அண்ணாமலையானுக்கு அரோகரா!

சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள்.

கிரிவலத்தின் பலன் திருவண்ணாமலையில் 48 நாட்கள் தங்கி அதிகாலை வேளையில் தம்பதி சமேதராக மலைவலம் வந்தால் மகப்பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும். அமாவாசை அன்று மலை வலம் வந்தால் எப்பேர்ப்பட்ட கவலையும் நீங்கும்.

 திருவண்ணாமலையின் அமைப்பு

திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.

இரண்டாவது பெரிய கோபுரம்

திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.  தெற்கு திசை கோபுரத்தை திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்தை பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் அழைக்கிறார்கள்.

அண்ணாமலை மகாதீபம்

2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். திருவண்ணாமலை மட்டுமல்ல மலை மீது கோயில் கொண்டுள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும்கூட மகாதீப விழா நடைபெறும். இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் வாழ்வில் நலமும் வளமும் தழைப்பது உறுதி. திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.

திருவண்ணாமலை தீபம் ஏற்றும் முறை

திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். பத்தாம் நாள் மலைமீது தீபம் ஏற்றப்படுகிறது. முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் வைக்கப்படும் கற்பூரம் ஏற்றப்படும். அதிலிருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கைக் கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். சுவாமி சந்நதியில் ஏற்றப்படும் இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். இதே நேரத்தில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்தை சர்வாலய தீபம் என்பர்.

அண்ணாமலை தீப தரிசன பலன்

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும்

நாட்களில், வரும் வாகனங்கள்

வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில்,  வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், காமதேனு, சிம்மம், வெள்ளி இந்திர விமானங்கள், வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி அன்னம், வெள்ளி பெரிய ரிஷபம், வெள்ளி குதிரை, கைலாசம், தங்கமேரு, வெள்ளி ரதம், மகா ரதம்.

*கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டி, விழா தொடங்குவதற்கு முன்பு காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்துவது மரபு. அதன்படி, துர்க்கையம்மன், பிடாரியம்மன், விநாயகர் வழிபாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

தீபத்திருவிழாவின் உற்சவத்தின் 10ம் நாளன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். 108 நாட்கள் கடும் விரதமிருக்கும் சிவாச்சாரியார், பரணி தீபத்தை ஏற்றுவது மரபு.மகா தீபம் ஏற்றும்போது, கோயில் கொடி மரம் எதிரில் 3ம் பிராகாரத்தில் அமைந்துள்ள காட்சி மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருள்வார்கள்.

*ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர், மகா தீபம் ஏற்றும் சில வினாடிகளுக்கு முன்பு கொடி மரத்தின் முன்பு ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருள்வார். அப்போது, அகண்ட தீபம் ஏற்றப்படும். அதனை தொடர்ந்தே, மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

*மகா தீபப்பெருவிழா நிறைவுற்றதும், ஐயங்குளத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். முதல் நாளில் சந்திரசேகரர், இரண்டாம் நாளில் பராசக்தி அம்மன், மூன்றாம் நாளில் சுப்பிரமணியர் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர்.

*ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளான இறைவன், ஜோதியே வடிவாக எழுந்தருளும் மகா தீபத்தின் மறுநாள், உண்ணாமுலையம்மன் சமேதராக அண்ணாமலையார் கிரிவலம் செல்வது விசேஷம். திருவூடலின்போதும், மகா தீபத்தின்போதும் என ஆண்டுக்கு இருமுறை இறைவனே கிரிவலம் செல்வது தனிச்சிறப்பு.

*சிவன் கோயில்களில் வைகுந்த வாசல் அமைவது அபூர்வம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகுந்த வாசல் அமைந்திருக்கிறது. அங்கிருந்து மலையுருவை தரிசிப்பது புண்ணியம். வைணவ கோயில்களில் மட்டுமே நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு, சைவ திருத்தலமான அண்ணாமலையார் கோயிலிலும் நடைபெறுகிறது.

*அண்ணாமலையார் திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்தபிறகு, பள்ளி அறைக்கு செல்லும் அம்மனின் திருமேனிக்கு பெயர் வைபோக நாயகி.*துபம், மகா தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷாமிருக தீபம், ஓல தீபம், கமடதி தீபம், கணு தீபம், வியானன் தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், சிம்ம தீபம், துலஜதீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம் என தீபங்கள் 16 வகையாகும். அதில், சிவனுக்கு உகந்ததும் திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதும் மகா தீபம்.

*அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பூஜைகள்: உஷத்காலம் காலை 5.30, காலசந்தி பூஜை காலை மணி, உச்சிகால பூஜை  பகல் 11.30, சாயரட்சை பூஜை   மாலை 6 மணி, இரண்டாங்கலம் இரவு  7.30, அர்த்தஜாமம் இரவு 9 மணி.*அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு ஆறுகால பூஜையும், அம்மனுக்கு ஐந்துகால பூஜையும் நடைபெறும். ஆறாம்கால பூஜை முடிந்து அம்மன் பள்ளியறைக்கு போகும்போது தலை காயாது என்பதால் கூந்தல் மலர் மட்டும் மாற்றப்படுவது மரபு.

*மலை சுற்றும் வழியில் உள்ளது நேர் அண்ணாமலை சந்நதி. தீபம் ஏற்றும் மலை உச்சிக்கு சரியாக நேர்க்கோட்டில் அமைந்துள்ளதால் நேர் அண்ணாமலை எனும் பெயர் பெற்றது.அண்ணாமலையார் கோயில் கருவறையில் இருந்து நேர்க்கோட்டில் அமைந்துள்ளதாலும் இப்பெயர் என மற்றொரு கருத்தும் உள்ளது.*அண்ணாமலையார் கோயிலில் ஸ்தல விருட்சம் மகிழ மரம். மகுட மரம் என்றும் அழைக்கப்படும். அக்னி ஸ்தலம் என்பதால், இத்திருக்கோயிலுக்கு ஸ்தல விருட்சமே இல்லை என்ற கருத்தும் உண்டு.

*மலை சுற்றும் பாதையில் அமைந்துள்ளது இடுக்கு பிள்ளையார் கோயில். குபேர லிங்கத்தை கடந்து வந்தால், இடுக்கு பிள்ளையாரை தரிசிக்கலாம். குறுகலான இக்கோயிலுக்குள் உடலை வளைத்து சென்று வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை அமைப்பு சீராகி குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

*சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் பூண்டு மலைக்கு செல்வது போல திருவண்ணாமலையிலும் வழக்கம் உள்ளது. கார்த்திகை மாதம் தீபத்திருவிழா கொடியேற்றத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், விரத மாலை அணிவதும், மகா தீபத்தின்போது மலைக்கு சென்று நெய் காணிக்கை செய்வதும் தனிச்சிறப்பு.*அருணகிரிநாதர் அவதரித்த திருநகரம் திருவண்ணாமலை. ‘முத்தைத்திரு பத்தித்திருநகை’ எனும் திருப்பாடல் உருவான திருத்தலம் அண்ணாமலையார் சந்நதி. அருணகிரி நாதர் உடலை எரித்துவிட்ட பிறகு, கிளி உருவில் அவர் பாடியது கந்தரனுபூதி. மொத்தம் 195 ஸ்தலங்கள் பற்றி பாடியுள்ளார்.*அனைத்து திருக்கோயில்களிலும் உள்ள நவகிரங்களின் அமைப்பில் இருந்து, அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சந்நதி எதிரில் உள்ள நவகிரகங்களின் அமைப்பு சற்று மாறுபட்டிருக்கும்.

அதிசயமலை

மலை என்றால் மரங்களும் புல் பூண்டும் அடர்ந்து கிடக்கும். மிருகங்களும் விஷ ஜந்துக்களும் வாழும். ஆனால் திருவண்ணாமலையில் இப்படி எதுவுமே இல்லை. இம்மலையில் பயன்தரும் மரங்களே உள்ளன. மலையில் நமச்சிவாயர் குகை, விருபாட்சி குகை, பவள குகை உள்ளிட்ட பத்து குகைகளும் பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும், மயிலாடும்பாறை, ஆமைப்பாறை, அழுக்குப்பாறை ஆகியவையும் உள்ளன. அல்லிச்சுனை, அரளிச்சுனை, அத்திமரச்சுனை போன்றவை பக்தர் தாகம் தணிக்கக் காத்திருக்கின்றன.

மணிபூரகத்தலம்

ஆறு ஆதாரத் தலங்களில் திருவண்ணாமலை, மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலை பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றை குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டுமொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

மலைக்கோயில்கள்

திருவண்ணாமலையில் குகை நமச்சிவாயர் கோயில், பச்சையப்பன் கோயில், அரவன் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. மலையே கோயிலாகவும் அந்த மலைக்குள்ளும் கோயில்கள் இருப்பது விசேஷமானதுதானே!

அனைத்தும் எட்டு

எண் கணிதமுறைப்படி 8 என்ற எண்ணை மோசமானதாக சொல்வார்கள். இது தவறான கருத்து என்பதை நிரூபிக்கும் வகையில் அண்ணாமலையின் தோற்றம் அமைந்துள்ளது. இந்தத் தலம் எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றி வரும் போது 8 மைல் கடக்க வேண்டும். மலையைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் 8 லிங்கங்கள் உள்ளன.

Related Stories: