×

மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்..பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

மதுரை: மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியின் போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்திதனரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை  சிறப்பானது. அதிலும் மஹாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளாய அமாவாசை தினத்தில் மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வதன் மூலம் அவர்களின் ஆசி பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும்.

இன்றைய தினத்தில் கொடுக்கும் தானத்தினால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். தோஷங்கள் நீங்கி யோகங்கள் அதிகமாக கிடைக்கும். சுப காரியம் ஏற்படுவதில் இருந்த தடைகள் நீங்கி நல்லது நிறைய நடைபெறும். மகாளய அமாவாசை தினத்திலும் மகாளய பட்ச காலத்திலும் தானம் செய்வதினாலும் திதி கொடுப்பதனாலும் பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். தோஷமான ஜாதகமாக இருந்தாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் நல்லவைகள் நடக்கும். அதே நேரத்தில் நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து நாம் முன்னோர்களின் சாபத்தோடு இருந்தால் நமக்கு பாதிப்புகள் அதிகமாகும். எனவே நாம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறலாம். மகாளய பட்ச காலமான 14 நாட்கள் நம்முடைய முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள்.

அவர்கள் நம்முடன் தங்கியிருக்கும் இந்த நாட்களில் நாம் அவர்களின் பசியையும் தாகத்தையும் போக்காவிட்டால் அவர்கள் மனம் வேதனை அடையும். மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை நினைவுபடுத்தவே தடைகள் பல ஏற்படுகிறது. எனவே மற்ற அமாவாசை நாட்களில் செய்ய முடியாமல் போனாலும் மகாளய பட்ச காலங்களிலும் மகாளய அமாவாசை அன்று பித்ருகடன் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மஹாளய அமாவாசையின் போது அவர்களுக்கு சிறப்பு ஹோமங்கள், யாகங்களை செய்யலாம். அனைவரும் தேவர்கள், பித்ருக்களின் கடன்களில் இருந்து விடுபட தகுந்த பூஜைகளை செய்ய வேண்டும். அதிலும் பித்ருக்களின் அனுக்கிரகத்தை பெற தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

Tags : ancestors ,
× RELATED மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்?