×

சந்திரனின் சாபத்தை தீர்த்த பரிமள ரங்கநாதர்

முனைவர் ஸ்ரீ ராம்

சந்திர பரிகார தலங்களாக தஞ்சைக்கு அருகே திங்களூர், சென்னை - தாம்பரத்திற்கு அருகே சோமங்கலம் என்று நிறைய உண்டு. இதேபோலவே காவிரிக் கரையின் கடைசிப்  பகுதியில், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருஇந்தளூர் தலமும் ஒன்று. இந்தளூர் என்பது மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியாகும். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய ஆட்டோக்களும் உண்டு. மணல்மேடு என்ற ஊருக்குச் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி கோயில் சந்நதித் தெருவில் இறங்கிக்  கொள்ளலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து இறங்கிச் செல்லும் போது ஒரு வசதி உண்டு.

துலா ஸ்நானம் என்று சொல்லப்படுகின்ற காவேரிப் படித்துறை, உற்சவ மண்டபங்கள், பார்த்துக் கொண்டே செல்லலாம்.காவேரிப் படித்துறையில், ஐப்பசி மாதம் முழுக்க, காவிரியில் நீராடி, பரிமளரங்கனைச்  சேவிப்பார்கள். கார்த்திகை மாதம் முதல் நாளும் இந்த துலாஸ்நானம் உண்டு. அதற்கு “முடவன் முழுக்கு” என்று பெயர். சன்னதித் தெருவில் கோயிலுக்குப் போகும் பாதையில் இடதுபுறம் உள்ள புஷ்கரணிக்கு “இந்து புஷ்கரணி” என்று பெயர். சந்திரன் தன் மாமனார் தட்சனிடம் சாபத்தினால் பெற்ற தொழுநோயை, இந்தத் தீர்த்தத்தில் நீராடியும், தீர்த்தக்கரையில் தவமிருந்தும்  போக்கிக் கொண்டான் என்பது தலபுராணம்.

பகல் நேரத்தில் இந்த புஷ்கரணியில் கோபுர பிம்பம் விழுந்து அற்புதமாகத்  தெரியும். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி, அவருக்கு நலம் செய்த பெருமாள், அந்தச்  சந்திரனால் ஒருவருக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்களையும் நீக்கி, அற்புதங்களைத்  தருவார் என்பதால், இத்தலம்  சந்திர தோஷ நிவர்த்திக்கான திருத்தலமாகும்.பிரதான கோபுரம் வழியாக கோவிலில் நுழைவோம். அம்பரீஷ மகாராஜாவினால் கட்டப்பட்ட அற்புதமான கோயில்.  ராஜ கோபுரம் அதிக உயரமும் அகலமும் இல்லாமல் கச்சிதமாக  இருக்கும்.திருமதில் எல்லாமே செங்கற்களால் கட்டப்பட்டு, பிறகு செய்யப்பட்ட திருப்பணிகளில், கருங்கற்களாக மாற்றியிருக்கிறார்கள்.

மண்டபங்கள் அழகாகவும் விசாலமாகவும் இருக்கும். கொடிமரத்திற்கு முன் உள்ள தூண்களில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார்.  இவருடைய திருநாமம் மருவினிய மைந்தன் என்கின்ற அழகான பெயர். கிழக்கே திருமுக மண்டலம். வீர சயனம்.திருமுகத்தில் சூரியனும், திருவடியில் சந்திரனும் அமர்ந்திருக்கிறார்கள். நாபிக்கமலத்தில் நான்முகன். பெருமாளின் சயன சுகம் அவருடைய திருமுகத்தில் தெரியும்.காவிரி, கங்கை இருவருமே தெற்கிலும் வடக்கிலுமாக இருந்து பெருமாளை வணங்குகிறார்கள்.

கங்கை போன்ற பெருமையைப் பெற வேண்டும் என்று நினைத்த காவேரி, இந்த இடத்தில் தவம் செய்தாளாம். பெருமாள் காவிரிக்கு அற்புதமான வரத்தைத் தந்தாராம். ‘‘பொதுவாக எல்லா பாவங்களும் தீர கங்கா ஸ்நானம் செய்வார்கள். அந்த கங்கையின் பாவம் தீர, ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்வாள்.” இது தான்
பெருமாள் கொடுத்த வரம். தன்  பாவத்தை எங்கே தீர்த்துக் கொள்வது என்று தவித்த கங்கைக்கும் இதில் நிம்மதி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  அல்லவா? எனவே, கங்கையின் பாவத்தை போக்கும் பெருமையை காவிரி பெற்றது. ஆழ்வார் பாசுரம் இந்தப் பெருமையை விவரிக்கின்றது.

“கங்கையில் புனிதமாய காவிரி” நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும், பூம் பொழில் அரங்கம் தன்னுள்,
எங்கள் மால், இறைவன் ஈசன்,
கிடந்தோர் கிடக்கை கண்டும்,
எங்கனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே!


என்று காவிரி சிறப்பு பற்றிச் சொல்லுகின்றார். திருமாலுக்கு “பரிமள ரங்கநாதர்” என்று பெயர் வந்ததற்கும்  காரணம் இருக்கிறது. மது, கைடபர் என்ற அசுரர்கள் ஒரு காலத்தில் பிரம்மனிடமிருந்து வேதத்தை அபகரித்து ஒளித்து விடுகிறார்கள். அதனால் நான்முகன் உயிர்களைப் படைக்கும் உணர்வின்றி கிடக்கிறார். தேவர்கள் பெருமானிடம் வேதத்தை மீட்டுத் தர வேண்டுகோள் விடுக்கின்றார்கள். திருமால் மச்ச அவதாரம் எடுத்து, வேதங்களை மீட்கிறார். அசுரர்களால் அழுக்கான இடத்தில் மறைக்கப்பட்டதால், துர் வாசனை நீங்க என்ன செய்வது என்று யோசித்தன வேதங்கள்.

மணம் பெற வேண்டும் என்பதற்காக காவிரியில் நீராடி, பெருமாளை நோக்கித்  தவம் இயற்றின. அவர்கள் முன் தோன்றிய பெருமாள், வேதங் களின் மனக் குறையை போக்கி, பரிமளம் வீசச் செய்ததால், பரிமள ரங்கநாதர் என்ற பெயரைப் பெற்றார். வேதங்களின் குறையை தீர்த்ததால், கோயிலின் விமானம் வேத சக்கர விமானம் என்ற பெயருடன் விளங்குகிறது. எப்பொழுது நீங்கள் கோயிலுக்குச் சென்றாலும், கோயில் கருவறையில் பெருமாளை தரிசிப்பது மட்டுமே போதாது. எப்படியாவது கோயில் விமானத்தின் நான்கு பக்கங்
களையும் தரிசிக்கவேண்டும்.

இந்த விமானத்தை ஒரு நிமிடம் சிந்தித்தால் கூட, ஆயிரம் அஸ்வமேத யாகங்களின்  பலம் சித்திக்கும். பெருமாளின் திருவடியில் எமனும் அம்பரீஷ மகாராஜனும் இருக்கின்றார்கள்.

1. எனவே இங்கே பெருமாளை சேவித்தால், அவர்களுக்கு சந்திரனால் ஏற்படுகின்ற தோஷம் நீங்கி மனம் தெளிவடையும்.

2. சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் என்பதால் தாய்க்கு ஏற்படுகின்ற குறைகளும் நீங்கிவிடும்.

3. பெருமாளுக்கு அருகில் காலதேவன் இருப்பதால் ஆயுள் குற்றங்களும் நீங்கும்.

உற்சவ மூர்த்தி  அழகாக இருப்பார்.  ஸ்ரீ தேவி பூதேவி உபய நாச்சி மார்களோடு எழுந்தருளியிருக்கிறார். முகப்பொலிவு பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும். மகப்பேறு இல்லாதவர்களின் மனக் குறையை தீர்க்க சந்தான கோபாலன் சந்நதியில் எழுந்தருளியிருக்கிறார். வெளிப் பிராகாரத்தில் ராமருக்கு தனி சந்நதி இருக்கிறது. கோயிலுக்கு நேர் எதிரில் ஆஞ்சநேயர் தனிச்சந்நதியில் கோயில் கொண்டு அருளுகின்றார். இந்த ஆஞ்சநேயரை வணங்காமல் வரக்கூடாது. மகா வரப்பிரசாதி. சந்நதித்  தெருவில் ஒரு நாற்கால் மண்டபம் உண்டு.

பெருமாளுக்கு வீதி புறப்பாடு நடக்கும் பொழுது திருவந்திக்காப்பு இங்கு தான் நடக்கும். சந்திர சாபம் தீர்த்த இந்து புஷ்கரணியில் நடக்கக்கூடிய தெப்ப உற்சவம் அதி அற்புதமாக இருக்கும். இரவெல்லாம் சுவாமி தெப்பத்தில் வர, ஆயிரக் கணக்கான மக்கள், புஷ்கரணியைச்   சுற்றி நின்று, கோலாகலமாக சுவாமி தரிசனம் செய்வதும், நாதஸ்வரம் பாட்டு கச்சேரி நடப்பதும், அற்புதமாக இருக்கும். ஐப்பசி மாதத்தில் மிகவும் விசேஷமாக பிரம்மோற்சவம் நடக்கும். தாயாருக்கு பரிமள ரங்கநாயகி என்று பெயர். சந்திரனின் சாபம் தீர்த்த தாயார்  “சந்திர சாப விமோசனவல்லி” என்ற திருநாமத்தோடு விளங்குகின்றாள்.

தாயாரின் திருமுகத்தை ஒரே ஒரு முறை பார்த்தாலும் கூட, ஆயிரம் சந்திர பிரகாசத்தைப் பார்த்ததுபோல ஜொலிக்கும். தாயாரை தரிசிப்பதன் மூலமாக சந்திரனால் கிடைக்கக்கூடிய யோகங்கள் அற்புதமாக வேலை செய்யும். தோஷங்கள் முற்றிலுமாக நீங்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.சந்திரனின் சகோதரி அல்லவா தாயார். திருமங்கை ஆழ்வார் பெருமாளை அதி அற்புதமான ஒரு பாசுரத்தால்  மங்களாசாசனம் செய்து இருக்கிறார்.

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த
திருவே!  மருவினிய
மைந்தா! அம் தண் ஆலி  மாலே!  சோலை மழ களிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு
இறையும் இரங்காயே!


வரிசையாக பெருமாளை அழைத்து, ‘‘என் தந்தையே கொஞ்சம் என் மேல் இரக்கம் கொள்ளக் கூடாதா?” என்று கேட்கிறார். நீங்களும் கேளுங்கள். உங்களுக்கும் இரங்குவார். அவர் “இரங்கி” னால்,உங்கள் துன்பங்கள் அனைத்தும் “இறங்கி”விடும்.

Tags : Parimala Ranganathar ,
× RELATED மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற...