என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

 - கார்த்திக், சென்னை - 74

தங்கள் மகன் பிறந்தது ஆடி மாதம் - மிருகசீரிஷ நட்சத்திரம் - ரிஷப ராசி - தனுசு லக்னம் - லக்ன பாதசார நட்சத்திரம் - மூல நட்சத்திரம் சாரம். உங்கள் மகனுக்கு தற்போது குரு தசை சுக்கிர புக்தி நடக்கிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் ராகு - கேது தோஷம் இருக்கிறது. ஏதேனும் ஒரு அம்மன் கோயிலில் நாகதேவதை முறைப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஆயுசு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது. குல தெய்வத்தின் கிருபையாலும் - முன்னோர்களின் ஆசிகளினாலும் இந்த வருடத்திலேயே திருமணம் சிறப்பாக நடைபெறும்.

வரும் பெண் சொந்தமில்லை, அசல். ஒரே பெண்ணாக இருக்க மாட்டாள். நல்ல கல்வி - படித்த பெண் - வேலைக்குச் செல்லும் பெண்ணாக வருவாள். வடக்கு மேற்கு திசையிலிருந்து பெண் வருவாள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சந்தான பாக்கியம் உண்டு. செவ்வாயும் பலமாக இருப்பதால் இவரது திருமணம் முடிந்தவுடனேயே இவருடைய சகோதரருக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். உங்கள் உடல்நிலையை பொறுத்தமட்டில் இனி வரும்காலம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

?என் மகனின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலையாக உள்ளது. இவரின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

- வாசகர், கும்பகோணம்.

உங்கள் மகன் பிறந்தது கார்த்திகை மாதம் - உத்திரட்டாதி நட்சத்திரம் - மீன ராசி - கடக லக்னம் - லக்ன பாதசாரம்: ஆயில்யம். தங்கள் மகனுக்கு ஆயுசு தீர்க்கம் - ஆரோக்கியம் சிறப்பு. உங்கள் மகனுக்கு ப்ரஸ்ணம் பார்த்ததில் வந்திருக்கும் லக்னம்: கடகம். குலதெய்வ அனுக்கிரகம் - முன்னோர்கள் ஆசிகள் உண்டு. ஜாதகப்படி தந்தையாருக்கு கண்டம் காண்பிக்கவில்லை.

அவர் இறந்ததற்கு காரணம் அவருடைய ஜாதகமே. வேறு எந்த தோஷமுமில்லை. உங்கள் மகன் ஜாதகம் சிறப்பாக இருக்கிறது. அவரது எதிர்காலம் நன்றாக இருக்கும். குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் மாந்தியால் தோஷம் ஏற்படாது. புதன் தசை செவ்வாய் புக்தி நடக்கிறது. கல்வி ஸ்தானம் மிகவும் பலமாக இருக்கிறது. ஆடிட்டிங் - ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கல்வியைப் படிப்பார். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

 

?என் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறதா?

- M.S, திருப்பத்தூர்.

நீங்கள் பிறந்தது ஐப்பசி - ரேவதி - மீன ராசி - துலா லக்னம் - ஸ்வாதி 1ம் பாதம். உங்களுக்கு சுக்கிர தசை சுய புதி நடக்கிறது. முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. பரிகாரம் எதுவும் தேவையில்லை. ஏப்ரல் 2021க்குப் பிறகு திருமண காலம் பிறக்கிறது. வரும் பையன் அசலில் வருவான். வரும் பையனுக்கு உடன் பிறந்தோர் உண்டு. நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருப்பான். கை நிறைய சம்பளம் வாங்குவான். சொந்த வீடு மனை உண்டு.  சந்தான பபிராப்தி உண்டு. திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

 

?எனக்கு எப்போதுதான் நல்ல காலம் வரும்?

- A.j. தர்மபுரி.

நீங்கள் பிறந்தது வைகாசி மாதம் - உத்திராடம் நட்சத்திரம் - மகர ராசி - கன்னியா லக்னம் - சித்திரை - 2ம் பாதம். சனி தசையில் சுக்கிர புத்தி நடக்கிறது. கிட்டத்தட்ட 12 வருடங்களாக உங்களுக்கு நேரம் சரியில்லை. இனி வரும் காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தைரியமாக இருங்கள். வருடத்திற்கு ஒருமுறை சத்ரு சம்ஹார ஹோமம் செய்யுங்கள். ஒரு முறை திருச்செந்தூர் சென்று வழிபட்டு வாருங்கள். நன்மையே நடக்கும்.  

?எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்?

- சஞ்சீவி, திருச்சி

நீங்கள் பிறந்தது பங்குனி மாதம் - உத்திராட நட்சத்திரம் - மகர ராசி. மகர லக்னம் - அவிட்டம் 2ம் பாதம் சாரம். ராகு தசை சுக்கிர புத்தி நடக்கிறது. ராகு பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கு தற்போதைய சூழலில் வரும் மே மாதத்திற்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும். வரும் பங்குனி மாதத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சண்டி ஹோமம் செய்யுங்கள். வருடத்திற்கு ஒருமுறை செய்வது நன்மையைக் கொடுக்கும். குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவானுக்கும் இதே பரிகாரம் சிறப்பான பலனைக் கொடுக்கும். திருமணத் தடை விலகும்.

 

?வீடு முழுவதும் எதிர்மறை எண்ணங்களாக இருக்கிறது? என்ன பரிகாரம்?

- ஸ்ரீதேவி - திருநெல்வேலி.

விசாகம் நட்சத்திரம் - துலா ராசி - விருச்சிக லக்னம். ப்ரஸ்ணம் பார்த்ததில் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த இடமாக உங்கள் இல்லம் இருக்கிறது. பொதுவாக நமது முன்னோர்கள் நமக்கு ஏற்படும் எதிர்மறையான எண்ணங்களை அகற்ற இயற்கை ரீதியிலான அருமையான பரிகார முறைகளை நமக்கு சொல்லித் தந்திருக்கின்றனர். அதில் ஒரு முறையை நான் இப்போது சொல்லப் போகிறேன். முதலில் கோமியம் எடுத்து வீடு முழுவதும் துடைத்து விடவும்.

பின் உப்பு - மஞ்சள் கலந்த நீரை வீடு முழுவதும் தெளித்து விடவும். பால் சாம்பிராணி - வெள்ளை குங்குலியம் - தசாங்கம் - வெட்டி வேர் - பச்சைக் கற்பூரம் - ஆகியவற்றை கடையில் வாங்கி இடித்து பொடியாக்கி புகை போடவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். மேலும், வீட்டில் தினமும் மண்அகல் விளக்கில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கவும்.

பெருங்குளம்

ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,

மயிலாப்பூர், சென்னை - 600 004

Related Stories: