வியத்தகு வாழ்வருளும் வேதபுரிசாய்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் விளங்கக் கூடியவரும், தனது பக்தர்கள் வேண்டும் பொழுது வேண்டிய வரங்களை எல்லாம் அளித்து,  நோயுற்றவரின் நோயை குணப்படுத்தி, பசியென்று வருபவர்க்கெல்லாம் அன்னம் அளிப்பதோடு தனது  பக்தர்களுக்கு ஓர் வாழ்க்கை  வழிகாட்டியாகவும் நமக்கெல்லாம் குருவாக விளங்கும் அவதார புருஷன் பகவான் ஷீரடி சாய்பாபா தற்பொழுது பல சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய  பூமியும் புதுவையில் வேதபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் சிவனின் நாமத்தை ஆதியாய் கொண்டு “ வேதபுரிசாய் '' என்ற பெயரில்  பக்தர்களுக்கு தனது அருளாசியை வழங்கி வருகிறார்.

ஆலய நிறுவனர் திரு. மணிக்காந்தன் அவர்கள் சாய்பாபாவை தனது குருவாக ஏற்று வழிபட்டு வந்தார். சாய்பாபா வாழ்ந்த காலத்தில் அவர் செய்த  நற்செயல்களையெல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்று கருதி தனது குருவுக்கு ஒரு ஆலயம் அமைத்து அவர் வாழ்ந்த வழியில் தானும் பல  நற்செயல்களை செய்து குருவின் அருளாசியை பரிபூரணமாக பெறவேண்டும் என்று கருதி ஜூன் மாதம் 2018 ம் ஆண்டு தனது குருவிற்கு ஒரு இடத்தை  வாங்கினார், பின்பு செப்டம்பர் மாதம்1-9-2019 அன்று பூமி பூஜை செய்து ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 7-2-2020 வெள்ளிக்கிழமை அன்று  கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஓர் அதிசயம் என்னவென்றால் பாபாவின் உருவச்சிலையை எங்கு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த  வேலையில் அங்கு இருந்த ஒரு வேப்பமரம் செய்கை காட்டியபடி அசைந்தது. உடனே பாபா தனக்கு அந்த இடம் வேண்டும் என்று உத்தரவிட்டது  போல் இருந்தது உடனே அந்த  இடத்தில் இருந்த வேப்பமரத்தை அகற்றி பாபாவை அங்கு அமர்த்திவிட்டு அந்த அகற்றிய வேப்பமரத்தை அவர் பக்கத்திலேயே வைத்துவிட்டார், பின் ஆலயம் கட்டும் பணியை தொடர்ந்து துரிதப்படுத்தி ஐந்தே மாதத்தில் தனது குருவுக்கு ஒரு அழகிய ஆலயத்தை  கட்டி முடித்தார்.

ஆலயத்தில் மூலவராக விளங்கக் கூடியவர் நமது  வேதபுரி சாய்பாபா, ஷோடச கணபதிகளில் முதலாவதாக விளங்கக்கூடிய  பாலா கணபதி  சாய்பாபாவின் வலது பக்கத்திலும், செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய   மகா லட்சுமி சாய்பாபாவின் இடது பக்கத்திலும் அமர்ந்து நமக்கு  அருள்புரிந்து வருகிறார்கள். ஆலயம் கிழக்கு நோக்கி அமையப்பெற்ற தலம். ஆலய நுழைவு வாயிலில் சாய்பாபாவின் வலது புறமாக துவாரகாமாயி  அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தைச்சுற்றி வேப்ப மரங்களும், பூச்செடிகளும் நிறைந்த இயற்கைச் சூழலுடன் நமது ஆலயம் அமைந்துள்ளது.

 வேதபுரி சாய்பாபா நமது ஆலயத்தில் சிவஸ்வரூபமாக காட்சி புரிந்து வருவதால் சிவனை வழிபட்டால் என்ன பலன்களை நாம் அடைகிறோமோ,  அதே பலனை இத்தலத்தில் நமது வேதபுரி சாய்பாபா அருள் பாலித்து வருகிறார். திருமணத்தடை, புத்திரபாக்கியமின்மை, குடும்ப ஒற்றுமையின்மை,  மனசஞ்சலம், தீராத நோயால் அவதிப்படுவோர் என யாராக இருந்தாலும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து  வேதபுரி சாய்நாதரை தரிசனம்  செய்து சங்கல்பம் செய்து கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி அருள் பாலித்து வருகிறார்.குருவாரம் என்று சொல்லக்கூடிய  வியாழக்கிழமைகளில் நமது ஆலயத்தில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டு ஒரு மட்டை தேங்காயை சாய்பாபாவிடம் வைத்து  உங்களுடைய பிரார்த்தனையை சங்கல்பம் செய்து கொண்டு அந்த மட்டை தேங்காயுடன் துவாரகாமாயில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து  விட்டு அந்த மட்டை தேங்காயை அக்கினியில் சேர்த்து விடுங்கள். மட்டை தேங்காய் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் உங்களுடைய   பிரச்னையும் அந்த அக்னி மூலமாக எரிந்து சாம்பலாகி விடும். ஆலயம் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை பிறகு, மாலை 5 மணி முதல் 8:30  மணி வரை திறந்திருக்கும். வியாழக்கிழமை மட்டும் மாறுபடும்.

புதுச்சேரி - கோரிமேடு to திண்டிவனம் நெடுஞ்சாலையில், கோரிமேட்டில் இருந்து வடக்கு நோக்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ட்ரல் பட்டானூர்   (கோரிமேடு, டிராவல்ஸ் சர்வீஸ் ரோடு) தொலைபேசி எண்: 9443745846. என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

Related Stories: