×

தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!

ஏ.எம்.ஆர். விசேஷ கட்டுரை

நம் துன்பங்களுக்கு நாம் அறிந்தோ, அறியாமலோ முற்பிறவிகளில் செய்துள்ள தவறுகளே (பாவங்களே) காரணமாகும். நாம் அவ்விதம் செய்துள்ள தவறுகளுக்கு ஏற்ப, நமக்குச் சிரமங்களை விளைவிக்கின்றன, நவகிரகங்களும்! கடன்கள், மன அமைதி பாதித்தல், கணவர்-மனைவியரிடையே ஒற்றுமைக் குறைவு, நோய்கள், உடல் உபாதைகள், குழந்தைகளால் கவலை, சகவாச தோஷம் போன்ற இன்னும் பலவித துன்பங்கள், மனத்தில் ஏற்படும் பாவங்களான, சபலங்கள் ஆகியவை நமக்கு எத்தகைய காரணத்தினால் ஏற்படுகின்றன?  அவற்றிற்குத்  தகுந்த பரிகாரங்கள் உள்ளனவா? இருப்பின், அந்தப் பரிகாரங்கள் என்ன என்பதைக் கண்டறிய உதவும் கணித முறைதான் “ஜோதிஷம்'' என்பது!

தவறு செய்வது மனித இயல்பு. இதற்குக் காரணம், கலியுகத்தில், மனித மனதில் உறுதி குறைவதேயாகும். அதனால்தான் தர்மம் குறைந்து, அதர்மம் பலம் அடைகிறது. எத்தகைய தவறை  நாம்  செய்திருந்தாலும், அத்தகைய தோஷங்களினால் நமக்குத் துன்பங்கள் ஏற்படாமலிருக்க எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்கள், வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர். அத்தகைய பரிகாரங்களில், முதன்மை பெற்று விளங்குவது,  திருக்கோயில்களிலும், மகான்களின் பிருந்தா வனங்களிலும், தினமும் அல்லது குறிப்பிட்ட கிழமைகளிலும் நெய்தீபம் ஏற்றி வருவதேயாகும். இதற்கும் வசதியற்றவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.

கிழமை, தோஷ பரிகாரம்:

ஞாயிறு: இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம், பித்ரு பூஜைகளை விட்டுவிடுவதால் ஏற்படும் துன்பங்கள்.

திங்கள்: மனக் கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறை, சோரியாஸிஸ், என்ஸிமா, வெள்ளைப்புள்ளிகள் போன்ற சர்மநோய்கள்.

செவ்வாய்: பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், “ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்”, முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள்.

புதன்: படிப்பில் தடை, “ஞாபக மறதி”, பாடங்களில் ஆர்வமின்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், மருந்துகளுக்குப் பிடிபடாத நோய்கள்.

வியாழன்: ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம் (ஆண் குழந்தை), தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குரு ஆகியோருக்குத் துரோகம் இழைத்தல், பெரியோர்களை அவமதிப்பது, குழந்தைகளால் பிரச்னை.

வெள்ளி: தாம்பத்திய சுகக் குறைவு - கணவர், மனைவி அன்னியோன்யம் பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலத்திற்குச் சோதனை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள், ஏற்படும் பண விரயம்.

சனி: ஆயுள், ஆரோக்கியம், விபரீத நோய்கள், தொழில், பிரச்னைகள், ராகுவினால் ஏற்படும்  பில்லி - சூனியம், செய்வினை தோஷங்கள், வேலையில் நிரந்தர
மின்மை, ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள்.

விசேஷ குறிப்பு

1. ராகுவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவினால் ஏற்படும் தோஷங்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்றுவது விசேஷ நன்மைகளைத் தரும்.

2. நெய் என்று சொல்லி, லாபம் சம்பாதிப்பதற்காக கொழுப்பு போன்றவற்றைக் கலப்படம் செய்து விற்பவர்கள், இப்பிறவியிலேயோ அல்லது மறுபிறவிகளிலோ நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கரமான சர்ம நோய்கள், குஷ்ட நோய்கள் ஆகியவற்றிற்கு ஆளாவார்கள்.

ஆதாரம்: தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம் “சாதாரண பரிகாரமாக இருக்கிறதே!” என்று எண்ணிவிடாதீர்கள்! சர்வதோஷ பரிகாரமான இதன் சக்தி மகத்தானது!

Tags :
× RELATED சுந்தர வேடம்