திருவெண்காடு
சூசகமாகவும், சூட்சுமமாகவும் பேசுவதில் வல்லவர்கள் நீங்கள். விழி அசைவிலேயே ஆளை எடைபோடுவதில் வல்லவர்கள் நீங்கள்‘‘தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவை உண்டு தான் உண்டு’’ என்கிற கவிதை வரிபோல சுயநலமாக இருக்காமல், எதிர் வீடு, பக்கத்து வீடு என்று எல்லாருக்கும் உதவுவீர்கள். அதேநேரம் கண்டிக்கவும் தயங்க மாட்டீர்கள். எல்லா விஷயங்களிலும் சாதூர்யமாக நடந்துகொள்வீர்கள் பள்ளியில் படிக்கும்போது ஏதாவது ஒன்றில்தான் ஒழுங்காக படிப்பீர்கள். ஆசிரியர் அருகே அழைத்து ‘‘ சரியான புத்திசாலி நீ. கொஞ்சம் சில விஷயங்களை குறைச்சுக்கறது நல்லது’’ என தோளில் கைபோட்டு பேசினால் அந்த சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்குவீர்கள்.
புதன் என்றால் புத்திசாலித்தனம்தான். அப்பொழுது எல்லாவற்றிலுமா என்றால் இல்லை என்பது துணிபு. ஆனால், ஏதோ ஒன்று உங்களுக்குள் இருக்கும். அந்த ஒன்று உங்களைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இதுதான் புதனின் விஷயம். குடும்பத்தில் தன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தீர்மானமாக இருப்பீர்கள். தன் காலத்திற்கு பிறகு மாறிவரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க முடியுமா என்று சந்ததிகளை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். மிதுனத்தில் புதன் ஆட்சி என்றால், கன்னியில் புதன் உச்சம். அதனால் தன்னுடைய திறமையை தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், தாமதிக்காது உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி நடக்கும் வெளிச்சத்திற்கு வராத அவலங்களை தட்டிக் கேட்பீர்கள். ராசிநாதனும், பத்துக்குரியவனும் புதனாகவே வருவதால் தொடர்ந்து எங்கேயும் வேலை பார்க்க மாட்டீர்கள். சிறியதாக மரியாதைக் குறைவு ஏற்பட்டால் வேலை மாறுவீர்கள். சுய தொழிலை விரும்புவீர்கள். இருக்கும் வேலையில் பணம் கிடைத்தாலும், மனசுக்கு பிடிக்கும் வேலைக்கு முக்கால் பணம் வந்தாலும் முக்கியத்துவம் தருவீர்கள். தொடர்ந்து தொழிலாளியாக இருக்க மாட்டீர்கள். உங்களின் ராசியின் இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். அதனால், சோர்வில்லாமல் பேசுவீர்கள்.உங்களின் மூன்றாம் இடத்தின் அதிபதி செவ்வாயாக வருகிறார். புதனுக்கு பகைக்கோள்தான். மூன்றாமிடம் இளைய சகோதர, சகோதர ஸ்தானமாக வருவதால் ‘‘தான் நேசிக்கும் அளவுக்கு அவர்கள் இல்லையே’’ என ஆதங்கப்படுவீர்கள். மூன்றாமிடம் ஆள் அடிமை, புகழ் போன்றவற்றையும் பேசும். வேலையாட்கள் நிறைய அமைந்தாலும் எமர்ஜென்ஸி நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். நான்காம் இடமான தாய் ஸ்தானத்திற்கு குரு அதிபதியாக வருகிறார். அதனால், தாயாருக்கு சிலை வைக்காத குறைவுதான். தெய்வத்தை வணங்க மறந்தாலும், தாயை மறக்காது வணங்குவீர்கள். குருபகவான் அதிபதியாக வருவதால் தாயாரிடம் பக்தியும், நேசமும் இருக்கும். அதே குருபகவான் உங்களுக்கு பாதகாதிபதியாக வருவதால் கொஞ்சியே கெடுப்பார்கள். ஐந்துக்குரிய இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குரியவனாக சனிபகவான் வருகிறார். உங்களின் ராசிநாதனான புதனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்கள் உங்களின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவார்கள். உங்களுடைய வாழ்க்கைத்துணை அதிபதியாக குரு பகவான் வருகிறார். அது உபய ராசியாக இருப்பதால் ஏழாமிடம் பாதக ஸ்தானமாக வருகிறது. உங்களின் எல்லா விஷயங்களுக்கும் எதிராக வேறொரு கருத்தை வைப்பார்.கன்னிராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார்கள். தனக்கென்று இமேஜ் வைத்திருப்பார்கள். கோபம் வந்தால் கூட சில நொடிகளுக்குள் அடங்கி விடும். ஆனால், முக்கிய நட்புகள் அதில் காணாமல் போகும். உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும் நீங்கள் செல்ல வேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனி சந்நதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் சடாரென்ற கோபத்திற்கு இந்த தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும், ஞானபலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம், மயிலாடுதுறை, பூம்புகார் போன்ற ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்கு செல்லலாம்.