கம்பர் வணங்கிய கலைமகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பத்மநாபபுரம். அக்காலத்தில் கேரளாவின் நாஞ்சில் நாடு மற்றும் வேணாடு ஆகிய பகுதியின் தலைநகராக விளங்கியது பத்மநாபபுரம். அக்காலங்களில் நவராத்திரி விழா பத்மநாபபுரத்தில்தான் 1840 வரை நடத்தப்பட்டது. 1840ல் சுவாதி திருநாள் மகராஜாதான், நவராத்திரி திருவிழாவை திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இப்போதும் பத்மநாபபுரம் கோட்டை மட்டும் கேரளாவைச் சார்ந்ததாகத்தான் உள்ளது.

பத்மநாபபுரம் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ராமசாமி கோயிலின் உட்பிராகாரத்தை சுற்றி வெளிப்பக்கம் ராமாயணக் காட்சிகள் 145 மரப்பலகைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோட்டையின் உள்ளிருக்கும் சரஸ்வதி சிலையைத்தான் ஒவ்வொரு வருடமும் நவராத்திரிக்கு முன்பு பல்லக்கில் வைத்து நடைப்பயணமாக திருவனந்தபுரம் கொண்டுச் சென்று பின் நவராத்திரி முடிந்த உடன் மீண்டும் பத்மநாபபுரம் கொண்டு வருவார்கள்.

பத்மநாபபுரத்தில் உள்ள சரஸ்வதி சிலை கம்பரால் வணங்கப்பட்ட பஞ்சலோகச் சிலையாகும். கம்பர்  மகன் அம்பிகாபதி அரசனின் மகளை விரும்பிய காரணத்தால் அம்பிகாபதியை அரசன்  கொன்று விட்டான். அதனால் சோழ நாட்டிலிருந்த கம்பர் அரசனோடு பிணக்கு கொண்டு  பாண்டிய நாட்டிற்கு வந்து அங்குதான் சடகோப அந்தாதியைப் பாடினார். பின் சேர  நாடு வந்து சரஸ்வதி அந்தாதியைப் பாடினார். சோழ நாட்டில் இருக்கும்போது,  தான் வணங்கிய சரஸ்வதி சிலையை சேர நாட்டிற்கு வரும்போது உடன் எடுத்து வந்து  பத்மநாபபுரம் அரண்மனையில் நிரந்தரமாக வைத்து விட்டார். அந்த சரஸ்வதி  சிலைதான் ஒவ்வொரு வருடமும் திருவனந்தபுரம் செல்கிறது.

கம்பருடைய கடைசி  காலத்தில் அவர் காரைக்குடி அருகிலுள்ள நாட்டரசன் கோட்டைக்கு சென்றார்.  அங்குதான் கம்பர் இறைவனடி சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. பத்மநாபபுரம்  அரண்மனை செவ்வாய்க்கிழமை மட்டும் திறக்கப்படாது.  மற்ற நாட்களில்  திறந்திருக்கும். பத்மநாபபுரம் சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரக்கோயில் முருக பெருமான் ஆகியோரது விக்கிரகங்களும் கொண்டு செல்லப்படுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து கொண்டு செல்லும் சரஸ்வதி சிலையை  திருவனந்தபுரத்தில் கோட்டையகம் உள்ளே கொலு வைத்து வணங்குவார்கள்.

அதுபோல் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை திருமேனியை, திருவனந்தபுரம் செந்திட்டை அம்மன் கோயிலில் கொலு வைப்பார்கள். குமாரக்கோயில் மலைமேல் உள்ள முருக பெருமான் திருமேனியை திருவனந்தபுரம் அரியாலை சிவன் கோயிலில் வைப்பார்கள். நவராத்திரி முடிந்தவுடன் மீண்டும் இங்கு கொண்டு வருவார்கள்.

படம்: வெங்கி

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: