×

குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்

தோஷம் என்பது நம்முடைய வினைகள் நம்முடன் ஒட்டிக்கொண்டு துன்ப விளைவுகளைத் தருவது ஆகும். புத்திர தோஷம் என்பது வெவ்வேறு விதமாக வேலை செய்யும்.

1. சிலருக்கு குழந்தையே பிறக்காது.

2. சிலருக்கு குழந்தை பிறந்தாலும் கூட அது கருவிலே அழிந்துவிடும் அல்லது பிறந்து சில மாதங்களில் நோய்வாய்ப்படும். அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ அங்கங்கள் குறைந்தோ பிறக்கும்.

3.பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர், இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;

4. பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,

5. திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;

இப்படி பல விதத்தில் இந்த தோஷம் வேலை செய்யும். இன்னும் சில மோசமான விஷயங்கள் எல்லாம் உண்டு. புத்திர தோஷத்தைப் பற்றி பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடுகின்றார்.
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்பவார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்றத்தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அரற்ற தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம்செங்கண்மாலொடும் சிக்கனச் சுற்றமாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலுமாமே மருத்துவமனை காட்சியை காட்டுகிறார். வாயானது ஒரு பக்கமாக கோணிக் கொண்டு  இழுக்கிறதாம்.,
உறவினர்களைப் பிரிந்து செல்கிறேனே என்று அவர்களின் மீது உள்ள பாசத்தினால் கண்ணீர் பெருக்குக்கிறான். வார்த்தை வரவில்லை.

அழும் சமயத்தில் யம தூதர்கள் நிற்பது  கண்டு பயத்தால் கண்கள் உள்ளே அழுந்தி சுழல்கிறது. இதைக்கண்டு தாயானவள் ஒரு பக்கமும்,தந்தையானவன் ஒரு பக்கம், மனையாள் ஒரு பக்கமுமாக சுற்றி நின்று அரற்றி அழுகிறார்கள். அதன் பின்னர் தீயானது ஒரு பக்கம் சேர்வதற்கு முன்பாக,சிவந்த தாமரை போன்ற திருக்கண்களை உடைய எம்பெருமானே, நீ தான் என்  அனைத்து உறவு என்று  நினைந்து அவனைச் சரணடைந்தால், எமனுடைய தண்டனைகளிலிருந்து தப்பி உய்வடையலாம் என்று அருளிச் செய்கிறார். இங்கே புத்திர சோகம், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்ற பரிகாரம் இரண்டையும் அனுபவ பூர்வமாக ஆழ்வார் காட்டுகிறார்.

ஒன்பதாம் இடம் கெட்டு,அது ஐந்தாம் இடத்தோடு தொடர்புடையதாக ஆகி, சூரியனும் பாதித்திருந்தால் பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம். அதைப்போலவே நான்காம் இடம் சந்திரன் இவை ஐந்தாம் இடத்தோடு தொடர்புகொண்டு பாதித்திருந்தால் தாய் வழியில் வந்த புத்திரதோஷம்.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.   ஐந்தாம் இடத்தோடு தொடர்புகொண்டு புதன் பாதித்திருந்தால் மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.ஐந்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டு 3ம் இடமும் செவ்வாயும் பாதித்திருந்தால் சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

குரு 5ஆம் இடத்து தொடர்பு கொண்டு பாதித்திருந்தால் அந்தணர்களால் வரப்படும் புத்திர தோஷம். சர்ப்ப கிரகங்கள் ராகு கேது பாதித்திருந்தால் சர்ப்ப புத்திரதோஷம். இது தவிர பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?

தோஷத்தை முறையாக நிவர்த்தி செய்து கொண்டால் ஓரளவு சமாளித்துவிடலாம். தோஷம் அவரவர் ஜாதகங்களில் ஏதோ ஒரு வகையில் புதைந்திருக்கும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும். குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம். வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம். குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம். அதுபோல, நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும். முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை, நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?