×

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

?என் மகனுக்கு திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இரண்டு முறை கருத்தரித்தும் நான்கு அல்லது ஐந்து மாதத்தில் கலைந்துவிடுகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- பாபு, பெங்களூரு.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் பிறந்த தேதியை மட்டும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறந்த நேரம் இருந்தால்தான் ஜாதகத்தை கணித்து பலன் சொல்ல இயலும்.
உங்கள் மகனின் ஜாதகத்தில் பிள்ளைப்பேற்றினைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் குருவும் சந்திரனும் இணைந்துள்ளார்கள். புத்ரகாரகன் ஆகிய குரு புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் வீட்டில் ராகுவின் சாரம் பெற்று வக்ர கதியில் அமர்ந்துள்ளதால் பிள்ளைப்பேற்றினை அடைவதில் தடை உண்டாகி வருகிறது. அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரஹங்களும் வக்ரம் பெற்றுள்ளன. புத்ரகாரகன் ஆகிய குருவின் பலம் என்பது குறைந்திருப்பதால் குருப்ரீதி செய்வதன் மூலம் பலன் அடைய இயலும். தம்பதியர் இருவரையும் வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து சுப்ர
மணிய ஸ்வாமியை வழிபட்டு வரச் சொல்லுங்கள். தம்பதியராக ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் திருச்செந்தூர் திருத்தலத்திற்குச் சென்று நாழிக்
கிணறு மற்றும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்துவிட்டு செந்தில் ஆண்டவரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். ஒரு நாள் இரவு
அங்கேயே தங்குவதும் உத்தமம். குழந்தை பிறந்ததும் இறைவனின் நாமத்தையே பெயராக சூட்டுவதாக பிரார்த்தனை அமையட்டும். செந்தில் ஆண்டவரின் திருவருளால் விரைவில் வம்சம்
விருத்தியாகும்.

?ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு தற்போது 80 வயது ஆகிறது. இளைய மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்தவனுக்கு இன்னும் மணமாகவில்லை. யாருக்கும் சொந்த வீடு இல்லை. நான் எனது மனைவிக்கு ஏதாவது பணம் சேர்த்து வைப்பேனா? மூத்த மகனுக்கு திருமணம் செய்து தந்தைக்கு உரிய கடமையை செய்வேனா? உரிய வழி சொல்லுங்கள்.
- திருச்சி வாசகர்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. பிள்ளைகள், மனைவி யாருக்கும் எதுவும் சேர்க்கவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்திருக்கும் நீங்கள் அவர்களை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வங்கிப் பணியில் சேரும் அளவிற்கு நல்லதொரு வாழ்வினை அமைத்துத் தந்திருக்கிறீர்கள். மகளுக்கும் நல்லபடியாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறீர்கள். இந்த வயதிலும் மனைவியின் நலம் குறித்தும் அவரது எதிர்கால நிலை குறித்தும் யோசிக்கிறீர்கள். இதைவிட இன்னமும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? விரைவில் சதாபிஷேகம் செய்து கொள்ளவிருக்கும் நீங்கள் அதற்குரிய இலக்கணத்தை பின்பற்ற வேண்டும். 80 வயதைக் கடந்த பின்னர் மனைவி, மக்கள் என இவ்வுலக பந்தத்தை இறுகப் பற்றிக் கொள்ளாமல் இறை வனின் பால் மனதை செலுத்த வேண்டும்.

எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இறைநாமத்தினை ஜபித்துக் கொண்டிருப்பதில் காலத்தினை கழிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் நீங்கள் உங்களுக்குப் பிறகு மனைவியின் நிலையைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் கடமையை நீங்கள் சரிவர செய்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி வருகின்ற 13.03.2022 முதல் துவங்க உள்ள குரு தசையின் காலம் அதற்குரிய ஞானத்தை உங்களுக்கு தந்துவிடும். அதுவரை உங்கள் பகுதியில் உள்ள ஏழைப்பிள்ளையார் ஆலயத்திற்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள். கொண்டைக்கடலை சுண்டல் செய்து விநாயகப் பெருமானுக்கு நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும்
நல்லது. ஞான மார்க்கத்தில் பயணிக்க வாழ்த்துக்கள்.


?என்னுடைய தந்தை என்னை மகன் என்றும் பாராமல் பல விதத்தில் தொல்லை கொடுக்கிறார். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வழக்கு பிரச்னைகள் எப்போது முடிவிற்கு வரும்? தயவுசெய்து என் மனக்கவலையை தீர்த்து வையுங்கள்.
- ராகவன், சென்னை.

ஆசையே துன்பத்திற்கு காரணம். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை இல்லாததால் பிரச்சினை என்பது உண்டாகியிருக்கிறது. ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்ர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் பாவக அதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது தந்தையுடனான உறவுமுறையில் பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது. உங்கள் தந்தை அவரது தந்தையோடு கொண்டிருந்த உறவுமுறை எவ்வாறு இருந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியைக்
கணக்கீடு செய்து காணும்போது வழக்கு பிரச்னைகள் அத்தனை எளிதாக முடிவிற்கு வராது. 16.08.2023 வரை நீங்கள் போராடித்தான் ஆக வேண்டும். அதன்பிறகுதான் தற்போது நீடித்து வரும் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். என்றாலும் உங்கள் ஜாதக பலத்தின்படி எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுதான் வாழ வேண்டும் என்ற அமைப்பு இருப்பதால் எதிர்நீச்சல் போடுவதில் தயக்கம் காட்டாதீர்கள். உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை தயங்காமல் செய்யுங்கள். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கீழ்க்கண்ட  ஸ்லோகத்தை சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள். பிரச்னைகளை சமாளிக்கின்ற அளவிற்கு சக்தி கூடும்.

“நமோஅஸ்து துப்யம் ப்ரணதார்த்தி ஹந்த்ரே கர்த்ரே ஸமஸ்தஸ்ய மனோரதானாம்
 தாத்ரே ரதானாம் பரதாரகஸ்ய ஹந்த்ரே ப்ரசண்டாஸூர தாரகஸ்ய”

?10 வயது வரை என் மகன் நன்றாக படித்து வந்தார். அதன் பின் உடல் சுகவீனம் ஏற்பட்டது. இதுவரையில் மருத்துவம் தொடர்கிறது. இரவில் தூங்குவது இல்லை. சரியாக சாப்பிடுவது இல்லை. யாருடனும் சேர்வதில்லை. தனியாக எங்கும் செல்வதில்லை. பெயருக்கு 10ம் வகுப்பு பெயில் சர்ட்டிபிகேட் உள்ளது. இவர் வாழ்க்கையில் மாற்றம் வருமா? குடும்பம், தொழில் ஏற்படுமா?
பரிகாரம் சொன்னால் செய்கிறேன்.- பாலகிருஷ்ணன், அரக்கோணம்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சுக்ர புக்தி நடந்து
வருகிறது. கடந்த 20 வருடங்களாக மனநிலை பாதிப்பிற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வரும் மகனின் வாழ்வில் மாற்றம் வருமா என்று கேட்டிருக்கிறீர்கள். அவரது
ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி 12ல் வக்ரம் பெற்றிருக்கிறார். சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் கேதுவின் அமர்வும் ஐந்தாம் பாவக அதிபதி புதன் வக்ரம் பெற்ற நிலையில் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிந்தனைச் சிதறலை உண்டாக்கியிருக்கிறது. அத்துடன் மனோகாரகன் ஆகிய சந்திரனுடன் மாந்தி ஒரே கோட்டில் இணைந்திருப்பதும் மனநிலையில் ஸ்திரமற்ற தன்மையைத் தந்துள்ளது. அமானுஷ்ய சக்தியின் பாதிப்பு ஏதும் கிடையாது. பரம்பரையில் உண்டான சாபத்தின் பலனை இவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளை முழுமையாக தீர்க்க இயலாது. மருந்து மாத்திரைகளின் மூலமாகவும் இறை வழிபாட்டின் மூலமாகவும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

தனிப்பட்ட முறையில் குடும்பம், தொழில் ஏற்படுவதற்கான வாய்ப்பு என்பது இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பிரதி தமிழ்மாதம் தோறும் வருகின்ற முதல் செவ்வாய்க்கிழமை நாளில் சோளிங்கர் மலையில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்ச நேயர் சந்நதிகளுக்கு மகனை அழைத்துச் சென்று வழிபடுங்கள். இவ்விரு மலை களில் ஏறும்போது மகனின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் கவனித்து வாருங்கள். நரசிம்ம ஸ்வாமியின் திருவருளால் உங்கள் மகனின் வாழ்
வினில் நல்லதொரு மாற்றம் உண்டாகவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?