×

பழ தல விருட்சங்கள்

ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.திருவையாற்றிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சங்கம க்ஷேத்திரம் எனும் திருக்கூடலூர். ஆடுதுறைப்பெருமாள் அருளும் இத்தலத்தின் தலவிருட்சம் பலாமரம்.ஜம்பு முனிவரால் வளர்க்கப்பட்ட வெண்நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது, ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்காவல். இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரரை நவகிரக ஜன்னல் என்ற அமைப்பின் மூலம் தரிசித்த பின்னரே ஆலய வலம் வருவது நடைமுறையில் உள்ளது..

நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் தலவிருட்சமாகும். காழிச்சீராம விண்ணகரம் எனும் சீர்காழி தாடாளன் ஆலயத்தின் தல விருட்சம் பலாமரம். இத்தல பெருமாளின் திருவடியின் கீழ் மகாபலியின் பேரன் நமுச்சியை தரிசிக்கலாம்.தஞ்சாவூர் திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயத்தில் கதலிவாழை மரமே தல விருட்சம். பங்குனி, புரட்டாசிமாத பவுர்ணமி தினங்களிலும் அதற்கு முன்பின் தினங்களிலும் சந்திரன் தன் கிரணங்களால் இத்தல ஆபத்சகாயரை ஆராதிக்கின்றார்.

திருச்சி மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில், பெயருக்கேற்றபடி (‘வடமொழியில் ஆம் என்றால் மாம்பழம்) மாமரமே தலவிருட்சம். இத்தல கோஷ்டத்தில் அருளும் துர்க்கை, தன் காலடியில் மகிஷன் இல்லாமல் அருள்வது அபூர்வமானது. திருநீலக்குடி மனோக்ஞ்ய நாதசுவாமி ஆலயத்தில் வன்னி, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய ஐந்து மரங்கள் தலமரங்களாகத் திகழ்வதால் பஞ்சவில்வவனேசர் என ஈசன் வணங்கப்படுகிறார். தற்போது ஆலயத்தில் பலாமரமும் ஆறாவது தல மரமாகத் திகழ்கிறது.

திருவையாற்றுக்குக் கிழக்கே சந்திரன் வணங்கி பேறுபெற்ற திங்களூர் கயிலாய நாதர் ஆலயத்தின் தலவிருட்சங்கள் வாழையும் வில்வமும். அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறக்க திருநாவுக்கரசர் ஒன்றுகொலாம் பாடி அவனை பிழைக்கச் செய்த தலம் இது. நாகராஜனுக்கு திருமால் திருவருள் புரிந்த நாகப்பட்டினத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளை அழகியார் என ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர். இங்கு தல விருட்சம், மாமரம்.

திருக்கழுக்குன்றத்தின் தல விருட்சம் வண்டுவகை வாழையாகும். ஐந்தாம் திருவிழாவில் வாழை மரங்கள் கட்டிய சப்பரத்தில் வேதபுரீஸ்வரர் திரிபுரசுந்தரியுடன் எழுந்தருள்வார். அச்சேவை கதலீவிருட்ச சேவை எனப்படுகிறது. திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரால் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி, காய்த்த அற்புதம் நடந்தது. அந்த பனைமரமே ஆலயத்தின் தல விருட்சம். திருவோத்தூர் தலபுராணத்தில் இப்பனைமரம் ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் குறும்பலாவே தலவிருட்சம். அந்த மரத்திற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற குற்றாலக் குறவஞ்சியிலும் இம்மரத்தின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கரம்பனூர் எனும் உத்தமர் கோயிலில் கதலி வாழையே தலமரமாக உள்ளது. இத்தலம் சப்தகுருஸ்தலமாக போற்றப்படுகிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலில் பரசுவில்வம், வன்னி, உந்துவில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு போன்றவற்றோடு நெல்லிக்கனியும் தல விருட்சமாக உள்ளது. இத்தல ஈசனின் லிங்கத்திருமேனியில் ஏழு சடைகள் உள்ளன.

பத்ரிநாத் ஆலயத்தில் இலந்தைமரமே தலவிருட்சம். இந்த பத்ரி நாராயணனின் சந்நதியில் ஏற்றப்படும் விளக்கு, பனிக்காலத்திற்காக 6 மாதங்கள் மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டாலும் எரிந்துகொண்டிருப்பது அதிசயம். திருமால் நின்றும், இருந்தும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தன் அழகுத் திருக்கோலங்களை பக்தர்களுக்குக் காட்டியருளும் திருக்கோஷ்டியூரின் தலவிருட்சம் பலாமரம். ராமானுஜர் ஓம் நமோநாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரத்தை பக்தர்களுக்கு உபதேசம் செய்த தலம் இது.

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சமான மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் கனிகள் தரும் அதிசய மரமாகும். புதுக்கோட்டை திருமெய்யம் சத்யமூர்த்திப்பெருமாள் ஆலயத்தில் பலாமரம் தலவிருட்சமாக விளங்குகிறது. மணவாளமாமுனிகள் தன் இளமைக்காலத்தில் வாழ்ந்த தலம் இது. திருச்சிக்கு அருகே திருப்பைஞ்ஞீலியில் வாழை மரமே தலவிருட்சம். திருமணத்தடை உள்ளவர்களுக்கு இங்கு வாழைமர பூஜை செய்து அந்த தடையை நீக்குகின்றனர்.

கார்த்திக்

Tags :
× RELATED திருவெண்காட்டில் பிரம்மவித்யா!