×

மாசி மக நீராடல்

மாசி மாதம் என்பது கும்ப மாதம் என்று வழங்கப் படும் மாதம் ஆகும். கும்பம் என்றாலே நீர்நிலைகளைக் குறிக்கும். காலச் சக்ர புருஷனுக்கு இந்த ராசியானது 11 வது ராசி. ஜோதிடத்தில் இதனை லாப ஸ்தானம் என்று சொல்வார்கள்.ஜோதிட சாஸ்திரத்தில் ஐந்தாவது ராசியான பூர்வ புண்ணிய  ராசி சிம்ம ராசி ஆகும். இந்த சிம்ம ராசிக்கு உரிய கிரகம் சூரியன். ஆத்ம காரகனாகிய சூரியன் பதினோராம் ராசியான லாபராசியில் இருந்து தனது ராசியான பூர்வ புண்ணிய ராசியை பார்க்கும் மாதம்தான் மாசிமாதம். இந்த சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது. சந்திரன் மக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கொண்டாடப்படுகின்ற உன்னதமான விழா மாசி மக திருவிழாவாகும்.

சிம்ம ராசியில் குரு பகவான் வருகின்ற பொழுது கொண்டாடப்படும் திருநாள் மகாமக திருநாளாகும். இது 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும். சாந்த் ராயான ரீதியில் மாசி மாதத்திற்கு மாகம் என்று பெயர். பௌர்ணமியில் மக நட்சத்திரம் சேருவதால் மாகம் என்று அழைக்கப்பட்டு பின் மகமாக மாறியது என்பார்கள். அகம் என்றால் பாவங்கள் தோஷங்கள். மா என்றால் இல்லை. பாவங்களை போக்கும் என்பதினால் இது  மாகம் எனப்படுகிறது.கடலில் சென்று இறைவனுக்கு நீராட்டி தானும் நீராடுதல் உடல் நலத்திற்கும் உயிர் நலத்திற்கும் நன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரங்களும் ஆகம சாஸ்திரங்களும் கூறுகின்றன. இதற்குப் புராணரீதியான ஒரு கதையும் உண்டு.

பஞ்சபூதங்களில் நீர் முக்கியமானது. நீர் இன்றி அமையாது உலகம். இந்த நீருக்கு அதிபதியாக வருணனைக் குறிப்பிடுவார்கள். இந்த வருணன் ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு நலிந்தான். மழை கொடுக்க வேண்டிய கடவுள் பலமின்றி இருந்ததால் உலகம் வாடியது. எங்கு பார்த்தாலும் வறட்சி, பஞ்சம். உயிர்களும் உணவின்றி வாடின. ஒருவனுடைய குற்றங்கள் நீங்கி தூய்மை பெற வேண்டும் என்று சொன்னால் நீராட வேண்டும்.அது மன உறுதியோடும் பக்தியோடும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் மனக் குற்றங்களும் நீங்கும். புறந்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்று வள்ளுவர் இதனைக் குறிப்பிடுகின்றார். தண்ணீர்க் கடவுளான வருணனுடைய மாசு தீர இறைவனை வழிபட்டார் .எல்லாக் குற்றங்களையும் நீக்கும் தண்ணீரின் குற்றத்தை நீக்கி அருளினார் இறைவன். இறைவனுக்குத் தீர்த்தன் என்றே ஒரு பெயர் உண்டு. தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றொரு சரண் இல்லை என்று எண்ணி

‘‘தீர்த்த னுக்கே தீர்த்த மனத்த னாகி குருகூர் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து
நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

கருட புராணத்தில் கடல் நீராட்டம் என்பது எல்லா நாட்களிலும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் பாவம் என்று சொல்லுகின்றது. ஆனால், கடலில் மக்கள் நீராடுவதற்கு சில நாட்களை கருடபுராணம் அனுமதிக்கிறது. அதில் மிக உயர்வான நாளாகவும், அவசியம் கடலில் நீராடி குற்றங்களைப் போக்கிக் கொள்ள வேண்டிய நாளாகவும் மாசி மகத்தைக் குறிப்பிடுகிறது. அமாவாசை முதலிய  நாட்களிலும் இது அனுமதிக்கப்பட்டாலும், மாசி மகத்திற்கு உள்ள சிறப்பு வேறு நாள்களுக்கு இலை. காரணம் இறைவனும் அதே கடற்கரைக்கு வந்து தீர்த்தமாடும் நாள் மாசி மக நாள் அல்லவா! அவர் தீர்த்தமாடிய தீர்த்தத்தில் மக்கள் தீர்க்கின்ற வாய்ப்பைப் பெறும் நாள் அல்லவா! மாசி கடலாடுதல் என்பது நம்முடைய  இந்திய ஆன்மீக மரபிலும் தமிழ்நாட்டுத் தொன்மையான பழக்கவழக்கங்களிலும் இருந்து வரும் உன்னதமான விழாவாகும்.

மதுரைக் காஞ்சி எனும் சங்கநூலில் அதன் ஆசிரியா் மாங்குடி மருதனார் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றிக் குறிப்பிடுகின்றார். புறநானூற்றுப் பாடலில் சங்ககாலப் பாண்டிய மன்னன் முந்நீா் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது பாடல் காணப்படுகிறது.திருஞானசம்பந்தா் தன்னுடைய சென்னை மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார். சைவத்திலும் இறைவனை தீர்த்தன் என்றே போற்றுவர்.
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்
நீர் ததும்பு உலாவு கங்கை நெடுமுடி நிலாவவைத்தாய்
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலைஉளானே
தீர்த்தனே நின் தன் பாதம் திறம் அலால் திறமிலேனே
 - என்பது தேவாரம்.

கடலாடுதல், சிறப்பாக கடலும் ஆறும் சங்கமிக்கும் சங்கமத்தில் நீராடுதல், பெரும் புண்ணியத்தை தரும் என்று குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம்.பூம்புகாருக்கு அருகில் காவிரி நதி சங்கமிக்கும் சங்கமுகத்தில் பெரும்பாலான மக்கள் அன்று வந்து நீராடுவர். நதிகளெல்லாம் சங்கமிக்கும் கடலில் இந்த தீர்த்தவாரி மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. மக்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி கடலில் இறைவன் தீர்த்தவாரி கண்டருளிய நீரில் தாங்களும் நீராடுவது பாவங்களைப் போக்கி உன்னதமான வாழ்வைத் தரும். என்பதை சிலப்பதிகாரம் கடலோடு காவிரி சென்று அலைக்கும் மூன்றில் மடல் அவிழ் நெய்தல் காணம் தடம் உரை என்று தெரிவிக்கிறது.திருவரங்கத்தில் கி.பி. 1531-ஐ சார்ந்த விஜயநகர காலக் கல்வெட்டின் மூலமாக உறையூரில் நடைபெற்ற மாசிமக விழா பற்றிய செய்தியை அறியமுடிகிறது.

பேராசிரியர் கோகுலாச்சாரி

Tags :
× RELATED காமதகனமூர்த்தி