தூக்கு கூடு போல வீட்டில் தொங்க விடுவதும் உண்டு. இன்றும் கிராமத்து பழைய வீடுகளில் மரத்தூண்களின்  மேல் நெல்மணிகதிர்களால்  கட்டப்பட்ட பிரிமணை வளையங்களை பார்க்கலாம். அதிலே இருக்கிற தானியங்களை பறவைகள்  சிட்டுக்குருவிகள் வந்து உண்டு மகிழும்.அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும் பொழுது மங்களங்கள் பெருகும்.

13. சூரியனுக்கான திருவிழா

தைப்பொங்கல் பண்டிகை சூரியனுக்கான திருவிழாவாகக்  கொண்டாடப்படுகிறது. சூரியன் வேதகாலககடவுள். சூரியனின் பிறப்பு பற்றி பல குறிப்புகள் வேதங்களில் இருக்கின்றன. தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் உள்ளதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சந்தியா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன். பகவான் ஸ்ரீ மன் நாராயணன் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தான் என்று ரிக் வேதம் சொல்லுகின்றது. (சஷூ ஸூர்யோ அஜாயதா - புருஷ சூக்தம்) வேதங்களால் போற்றப்படும் சூரிய பகவானுக்கு உரிய விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

14. முப்பத்து முக்கோடி தேவர்களில் சூரியன்

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கு எப்படி வருகிறது என்பதற்கு  திருப்பாவையின் ஒரு பாசுரத்தில் விளக்கம் இருக்கிறது. ‘‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே” என்று இறைவனை அந்தப் பாசுரம் போற்றுகிறது. அதிலே 12 சூரியன்கள், 11 ருத்ரர்கள், 8 அஷ்டவசுக்கள், அஸ்வினி குமாரர்கள் 2 அல்லது இந்திரனையும் ப்ராஜபதியையும் சேர்த்தால் முப்பத்தி மூன்று ஆகிறது.

ஆக மொத்தம் முப்பத்தி மூன்று தேவதைகளை, முப் பத்து முக்கோடி தேவர்கள் என்று கணக்கிட்டு சொல்லுகின்றார்கள். இதில் விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் முதல் நாள் பண்டிகையில் இந்த ஆதித்யர்களுக்கு
வழிபாடு நடத்தப்படுகிறது.

15. சிலப்பதிகாரத்தில் இந்த சூரியன் பெருமை

சிலப்பதிகாரத்தில் இந்த சூரியன் பெருமை மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது “ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்” சூரியனை போற்றுவோம், சூரியனை போற்றுவோம் காவிரி நாடன், சோழன் ஆணைச் சக்கரம் போல பொன்  மலை மேருவை சுற்றி வருவதால் சூரியனை போற்றுவோம். இங்கே எல்லோருக்கும் பொதுவான அரசாங்கமும், எல்லோருக்கும் பொதுவான சூரியனும் இணைத்து பேசப்படுவதை காணலாம். எனவே சூரிய வழிபாடு என்பது தெய்வ வழிபாடு மட்டுமல்ல,தேச வழிபாடும் கூட.  

16. உழவுத் தொழிலுக்கு உன்னத விழா

நமது நாட்டில் சுமார் எழுபது சதவிகித மக்கள் விவசாயத்தில் இருக்கின்றனர். நாம் என்னதான் தகவல் தொழில் நுட்பத்தில் பலபடிகள் முன்னேறினாலும்  உணவுக்கு தானியம் தான் தேவை. நூற்றி இருபது கோடி மக்களுக்குத் தேவையான உணவை விவசாய சமூகம் உற்பத்தி செய்து வருகிறது. அதனால் தான் வள்ளுவர், உழவர்கள் பின்னால்தான் எல்லோருமே போயாக வேண்டும்.அவர்களையும் அவர்கள் தொழிலையும் மதியுங்கள் என்கிறார். அதற்கான விழா தான் பொங்கல் விழா. உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்கின்ற உன்னத விழாவாக இந்த தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
உழவினார் கைம்மடங்கின் இல்லை
விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டு
விட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

17. விவசாயமும் சூரியனும்

விவசாயம் செய்ய சூரிய ஒளி முக்கியம்.நிலவு ஒளியும் தேவை எனினும் சூரிய ஒளி முக்கியம். மழை பெய்யவும் சூரிய ஒளி முக்கியம். எனவேதான் ஒளிக்கடவுளான சூரியன் வேத வழிபாட்டிலும், இயற்கை வழிபாட்டிலும், பழந்தமிழர் வழிபாட்டிலும் முக்கிய இடம் பெற்றார். நமது நாட்டு மக்கள் மட்டுமல்ல மேல் நாட்டிலும் ரோமா
புரியில் கிரேக்கத்திலும் கதிரவனை முதன்மை கடவுளாகவே கருதினர்.

பழைய சங்க இலக்கியங்களில் ஒரு அரசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரப்புயர என்கின்ற வார்த்தையைச் சொல்லி வாழ்த்தினார் அவ்வையார். வரப்புயர சொல் எப்படிஅரசனுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்று புலவர்கள் கேட்கமுழுப்பாடலையும் சொன்னார்.அது விவசாயத்தை முக்கியத்துவத்தையும் அதை காக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையும் எடுத்துக்காட்டுவதாக அந்த பாடல் அமைந்தது.வரப்புயர நீருயரும்  நீருயர நெல்லுயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்.

18. ஆண்டாளின் பிராத்தனை நிறைவேறிய நாள்

விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடு நம்நாடு.
இதை ஆண்டாள் விவசாயம் செழிக்க வேண்டும், கால்
நடைகள் செழிக்க வேண்டும், நன்கு கால்
நடைகள் பால் கறக்க வேண்டும்
என்கின்ற பிரார்த்தனையை வைக்கின்றார்.
ஆண்டாளின் பிராத்தனை நிறைவேறிய நாள்
தை முதல் நாள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு
கண்படுத்தத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய்
எனவே தான் ஆண்டாளின் பிரார்த்தனை நிறைவேறிய நாள் தை மாதம்
1 ஆம் தேதி பொங்கல் பண்டிகையாகக்  கொண்டாடப்படுகிறது.

19. சூரிய வழிபாடு

ஆறு சமயங்களில் ஒன்று, சூரியனை முதன்மைக் கடவுளாக கொண்ட சௌரம். அக்காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஆனால் பின்னால் சூரிய வழிபாடு வேறு வழிபாட்டோடு இணைந்தது. சூரியநாராயணர் என்று வைணவத்தில், சைவத்திலும் சூரிய வழிபாடு இணைந்தது. இப்பொழுதும் சூரியனுக்கு எதிர் தமிழ்நாட்டில் சூரியனார் கோயிலும் ஒரிசா ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தனிக்கோயில்களும் உண்டு.

சூரிய உதயத்தை வைத்துத்தான் நாம் காலத்தைக் கணக்கிடுகிறோம். பகல் நேரத்திற்கு காரணம் சூரியன். சூரியனால் தான் பயிர்களும் உயிர்களும் செழித்து வளர்கின்றன. சூரியனால்தான் கிழமைகளில் ஏற்படுகின்றன. கிழமைகள் ஏழு குறிக்க ஆதித்யன் தனது ரதத்தில் ஏழு குதிரைகளை பூட்டி உள்ளான். நம் உடலில் தோல், எலும்பு, சதை, ரத்தம் என்ற ஏழு தாதுக்கள் உள்ளன. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த உடம்பு. இவற்றை இயக்குவது  சைதன்ய ஆதித்யன். சாஸ்திரத்தில் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை நகரும் ஏழு சக்கரங்களே ஏழு குதிரைகள். வேதங்களால் போற்றப்படும் சூரிய சக்தியின் உருவம்தான் ஏழு குதிரைகள்.

20. சூரிய வம்சம்

அக்காலத்தில் மன்னர்கள் சூரிய குல  வழி மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் என்று தங்கள் குல மரபை  சொல்வது வழக்கம்.சூரிய குலம் என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் குலமாகும்.  விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பெயரனான இச்வாகுவின் வழி வந்த
அரச வம்சம் சூரிய குலமாக அறியப் பெறுகிறது. சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள். தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றும், சேரர், பாண்டியர்களை சந்திர வம்சம் என்றும் சொல்கிறார்கள். கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக சூர்ய
வம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன.

21. பொங்கலோ பொங்கல்

உத்தராயண புண்ணிய காலமான தைப்பொங்கல் அன்று பாலில் புத்தரிசி  பொங்கல் போட்டு  சூரிய பகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி தூப  தீபம் காட்டி வழிபட வேண்டும்.
இதன் மூலமாக நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் மனஅமைதி கிடைக்கும்.பொங்கலன்று அதிகாலை எழுந்து, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு, முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும்
அன்று பயன்படுத்துவர்.

அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.
முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

பால் பொங்கும்போது மணியோசை எழுப்பி பொங்கலோ பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை யிடுவதும் உண்டு.
சூரிய பகவானுக்கு பல்லில்லாதகிரகம் என்று ஒரு பெயர் உண்டு.  அதனால் அவருக்கு பொங்கல் திருநாளில் வழுக்கையான தேங்காயை படைப்பது உசிதம் என்று எழுதியிருக்கிறார் மகாபெரியவர். அந்த வகையில் இளநீர் பாயசம் வைத்து தைத்திருநாளில் படைக்கலாம். பொங்கலன்று காய்கறி கலந்து சாதங்கள் செய்து படைக்க வேண்டும்.

22. மண் பாண்டத்தின் பெருமை

மண்பாண்டத் தொழிலுக்கும் பொங்கல் திருநாளில் ஒரு தனி மதிப்பு இருக்கிறது. மண்பாண்டத்தில் சமைத்த உணவுகளில் மண்ணின் சுவை இருக்கும். அது அற்புதமான சுவை. இப்பொழுது தண்ணீரை வைப்பதற்கும் சில குழம்புகளை வைப்பதற்கு மட்டுமே நாம் மண் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம். ஒரு காலத்தில் தோசைக்கல்,  உட்பட எல்லா வகையான சமையல் பாத்திரங்களும் மண் பாத்திரங்களாகவே இருந்துள்ளன.

மண் பானையில் உண்டாகும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உலோகப் பாத்திரங்களில் சமைக்கும்போது உண்டாவதில்லை. மண்பாண்டத்தின் பெருமையைச் சொல்வதற்காகவே அறுவடைத் திருநாளில், புது மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கிறார்கள். மற்ற நாட்களிலும் மண்பாண்டங்களில் சமைத்து உண்ண வேண்டும். எதுவாக இருந்தாலும் பாத்திரத்தை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து, சந்தனம் குங்குமமிட்டு, பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்து, பூஜையறையில் வைத்து, விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவேண்டும்.

23. மாட்டுப்பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப்பொங்கல்நாளாகும். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்ய வேண்டும்.மதுரை மாவட்டத்தில்  பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு. மாட்டுப்பொங்கல்  பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வது உண்டு. மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு, மாடுகளை குளிப்பாட்டி  அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அலங்கரித்து, சலங்கை கட்டி விடுவார்கள். மேலும் அவற்றுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள். “பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!” என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

24. காணும் பொங்கல்

 உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் நாள் இது. இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் விழா.காணும் பொங்கலைக் கன்னிப்பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்பட  இடம்பெறும் விழா. பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.

பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன் பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. காணும் பொங்கல் அன்று காக்கைக்கு அன்னமிட வேண்டும் .இப்படிச் செய்தால் அந்த வருடம் முழுவதும்  வளமோடு வாழலாம்.

25. ஆற்றங்கரைத் திருவிழா

காணும் பொங்கல் அன்று ஆற்றங்கரைத் திருவிழாவாக கொண்டாடுகின்றோம். அன்று சுவாமி தீர்த்தவாரிக்கு ஆற்றங்கரைக்கு வருவதோடு, மக்கள் குதூகலமாக பல விதமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். பெண்கள் கும்மி கோலாட்டம் முதலியவற்றை விளையாடுவார்கள். ஒருவரை ஒருவர் இணைந்து மகிழ்ச்சியைத் தரும் திருநாளாக காணும்பொங்கல்
அமைந்திருக்கிறது.

26. தை  மாதம் 5ம் நாள் ஆற்றுத் திருவிழா

தை  மாதம் 5ம் நாள் ஆற்றுத் திருவிழா என்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் கொண்டாடப்படுகின்றது. இது மிகச் சிறப்பான திருவிழாவாகும். கடலூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளான கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, ஆனைக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், நானமேடு, உச்சிமேடு,
கடலூர் துறைமுகம், வண்டிப்பாளையம், புருகீஸ் பேட்டை, தேவனாம்பட்டி, புதுச்சேரி கன்னியகோயில்ஆகிய இடங்களில் உள்ள அம்மன், முருகன், விநாயகர், பராசக்தி கோயில்களைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொண்டாடப்படுகிறது.

27. பொங்கல் பண்டிகையும் கரிநாளும்

 ஜோதிட சாஸ்திரத்தில் கரி நாட்கள் என்று சில நாட்கள் உண்டு. சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் கணிக்கப்படுவது போல சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது கரிநாள்.
கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள் படும். அன்றைய தேதியில் சூரிய கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாட்கள் என்று சில நாட்கள் வரும். இந்த தமிழ் தேதிகள் மாறவே மாறாது. எல்லா ஆண்டுகளுக்கும் இது பொருந்தும்.

தைமாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாக இருக்கும். கரிநாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம்,  போன்றவற்றைச் செய்ய மாட்டார்கள். தொடர்ந்து எந்தச்  செயலைச்  செய்ய வேண்டியது இல்லையோ, அந்தச்  செயலை கரி நாட்களில் செய்யலாம். உதாரணமாக கொடுத்த கடனை அடைத்துவிட்டால் திரும்ப கடன் வாங்க வேண்டியிருக்காது.

28. முன்னோர் பூஜைக்கு உகந்த நாள்

உத்தராயணம் பிறக்கும் தை மாதம் முதல் தேதியும் தட்சிணாயனம் பிறக்கும் ஆடி மாதம் முதல் தேதியில் முன்னோர்கள் பூஜை செய்வதற்கு உகந்த காலங்கள். அன்று சூரிய சாளரக் கோயில் வழிபாடு செய்வது சிறந்தது. சாளரக்கோயில் என்றால்  மூலஸ்தானம் நுழைவாயில் இல்லாது, எதிரே சுவரில் சில சன்னல்கள்  அமைக்கப்பட்டு, பக்கவாட்டு கதவு வழியேதான் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும்.

இத்தகைய சூரிய சாளரக் கோயில்களில் முக்கியமானது திருவலஞ்சுழியில்உள்ள ஸ்ரீ வேத விநாயகர் கோயில். தை முதல் நாளன்று இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்வதால் பலவிதமான தொந்தரவுகள் நீங்கும். சூரியக் கோயில்கள் அமைந்துள்ள சிவாலயங்களில் மூலவருக்கு சிவப்பு பட்டு வஸ்திரம் சாத்தி சிவனை வழிபட வியா
பாரம் முதலியவை நல்ல முறையில் நடக்கும். தொழில் அபிவிருத்தி அடையும் . பித்ரு சாபங்கள் தீரும்.

29. பொங்கலும் கரும்பும்

பொங்கலுக்கு கரும்பு வைத்து படைக்க வேண்டும்.  கரும்பு  அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல மருந்துப் பொருளும் கூட. கரும்பு கசந்தால் வாய்க் குற்றம் என்ற பழமொழியே உண்டு. அதாவது கரும்பு சுவைக்கும் பொழுது கசப்பு வந்தால் செரிமான சுரப்பிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். கரும்பில் உள்ள இனிப்பு மிக அற்புதமானது. உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த பொருளும் கரும்பில் இருக்கிறது. அது உடலுக்கு உறுதியை தருவதோடு, உடல் சூட்டை குறைக்கும் குணம் கொண்டதாக இருக்கிறது.

30. சொர்க்கப் பாதை விழா

 பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பது போல சிவன் கோயிலில் கைலாய வாயில் பொங்கல் அன்று திறக்கும் கோயில் ஒன்று உண்டு. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில். மிகப் பிரதானமான இக்கோயிலில் பொங்கல் அன்று கைலாய வாயில் திறக்கப்படுகிறது. பொங்கலன்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக கோயிலுக்கு திரும்பும்பொழுது கைலாய வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய வேண்டும்.இந்த விழாவிற்கு சொர்க்கப் பாதை விழா  என்று பெயர். பூசணி தமிழ் நாட்டுக்கே உரிய ஒரு அற்புதமான தாவரம்.

மார்கழி தை மாதங்களில் அதிகம் விளையும். இந்த பூசணிப்பூ ஆன்மிகச் சிறப்பு வாய்ந்தது இந்திரனுக்கு இந்த பூசணிப்பூ மிகவும் பிடிக்கும். மார்கழி மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் இட்டு வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்து அதில் நடுவில் சாண உருண்டைகளை பிடித்து வைத்து பூசணிப் பூவை பொருத்தி வைப்பார்கள். பொங்
கலின்போது பெரிய சல்லடையில் பூசணி  இலைகளில் பொங்கலை வைத்து படைக்கும் வழக்கம் உண்டு. இந்திரனுக்குரிய விழாவாக இந்த விழா இருப்பதால் அவருடைய ஆயிரம் கண்ணுக்கு நிகராக சல்லடையை பயன்படுத்துகின்றனர்.இன்னும் ஏராளமான செய்திகள் உண்டு.அதில் ஒருசிலதான் இந்த முத்துக்கள்
முப்பது.

 நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Tags : Pearls ,
× RELATED காராமணி பழப்பச்சடி