சுகம் தரும் சூரிய துதி பொங்கலன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும்பொழுது, மற்ற நாட்களில் காலை நேரம் சூரிய உதயத்தின்பொழுதும் இத்துதியை வணங்கினால் வாழ்க்கை வளமாகும்.
‘‘சுகத்தை கொடுக்கும் சூரியா போற்றி
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி
நவகிரகத்தின் நாயகா போற்றி.’’
ஆந்திர பகுதியில் பொங்கல்
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் அன்று கொலு வைத்து மகிழ்கிறார்கள். இந்த கொலுவில் உழவர், உழக்கு, ஏர் முதலிய பொம்மைகள் முக்கியமாக இடம் பெறும்.
கர்நாடகா, ஆந்திர பகுதிகளில் பொங்கல் திருநாளன்று ஒருவரையொருவர் சந்திக்கும்போது வெல்லம் கலந்த பருப்பு உருண்டைகளை பல வண்ணங்களில் செய்து ஒரு தட்டில் கரும்பு வெற்றிலையுடன் வைத்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்வர். சங்கராந்தி திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் திருநாளில் ஒரு விளக்கில் நல்லெண்ணெயும் இன்னொரு விளக்கில் பசு நெய்யும் இட்டு தீபம் ஏற்றி வழிபடும் விரதம் ‘சங்கராந்தி விரத தீபோத்யா பணம்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த விரதம் கடைப்பிடித்தால் சிவபெருமான், திருமால் இருவரின் அருள் கிட்டும். வேண்டியது நிறைவேறும். எடுத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
மாட்டுப் பொங்கல்
தங்களுக்காக உழைத்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்னாள் எல்லாம் தரவல்லது பசு என்பதை ‘காமதேனு’ மூலம் வேதம் உணர்த்துகிறது. அனைத்து தேவர்களும் எல்லா உலகங்களும் பசுவிடம் உள்ளதாக ஐதீகம். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, கழுத்தில் மாலையிட்டுக் கொண்டாடி, தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச்செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.
கனுப் பொங்கல்
தங்கள் சகோதரர்கள் நலம் கருதி, பெண்கள் கொண்டாடும் இது. வெட்ட வெளியில், மொட்டை மாடியில் கோலமிட்டு, இலை பரப்பி வண்ண சாத உருண்டைகளை வைத்து கூடவே வெற்றிலை, பாக்கு கரும்பு கனுப்பழம் வைத்து அவற்றை காகங்களுக்கு அர்ப்பணிப்பார்கள். ‘‘காக்கா பிடி வைச்சேன், கனுப்பிடி வைச்சேன். உன் கூட்டம் கலைந்தாலும், என் கூட்டம் கலையக்கூடாது’’ என்று உரக்கச் சொல்லித் தம் உறவை வலுப்படுத்திக்கொள்வார்கள்.
காணும் பொங்கல்
பொங்கல் விழாவை கொண்டாடிய பின் மக்கள் அனைவரும் நோன்பு நோற்று, அன்று முழுவதும் மகிழ்ச்சி திருநாளாகக் கொண்டாடுவார்கள். தத்தமது குடும்பத்துடன் வீட்டை விட்டு புறப்பட்டு, உறவினர்கள் நண்பர்களை கண்டு வரும் குதூகலமான நாள். கடற்கரை, மிருகக்காட்சி சாலை போன்ற பொது பொழுதுபோக்கு இடங்களில் மகிழ்ச்சி பொங்க மக்கள் நிறைந்திருக்கும் நாள்.
சூரியனின் ‘பி.ஏ.’
சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு ‘சப்தா’ என்று பெயர். சப்தா என்றால் ஏழு... ஏழு குதிரைகள் சூரியனின் தேசார இழுத்துச் செல்கின்றன. ராசி விட்டு ராசி சஞ்சாரம் செய்வதே சூரியனின் தொழி. இதனால் ஆற்றலுடன் ஓடும் சுபாவம் கொண்ட குதிரையை வாகனமாகக் கொண்டிருக்கிறார். சூரிய லோகத்தில் தண்டி, பிங்கலின் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டியே, சூரியனுக்குரிய நித்ய கர்மாக்கள். (தினமும் நடக்க வேண்டிய பணிகள்) வகுத்துக் கொடுப்பவர். இன்றைய நடைமுறையில் சொல்வதானால் சூரிய தேவனின் ‘பெர்சனல் அசிஸ்டன்ட்’. பிங்கலன் காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார். சூரிய புராணத்தில் இத்தகவல் உள்ளது. வட அமெரிக்காவில் உழைக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய நடனம் நடத்தப்படுகிறது. பீகாரில் தீபாவளியை அடுத்து ஐந்தாவது நாளில், நதிக்கரைகளில் சூரிய வழிபாடு செய்கிறார்கள். சூரியனே ஆதிகால கடவுளாக மக்கள் கண்ணுக்குத் தெரிந்தார். எனவே அவரை ‘ஆதித்யன்’ என்று அழைத்தனர்.
தை வெள்ளியும் தை அமாவாசையும்
தை வெள்ளியன்று விரதமிருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக்காப்பு வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். தை அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். வீட்டில் தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும். கும்பகோணம் சாரங்கபாணி ஆலய தாயார் படிதாண்டா பத்தினியாக இருப்பார். காணும் பொங்கல் அன்று மட்டும் தாயார் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து கனுப்பிடி வைப்பர். அப்போது பெண்கள் பக்தியுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.
மகா பொங்கல்
சங்கராந்தி என்ற சொல்லில் ‘இராந்தி’ என்பது மாறதலைக் குறிக்கும். சங்’இராந்தி என்றால் நல்ல மாறுதல் எனப் பொருள்படும். சங்கராந்தியன்று அன்பு என்ற இனிப்பையும், என் என்ற சிநேக உணர்வையும் ஒன்றுபடுத்தி எள்ளும், வெல்லமும் சேர்ந்து வழங்கும் வழக்கம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளது. கர்நாடகத்தில் மங்களூரு நகரில் கத்ரிமலைப் பகுதியில் கத்ரி மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கதலிதான் கத்ரியாக மாறிவிட்டது. இங்குள்ள சிவலிங்கம், கிணற்றில் இருந்த சுயம்புலிங்கமாக எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் அன்னப்பா, மலை ராயா என இரு தெய்வங்களுக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன. வருடத்தில் ஒருநாள் மகா சங்கராந்தி அன்று மட்டும் இந்த சந்நிதிகளின் கதவுகள் திறக்கப்பட்டு தீபாராதனை நடக்கும். பிறகு, மீண்டும் அடுத்த மகா சங்கராந்தியின்போதுதான் திறக்கப்படும்.
தை கிருத்திகை
உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் (ஆடிக்கிருத்திகையைப்போல்) தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்து நடக்கும். முக்தியையும் கொடுப்பேன்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்திருக்கிறார்.
பைரவ விரதம்
தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை குறித்துச்செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க்கிழமை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச்செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் ‘செவ்வாய்’ எனப்பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.