×

வீரட்டேஸ்வரர்

திருநாவுக்கரசர் திருவதிகை - பண்ருட்டி - கடலூர்

திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலகவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்ற பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலகவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.

தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய்(வயிற்று வலி) தாக்குகிறது. சூலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை அருள்புரியும் சிவனிடம் அழைத்துச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி சிவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும்... கூற்றாயின வாறு விலக்ககிலீர்  கொடுமைபல செய்தன் நான் அறியேன்ஏற்றாய அடிக்கே இரவும் பகலும்  பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில  வீரட்டானத் துறை அம்மானே - என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய்(வயிற்று வலி) நீங்கப் பெற்றார்.

மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும். கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது. கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர். மூலவர்-அதிகை வீரட்டேஸ்வரர், அம்பாள்- திரிபுரசுந்தரி கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்