குழந்தை வரம் தரும் சுலபமான கிருஷ்ணர் வழிபாடு

நம் வாழ்க்கையில் எவ்வளவோ செல்வச் செழிப்பினை பெற்றிருந்தாலும் அந்த செல்வங்கள் எல்லாம் ஒரு குழந்தை செல்வம் இல்லாமல் பரிபூரணம் ஆகாது. நமக்கு வாரிசாக ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகில் ஏராளம். கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள் கூட ஒரு குழந்தைக்காக தவம் இருக்கிறார்கள்.

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குழந்தை இல்லை என்றால் மருத்துவர்களிடம் சென்று தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக சிகிச்சையின் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்கிறோம். சிலருக்கு மருத்துவர்களிடம் சென்றும் கூட குழந்தை பாக்கியம் இல்லை என்ற கவலை இன்றளவும் இருந்து தான் வருகிறது.

உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறப்பதில் தாமதம் இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களினால் கூட தாமதம் இருக்கலாம். குழந்தை வரத்தை நாம் பெறுவதற்கு ஏதாவது ஒரு தோஷமானது ஜாதகத்தில் இருந்தால் அதை நீக்க ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அந்த மகா விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் குழந்தை வரத்தை பெற முடியும்.

கிருஷ்ணனின் குழந்தைப் பருவப் படத்தினையோ அல்லது திரு உருவ சிலையையோ வீட்டில் பூஜை அறையில் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு துளசி மாலை அணிவித்து கொள்ள வேண்டும். கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணையையும் நைவேத்தியமாக படைக்க வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபமும் ஏற்றி வைக்கப்படவேண்டும்.

கிருஷ்ணனின் திரு உருவ படத்திற்கு முன்னால் ஒரு சிறிய மனபலகையின் மீது அமர்ந்து அந்த கிருஷ்ணனை பிரார்த்தனை செய்து கொண்டு குழந்தை வரத்தை எனக்கு தரவேண்டும் என்பதை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு கிருஷ்ணருக்கு உரிய மந்திரமான இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் நமோ பகவதே ஜகத்ப்ரஸீதயை நமஹ’. இந்த மந்திரத்தை பெண்கள் தினம்தோறும் 108 முறை உச்சரிக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து அந்த கிருஷ்ணனை வழிபட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். ஆண்களாக இருந்தாலும் இந்த பூஜையை செய்வதில் தவறு இல்லை. முடிந்தவரை இந்த பூஜையை சூரிய உதயத்திற்கு முன்பு செய்வது நல்லது. இந்த பூஜையை நீங்கள் தொடங்கிய சில நாட்களிலேயே கருவுற்றாளும் இந்த பூஜையை பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.

உங்கள் குழந்தை கருவில் நன்றாக வளரும் வரை இந்த மந்திரத்தை உச்சரிப்பது உங்கள் கருவிற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். உங்கள் குழந்தையும் அந்த மாயக் கண்ணனை போல நல்ல ஆற்றலை கொண்டு பிறப்பதற்கும் இந்த மந்திரமானது உபயோகமானதாக இருக்கும். ஆனால் நீங்கள் மருத்துவரிடம் குழந்தைப் பிறப்பதற்காக சிகிச்சைக்கு செல்பவர்களாக இருந்தால் அதை நிறுத்தக் கூடாது. குழந்தை பெறுவதற்காக மருத்துவர்களால் கொடுக்கப்படும் மருந்தினை கிருஷ்ணனின் பாதங்களில் வைத்துவிட்டு சாப்பிட்டு வாருங்கள்.

உங்களின் மருத்துவ முயற்சியோடு இறைவனையும் சேர்த்து வழிபடும் போது நல்ல பலன் கிடைக்கும். முழுமையான நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வாருங்கள். தாய் தந்தை இல்லாத ஏதாவது ஒரு குழந்தையின் படிப்பிற்கான செலவினை நீங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் கூட நீங்கி விடும் என்கிறது சாஸ்திரம்.

Related Stories: