குறளின் குரல்: 131
(குறள் எண் 20)
நீரில்லாமல் உலக வாழ்வு அமையாது. அதுபோல நீரைத் தரும் வான்மழை இல்லையென்றால் எல்லோரிடமும் ஒழுக்கம் அமையாது. இவ்விதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீரின் முக்கியத்துவத்தையும் மழையின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.'நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும்மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.'(குறள் எண் 452)தான் எந்த நிலத்தை அடைகிறதோ அந்த நிலத்தின் தன்மைக்கேற்ப மாறுபாடு அடையும் இயல்புடையது நீர். அதுபோல மக்களுடைய அறிவென்னும் உணர்வும் தாம் சேர்ந்த இனத்தாரின் இயல்புக்கேற்ப மாறுபாடு கொள்ளும். `சிற்றினம் சேராமை’ என்ற அதிகாரத்தில் இக்குறளைச் சொல்கிறார் வள்ளுவர். கீழோரிடம் சேர்ந்தால் அந்த இயல்பே வரும் என்ற கருத்தை வலியுறுத்த இக்குறளை அமைக்கிறார். ஒரு மண்ணில் கலந்த நீர் அந்த மண்ணின் இயல்பை அடைகிறது.'யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல்நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!'- என்பது புலவர் செம்புலப் பெயல் நீரார் எழுதிய குறுந்தொகைப் பாடல். `செம்மண்ணில் விழுந்த மழைநீர் செந்நீர் ஆவதுபோல காதல் நெஞ்சங்கள் கலந்தன’ என்கிறார் கவிஞர். நிலத்தின் தன்மைக்கேற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை அறிந்திருந்த பழந்தமிழர் நீரின் தூய்மை குறித்தும் அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதையே இச்செய்திகள் புலப்படுத்துகின்றன.'நிழல்நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்இன்னாவாம் இன்னா செயின்.' (குறள் எண் 881)இன்பம் தரும் நிழலும் நீரும் நோய்செய்வனவாக இருந்தால் துன்பத்தைத்தான் தரும். அதுபோல சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும். நீர் மாசுபட்டால் துன்பத்தைத் தரக்கூடியது. நீர் இன்பத்தையே தரக்கூடிய வகையில் மாசற்றதாக இருக்குமாறு காப்பாற்ற வேண்டியது மனித குலத்தின் கடமை.'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.' (குறள் எண் 17)மேகம் கறுத்து மழைபொழியவில்லை என்றால் நெடிய கடலும் தன் வளம் குறையும். (மழை பெய்வதன் மூலம்தான் கடலில் உப்புச் சத்து அதிகமாகாமல் ஓரளவில் கட்டுக்குள் நிற்கிறது. மழை பொழியாவிடில் உப்பின் தன்மை அதிகரித்து மீன்கள் உயிர்வாழ இயலாத நிலை தோன்றும். கடல் செல்வங்களான முத்து பவழம் போன்றவையும் குறையும். இந்த உண்மையையெல்லாம் அன்றைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதன் அடையாளமே இந்தக் குறள்.)'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.' (குறள் எண் 215)தன்னில் வந்து சேர்ந்த நீரைக் குளம் எப்படிப் பொதுமக்கள் எல்லோருக்கும் பாரபட்சமின்றிக் கொடுக்கிறதோ, அதுபோல், உலக மக்களின் நன்மையைப் பெரிதும் விரும்பும் சான்றோர் பெருமக்கள், தங்களிடம் சேர்ந்த செல்வத்தைக் கொடுப்பர்.'விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண் பரிது.' (குறள் எண் 16)ஒரே ஒரு பச்சைப் புல்லே என்றாலும் அது வானத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால் தலைகாட்ட இயலாது.‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்காடும் உடையது அரண்.’ (குறள் எண் 742)வற்றாத நீருடைய அகழியும் விரிந்த நிலமும் மலையும் நிழல்தரும் அடர்ந்த கானகமும் ஆகிய இந்த நான்கும் உடையதே அரண் எனப்படும்.‘அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்குமல்லல்மா ஞாலம் கரி.’(குறள் எண் 245)எல்லோரிடமும் கருணை காட்டும் அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது. இதற்குக் காற்று உலவுகின்ற வளமை மிகுந்த இந்தப் பெரிய உலகமே சான்று.'மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யாளன்கட் படின்.' (குறள் எண் 217)பெருந்தன்மையாளனிடம் செல்வம் சேர்ந்தால், எல்லாப் பாகங்களும் நோய்க்கு மருந்தாகும் மரம்போல அச்செல்வம் முழுமையாகப் பிறருக்குப் பயன் தருகிறது.பொதுவாகவே கவிஞர்கள் இயற்கையை ரசிப்பவர்கள். மாசுபடாதசுற்றுச்சூழலில் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என மகாகவியும் கனவு காண்கிறார். பராசக்தியிடம் பாரதியார் வேண்டும் வேண்டுதல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர் ஆழ்மனம் எத்தனை அக்கறை கொண்டிருந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.காணி நிலம் வேண்டும் என பராசக்தியிடம் கேட்கும் அவர், தொடர்ந்து கேட்பவை எல்லாம் மாசில்லாத சுற்றுச் சூழல் இருந்தாலன்றிக்கிட்டாதவை.'பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்லமுத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும் - அங்குகத்தும் குயிலோசை சற்றேவந்து காதில் படவேணும் - என்றன்சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளம் தென்றல் வரவேணும்!'முன்பு கிராமங்களில் பாரதி கேட்கும் அனைத்தையும் பெறுவது சாத்தியமாயிருந்தது. இன்று கிராமங்களே இல்லாத சூழ்நிலை உருவாகத் தொடங்கிவிட்டது. கிராமங்கள் பட்டணங்களாய் மாறத் தொடங்கிவிட்டன. சிட்டுக்குருவிகளை மறையவைத்த கைபேசிகள் எல்லா கிராமங்களிலும் புழக்கத்தில் வந்துவிட்டன. தூய்மையான கிராமத்து வயல்வெளிக் காற்றிலும் மாசு படியத் தொடங்கிவிட்ட காலமல்லவா இது!சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலேயே நாம் நமது ஆன்மிகத் திருத்தலங்களில் தல விருட்சங்களைப் போற்றிக் கொண்டாடினோம். புண்ணியத் தீர்த்தங்கள் என்றும், புண்ணிய நதிகள் என்றும் சொல்லி நீர்நிலைகளின் பெருமையை நிலைநாட்டினோம்.ஆனால் பல தல விருட்சங்கள் மாதிரிக்கு ஒன்றாக அந்தத் தலங்களில் மட்டுமே தென்படுகின்றன. அவையும் பல திருத்தலங்களில் பட்டுப் போய்விட்டன. மற்றபடி அந்த மரங்கள் கானகங்களை அழித்த காரணத்தால் மறைந்தே விட்டன. நதிகள் பல இன்று நீரற்று வறண்டிருக்கின்றன.'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்கண்டதோர் வையை பொருநை நதி - எனமேவிய ஆறு பலஓடத் - திருமேனி செழித்த தமிழ்நாடு’என்று பாரதி கொண்டாடிய நதிகளிலெல்லாம்இன்று நீர் வரத்து குறைந்துவிட்டது.'தண்டலை மயில்களாடத்தாமரை விளக்கம் தாங்கக்கொண்டல்கள் முழவின் ஏங்கக்குவளை கண் விழித்து நோக்கத்தெண்டிரை எழினி காட்டத்தேம்பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாடமருதம் வீற்றிருக்கு மாதோ!’என்று வண்டுகளின் ரீங்காரத்திற்கு மயில்கள் நடனமாடிய அழகிய மருத நிலக் காட்சியை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் கம்ப நாட்டாழ்வார். இனி மனக்கண்ணில் தானே அத்தகைய காட்சிகளை நாம் காண முடியும்?'ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் விளையும் கேடுகளைப் பற்றி பேசிய படம். ஹரிஹரன் இயக்கத்தில் ரகுவரன் கதாநாயகனாக நடித்த அந்தப் படம், ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் புகை, காற்றை எப்படி மாசுபடுத்துகிறது என்பதையும், அதனால் பலருக்கு நுரையீரல் தொடர்பான நோய் ஏற்படுவதையும் விவரித்து திரை ரசிகர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.'ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்’ என்ற கண்ணதாசன் பாடல் பழநி திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஒலிக்கிறது.'பச்சை வண்ணச் சேலை கட்டிமுத்தம் சிந்தும் நெல்லம்மாபருவம் வந்த பெண்ணைப் போலேநாணம் என்ன சொல்லம்மா...அறுவடைக் காலம் உந்தன்திருமண நாளம்மா!’என்ற வரிகளைக் கேட்கும் நம் மனம் மயங்குகிறது. ஆனால் கிராமங்களைப் பற்றி அறிய அதிக வாய்ப்பில்லாத இன்றைய தலைமுறை, நெல் எந்த மரத்தில் காய்க்கும் என்ற கேள்வியை எழுப்பும்போது நம் நெஞ்சம் திகைக்கிறது. இன்றைய சூழலே இவ்விதம் இருக்குமானால் எதிர்காலச் சூழல் என்னவாகும்?குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களை வகுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மரங்கள், பறவைகள் போன்றவற்றையெல்லாம் பேசுகிறது நம் பழந்தமிழ் இலக்கியம். இன்று அந்த நிலப் பகுப்புகளும் அவற்றிற்குரிய விலங்குகளும் பறவைகளும் எங்கே போயின? காடும் காடுசார்ந்த இடமும் வயலும் வயல்சார்ந்த இடமுமெல்லாம் மிகவும் குறுகி விட்டனவே?சுற்றுச்சூழல் மாசு முழுமையாக அகற்றப்பட்டாலன்றி மீண்டும் அந்தப் பழைய தமிழகம் என்பது கனவு மட்டுமே. மாசற்ற சுற்றுச்சூழல் ஒருகாலத் தமிழகத்தில் நிலவியது என்ற உண்மையின் சாட்சியாக இன்றும் உள்ளது திருக்குறள்.சுற்றுச் சூழல் தொடர்பான வள்ளுவச் சிந்தனைகளை மனத்தில் கொண்டு, மென்மேலும் சூழலை மாசுபடுத்தாதிருப்போமாக.(குறள் உரைக்கும்)தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்