×

என்ன சொல்கிறது கிரகச் சேர்க்கைகள்

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

சூரிய - புதன் - சுக்கிரன்

அரசு, ஆட்சி அதிகாரத்தை பிரதிபலிக்கும் சூரியன் எப்போதும் வித்தை மற்றும் அறிவுக் கிரகமாகிய புதனுடன் சேர்ந்தும், மற்றும் கலைகள், காதல், காமம், செல்வம், அஷ்டலட்சுமி யோகத்தை அருளும் சுக்கிரனோடு இணைந்தோ அல்லது முன், பின் ராசிகளில் சஞ்சாரம் செய்வார்கள். சற்றேறக்குறைய மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் சூரியன், புதன் இருவரும் சேர்ந்து இருப்பார்கள். ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் சூரியன் இருக்கும். ராசிக்கு முன் ராசியில் புதன் இருப்பார்.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் சூரியன் இருக்கும். ராசிக்குப் பின் ராசியில் புதன் இருப்பார். இந்தக் காலச் சக்கர ஓட்டத்தில் மிகச் சிறிய மாற்றங்கள்தான் வரும். பெரும்பாலும் இந்த சூரியன், புதன், சுக்கிரன் இந்த மூவரும் முன் பின் ராசிகளில் தொடர்ச்சியாக சஞ்சாரம் செய்வார்கள். சூரியன், புதன் இருவரும் இந்த இரண்டு கிரகங்களில் சேர்க்கை நிபுணத்துவ யோகம் புதாத்திய யோகம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த இருவரின் சேர்க்கை லக்னத்திற்கு எந்த இடத்தில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து பலன்கள் அமையும்.

விளையும் புதனும் சூரியனும் விரும்பி ஒன்றில், நான்கில், எட்டில் வளையக் கூடின் மன்னவனாம் என்று பழம் பெரும் நூலான ஜாதகலங்காரம் கூறுகிறது. கண் பார்ப்பதை கை செய்யும் என்பதற்கேற்ப எதையும் சீக்கிரமாக கிரகித்துக் கொள்வார்கள். எந்த கலையும் இவர்களுக்கு எளிதில் வசப்படும் கைப் பக்குவம், கை வேலை, சொற்பொழிவு போன்றவற்றில் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது என்றே சொல்லலாம். இவர்களுக்கு பட்டப் படிப்பு என்பது மிகச் சுலபமாக கைகூடும். இவர்கள் கணிதத்தில் நிபுணர்களாக இருப்பார்கள்.

ஆடிட்டர், அக்கவுண்டன்ஸி போன்ற கணக்கு பாடங்கள் பயின்று தொழில் செய்வார்கள், நிதி ஆலோசகர்களாக இருப்பார்கள், வங்கி அதிகாரிகளாக பணிபுரியும் அமைப்பும் உண்டு. பெரிய சிக்கல்களுக்கு நுட்பமாக ஆலோசனை கூறுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எதைப் பேசினாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் சமர்த்தர்கள். சுக்கிரன் சம்பந்தப்படும்போது கலைகளில் நாட்டம் உண்டாகும்.

சினிமாத்துறையில் புகழ் பெறும் யோகம் உண்டு. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கதை, கவிதை, பாடல்கள் இயற்றும் ஆற்றல் திறமை இருக்கும். இசைத்துறையில் ஆர்வம் இருக்கும். சிறந்த பாடகர்களாக வருவதற்கு யோகம் உள்ளது. சிறந்த கலாரசிகர்களாகவும், விமர்சகர்களாகவும் இருப்பார்கள்.

சூரியன் - சந்திரன்

சூரியன், சந்திரன் இருவரும் ஜாதகத்தில் ஒரே வீட்டில் இருப்பது. அமாவாசை யோகமாகும். சூரியன் நெருப்பு, உஷ்ணம். சந்திரன் - உறைபனி, குளிர்ச்சி, இந்த இரண்டு கிரகங்களையும் சிவசக்தி சொரூபமாக குறிப்பிடுவார்கள். சூரியன் வலது கண்ணிற்கும், சந்திரன் இடது கண்ணிற்கும் ஆளுமை உடையவர்கள்.

சூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த ஆறு ராசிக்குள் சந்திரன் இருந்தால் அது வளர்பிறையை குறிக்கும். சூரியனுக்கு நேர் ஏழாம் வீட்டில் சந்திரன் இருந்தால் பூரண பௌர்ணமி. சூரியனுக்கு எட்டாம் ராசியில் இருந்து பன்னிரண்டாம் ராசி வரை சந்திரன் இருந்தால் அது தேய்பிறையைக் குறிக்கும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சேர்ந்து இருப்பது அமாவாசை. இந்த அமாவாசையும், பௌர்ணமி பூரண நிலா வெளிச்சம்.

அமாவாசை யோகத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சாமர்த்திய சாலிகளாக இருப்பார்கள். பல வகைகளில் திறமையை வெளிப்படுத்துவார்கள். பிடிவாதமாக காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்கள். தான், தன் சுகம், தன் விருப்பம், ஆசை, குறிக்கோளை எப்பாடுபட்டாவது எந்தக் குறுக்கு வழியிலாவது நிறைவேற்றிக் கொள்வார்கள். இவர்களுடைய குண நலன்களை கணிப்பது, எடைபோடுவது மிகவும் கடினமாகும். வெளிப்படையாக பேசுவதுபோல் தெரிந்தாலும் எதை மறைக்க வேண்டுமோ அதைச் சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள்.

நிழலான காரியங்கள் செய்வதில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் படைப்புத்துறையில் புகழ் அடைவார்கள். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர், கவிஞர் மற்றும் கல்லூரிப் பேராசிரியராக வருவதற்கும் இந்த அமாவாசை யோகம் கை கொடுக்கும். அமாவாசை நாளை மிகவும் சிறப்பான, சுபமான, நிறைந்த நாள் என்ற தவறான அபிப்பிராயம் மக்களிடையே பரவி விட்டது. உண்மையில் அமாவாசை திதி என்பது ஒரு சூனிய திதியாகும். அதாவது இருள் நிறைந்த நாள்.

வழிபாடுகள், நட்சத்திரங்கள், சாஸ்திர விஷயங்கள் மக்களிடையே தவறாக பரப்பப்பட்டுவிட்டது. பெரும்பாலான மக்கள் அமாவாசை நிறைந்த நாள் என்று நினைத்துக்கொண்டு பல முக்கியமான காரியங்களை செய்கிறார்கள். முக்கியமாக ஒப்பந்தங்கள் போடுவது. வாகனம் வாங்குவது, முன் பணம் கொடுப்பது. புதிய வேலைகளை தொடங்குவது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால், இது தவறான அணுகுமுறையாகும். அமாவாசை அன்று இது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது.

அமாவாசை அன்று மறைந்த நம் முன்னோர்கள், தாய், தந்தையர், உடன் பிறந்த பரம்பரை வம்சாவளியினரை நினைத்து திதி கொடுக்கலாம். அவர்கள் நினைவாக வீட்டில் விளக்கேற்றி பிரார்த்திக்கலாம். படையல் போட்டு வணங்கலாம். அன்னதானம், வஸ்திர தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், நோயாளிகளுக்கு உதவலாம். காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு பழம், கீரை வழங்கலாம். அமாவாசை அன்று அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம், மவுன விரதம் இருப்பதால் ஆன்ம பலம் அதிகரிக்கும். திருஷ்டி கழிக்க மிகவும் உகந்த நாள்.

மகா ப்ரத்யங்கிரா, பத்திரகாளி, சூலினி துர்க்கை, நீலி, திரிசூலி, பேச்சியம்மன், வாராகி போன்ற பெண் தெய்வங்கள், அய்யனார், முனீஸ்வரர், சுடலை மாடன், கருப்பண்ணசாமி, வீரபத்திரர், சங்கிலி கருப்பன், பதினெட்டாம் படி கருப்பு போன்ற உக்கிர காவல் தெய்வங்களுக்கு படையல் போட்டு வழிபடக்கூடிய நாள். இந்த நாளில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு சென்று வழிபடலாம். மகான்களை வழிபடுவதற்கு உகந்த நாள். பாம்பன் சுவாமிகள், காஞ்சி மகா சுவாமிகள், ராகவேந்திரர், சீரடி சாய்பாபா, பகவான் ரமணர், சேஷாத்திரி சுவாமிகள், யோகிராம்சரத்குமார், ஞானானந்தகிரி சுவாமிகள் போன்றோர் ஆஸ்ரமத்திற்கு சென்று தியானம் செய்யலாம்.

பௌர்ணமி திதி என்பது சந்திரனும், சூரியனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து சமசப்தமமாக பார்த்துக் கொள்ளும் நாள். பௌர்ணமி நிலவு பூரண சந்திரனின் அருள் ஒளியாகும். அம்பாளின் சக்தி சொரூப அம்சமாகும். பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். கை ராசிக்காரர்கள் என்றும் சொல்லலாம். இவர்களிடம் ஆன்ம ஞானம் மிகுந்து காணப்படும். வாக்கு பலிதம் உள்ளவர்கள். இவர்கள் தொடங்கி வைக்கும். நல்ல காரியங்கள் ஒன்றுக்குப் பத்தாக பல்கிப் பெருகும்.

இந்த நாளில் எல்லா நல்ல காரியங்கள் தொடங்கலாம், நல்ல விஷயங்கள் பேசலாம், வங்கியில் பணம் கட்டலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். பௌர்ணமி அன்று மாலை சந்திர தரிசனம் மிகவும் சிறப்பாகும். அதுவும் குறிப்பாக அம்மன், அம்பாள் கோயில்களில் இருந்து சந்திர தரிசனம் செய்வது நல்ல பலன்களை விருத்தி செய்யும். பயம், படபடப்பு, விரக்தி, சஞ்சலம், மன உளைச்சல், ஆகிய பிரச்னை உள்ளவர்கள் சந்திர தரிசனம் செய்வது நலம் தரும். மேலும், ஜாதகத்தில் சந்திரன் நீசம் 6, 8, 12ல் மறைவு, சந்திர பலம் குறைந்தவர்கள் பௌர்ணமி விரதம் இருந்து பூரண சந்திரனை தரிசிக்கலாம்.

கிரகப் பார்வை தோஷங்கள்

நல்ல பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு நல்ல எண்ணம் இருக்கும். இவர்களை கை ராசிக்காரர்கள் என்று சொல்வார்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த துவேஷமும் கொள்ளாமல் மனதார வாழ்த்துபவர்களாக இருப்பார்கள் . இப்படிப்பட்டவர்கள் தொடங்கி வைக்கின்ற எந்த சுப விஷயமும் ஒன்றுக்கு பத்தாக பல்கிப் பெருகும். நல்ல எண்ணம் உடையவர்கள் ஜாதகத்தில் லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி பலம் பெற்று இருப்பார்கள் . மேலும், லக்கினத்தையும், இரண்டாம் வீட்டையும் சுபக் கிரகங்கள் பார்க்க பிறந்தவர்கள் நல்ல எண்ணம், சொல், செயல் உடையவர்களாக இருப்பார்கள்.

கிரகங்களுக்கு பல வகையான பலம், சக்திகள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது. அதில் மிகமுக்கியமாக பார்வை பலம்தான் மிகவும் பலம் வாய்ந்ததாக முக்கிய மூல நூல்களின் பார்வை ராஜயோகத்தை கொடுக்கும் லக்னத்திற்கும், சந்திரனுக்கும் கேந்திர கோணங்களில் உள்ள கிரகங்களின் பார்வை மிகவும் சிறப்பானதாகும். கேந்திரத்திற்கு, கேந்திரம் கிரகங்கள் இருப்பது, பார்ப்பது லட்சுமி யோகம் ஆகும். சந்திரனில் இருந்து தொடர்ச்சியாக 4 அல்லது ஐந்து வீடுகளில் கிரகங்கள் இருப்பது யோக பலன்களை அதிகரிக்கும்.

சந்திரனுக்கு 6, 7, 8, 9 ஆகிய வீடுகளில் இடைவிடாது கிரகங்கள் இருப்பது சந்திராதி யோகம். குருவின் பார்வை தோஷ நிவர்த்தி குரு பார்க்க யோக விருத்தி என்பது சாஸ்திரவிதி. கேந்திராதிபதியும், கோணாதி பதியும் பார்ப்பது சிறப்பு. உதாரணமாக ஒன்பதாம் அதிபதியான கோணாதிபதியும் பத்தாம் அதிபதியான கேந்திராதிபதியும் ஒருவரை ஒருவர் பார்ப்பது ராஜயோகம். இந்த பார்வைக்கு தர்மகர்மாதிபதி யோகம் என்ற பெயரும் உண்டு. அதேபோல் நீச்ச கிரகப் பார்வை யோக அம்சத்தை தடை செய்யும்.

6,8,12 ஆம் அதிபதிகளின் பார்வை பல குழப்பங்கள், இடையூறுகள், பிரிவுகள், பிரச்னைகளைத் தரும். சனி பகவான் பார்வைக்கு அதிக சக்தி இருப்பதாக ஜோதிட நூல் தெரிவிக்கின்றன. தோஷ ஆதிபத்தியம், நீசர் சேர்க்கை, உள்ள சனி பார்வை பல கஷ்ட நஷ்டங்களை ஏற்படுத்தும். சரிவுகள், சறுக்கல்கள், மன அழுத்தம், நோய் நொடிகள், முடக்கங்கள், விபத்துக்கள், அகால மரணங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் சனி பகவானின் சாதகமில்லாத பார்வை முக்கிய காரணமாகும். இதன் மூலம் பார்வை பலம் என்ன என்பதை நாம் உணரலாம்.

ஜாதக அமைப்பும் - திருஷ்டி தோஷங்களும்

நமக்கு எல்லாம் நம் எண்ணம்போல் சரியாக நடந்துகொண்டிருக்கும்போது நல்ல யோகம், அம்சம் உள்ள நேரம் நடக்கும்போது நமக்கு செய்வினை, தீவினை, திருஷ்டி, தோஷங்கள் எதுவும் நமக்கு பெரிதாக தெரியாது. நாம் உணராத அளவில் சில சிறிய நஷ்டங்கள், பாதிப்புக்களை காட்டி விட்டுப் போய்விடும். அதேநேரத்தில் நீச்ச கிரக தசைகள், 6, 8, 12 ஆம் அதிபதி சம்பந்தப்பட்ட தசைகள், பலவீனமான கிரகங்களின் பார்வை பெற்ற தசைகள், அத்துடன் பலம் குறைந்த கோச்சார அமைப்புக்கள் அதாவது 7½ சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி, 2,7,8 போன்ற இடங்களில் ராகு, கேது இருவரும் போன்ற கோச்சார நிலைகள் என பலவகைகளில் சாதகமில்லாத கால கட்டங்கள் மாறும்போது. ஒவ்வொன்றாக தடைகள், குழப்பங்கள், நஷ்டங்கள் பிரச்னைகள் தலைதூக்கும்.

அப்பொழுதே நாம் தெரிந்து கொள்ளலாம். கோளாறான கோள்களின் ஆட்டம் இது என்று பொதுவாக 6,8,12ம் அதிபதிகளின் தசையில் 2,4,7 ஆம் அதிபதிகள் சம்பந்தப்படும்போது கெடு பலன்கள் அதிகம் இருக்கும். வழக்குகள், சொத்துப் பிரச்னைகள், விபத்துக்கள், என மன உளைச்சல் ஏற்படும். அதேபோல் ராகு, கேது, சந்திரன், சனி. சாதகமில்லாத இடங்களில் சேர்ந்து இருந்து தசைகள் நடந்தால் தோஷங்கள், தடைகள், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம்  பொறாமை,
எல்லாம் இந்த காலகட்டத்தில்தான் வேலை செய்யும். லக்கினம், லக்னாதிபதி, சந்திரன் இந்த மூன்றும் ராசி மற்றும் நவாம்சத்தில் பாதிக்கப்படும்போது தான் ஜாதக பலம் குறைந்து பாதிப்புக்கள் அதிகமாக ஏற்படுகிறது.

லக்கினம், ராசி, லக்னாதிபதி, சந்திரன் ஆகியவை பாதிக்கப்பட்டு நீச, தீய கிரக சேர்க்கைகளுடன் தசை நடைபெறும் போது உடல் ரீதியான, மனரீதியான பாதிப்புக்கள் இருக்கும். மனக்குழப்பம், தடை, எதிர்மறை எண்ணங்கள், நிம்மதியற்ற நிலை உண்டாகும். இரண்டாமிடமாகிய தன, குடும்ப, வாக்கு ஸ்தானம் சம்பந்தமாக பாதகமான தசாபுக்திகள் நடைபெறும் போது. குடும்பத்தில் நிச்சயமற்ற தன்மை, வீண் விரயங்கள், இடமாற்றம், சுப, அசுப செலவுகள், பிரிவினைகள், சொந்த பந்தங்கள் விரோதம் உண்டாகும்.

மூன்றாம் வீட்டில் அமைப்பு சரியில்லாமல் தசாபுக்திகள் நடைபெறும்போது மனக்குழப்பம், குடும்பப் பிரச்னைகள், சகோதர உறவுகள் பாதிப்பு, நரம்புக் கோளாறுகள் பாக்கியத் தடைகள் ஏற்படும். நான்காம் இடமாகிய மாதுர் ஸ்தானம் சம்பந்தமாக பாதகமான தசாபுக்திகள் நடைபெறும்போது தாயார் உடல் நலம் பாதிப்பு, கல்வியில் தடை, உடல் நல பாதிப்பு, சொத்து பிரச்னை வழக்குகள், இடமாற்றம், மருத்துவச் செலவுகள் உண்டாகும். ஐந்தாம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம் சம்பந்தமாக பாதகமான தசாபுக்திகள் நடைபெறும்போது மனக்குழப்பம், புத்திர தோஷம், பிள்ளைகள் மூலம் வருத்தம் சோகம், வீண் செலவுகள் மனோபயம் உண்டாகும்.

ஆறாம் இடம் சம்பந்தமாக கூட்டுக் கிரகச் சேர்க்கை, பார்வை சம்பந்தமாக தசாபுக்திகள் நடைபெறும்போது. தீராத நோய்கள், வம்பு, வழக்குகள், செலவுகள். தொழில் முடக்கம், இடமாற்றம், அறுவை சிகிச்சை, விபத்துக்கள் உண்டாகும். ஏழாம் இடத்துடன் பாதகமான கிரக தசாபுக்திகள் சம்பந்தப்படும்போது இவ்வாழ்வில் பிரச்னைகள், பிரிவுகள், வழக்குகள், பயண விபத்துக்கள், நண்பர்கள், கூட்டாளிகளால் பிரச்னைகள் வரும். எட்டாம் இடத்துடன் பாதகமான கிரக தசாபுக்திகள் சம்பந்தப்படும் போது மன உளைச்சல், முடக்கம், விபத்து, அடிபடுதல், களவு போகுதல், கடன்கள் ஏற்படும்.

ஒன்பதாம் இடத்துடன் பாதகமான கிரக தசாபுக்திகள் சம்பந்தப்படும் போது சொத்து பிரச்னை, தோல்விகள், தடைகள், மனோ வியாகூலம். பாக்கியத் தடைகள் உண்டாகும். பத்தாம் இடத்துடன் பாதகமான கிரக தசாபுக்திகள் சம்பந்தப்படும்போது தொழில் பாதிப்பு, முடக்கம், கடன்கள், நோய்கள், இடமாற்றம், பதவி இறக்கம். உத்யோக வகையில் பாதிப்புகள் இருக்கும். பதினொன்றாம் இடத்துடன் பாதகமான கிரக தசா புக்திகள் சம்பந்தப்படும்போது பங்காளிகளால் பிரச்னை, சகோதர உறவுகள் பாதிப்பு, கடன்கள், வழக்குகள், வருமானம் பாதிப்பு போன்றவை உண்டாகும். பன்னிரண்டாம் இடத்துடன் கூட்டுக் கிரகச் சேர்க்கை, பார்வை சம்பந்தமாக தசாபுக்திகள் நடைபெறும்போது பல வகைகளில் செலவுகள் ஏற்படும். நிம்மதியின்மை தூக்கமின்மை, அலைச்சல், பயணங்கள் விரக்தி என பலன்கள் இருக்கும்.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!