×

மூவாக்னி

உயிர்களின் உடலில் மூவகையான அக்னிகளும் உள்ளன. சிவாச்சாரியார், சிவபூசையில் வளர்க்கப்படும் யாகத்தீயுடன் இந்த மூன்று அக்னி தன்னுடலில் இருந்து எழுந்து கலப்பதாகப் பாவனை செய்து அதற்கான மந்திரங்களை ஓதுவதைக் காணலாம். இது பூதாக்கினி, பிந்துவாக்கினி, ஜடராக்கினி எனப்படும். பூதாக்கினி  என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கையாலான உடலில் நிறைந்து நின்று அதனைச் செயல்படவைப்பதாகும்.

இதனால் குருதி யோட்டம், மூளைசெயல்படுதல் முதலியன நன்கு நடைபெறுகின்றன. இதில் மாறுபாடு உண்டானால் உடலில் நோய்கள் உண்டாகும்.  பிந்துவாக்கினி  என்பது உயிருடன் இணைந்து  நிற்பது. இதனால் உயிர் செயல்படுகின்றது. எண்ணத்திலும், உணர்ச்சியிலும் உண்டாகும் மாறுபாடுகளுக்கு இதுவே காரணம். இதில் மாறுபாடு உண்டானால் ஆவி சோர்ந்து மனஉளைச்சல் உண்டாகும்.

ஜடராக்கினி என்பது வயிற்றுக்குள் இருப்பது. இது நாம் உண்ணும் உணவை நன்கு ஜீரணிக்கச் செய்து அதன் சக்தியை, உடலோடு கலக்கச் செய்வதாகும். இதனில் மாறுபாடு உண்டானால் ஜீரணசக்தி மந்தமாகி சக்தி குறைந்து போகும்.உயிர் உடலில் தங்கி வாழ இந்த மூன்று அக்னிகள் அவசியமாதலின் இதனை உயிர்த்தீ எனவும் ஜீவாக்கினி எனவும் கூறுவர். இவை சிவனருளால் உடலில் நின்று உடலையும் உயிரையும் ஓம்புவதாகும்.

தொகுப்பு: அபிநயா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?