ராஜபோகங்கள் அருளும் ராஜகோபாலன்!

பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக்ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில் உருவாகியிருக்கிறது. நரசிம்மவர்ம பல்லவன், சாளுக்கியர்களுடன் கி.பி. 612ல் போர் செய்து வெற்றி கொண்ட இடம்தான் மணிமங்கலம்.

இச்செய்தி முதலாம் பரமேசுவரவர்மனின் கூரத்துச் செப்பேடுகளிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. தான் பெற்ற வெற்றியின் சின்னமாக மாமல்லன், மணிமங்கலத்தில் பல திருக்கோயில்கள் கட்டினான். அவற்றுள் ஒன்று ராஜகோபாலப் பெருமாள் திருக்கோயில்.

தமிழகத்தில் பகவான் கிருஷ்ணனுக்கு உரிய ஆலயங்களில் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது இந்தக் கோயில். அமைதியான கிராமத்தின் எல்லையில் ஏரிக்கரையையொட்டி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே பலிபீடத்தையும் கொடிமரத்தையும் தரிசித்து கருடாழ்வார் சந்நதியைக் கடந்து கருவறை மண்டபத்துள் நுழைகிறோம்.

இத்தல அனுமன் காவியுடை அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். கருவறையின் மாமாயக் கண்ணன், ராஜகோபாலப் பெருமாள் என்ற திருப்பெயர் கொண்டு, ஸ்ரீதேவி-பூமிதேவித் தாயார்களுடன் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறான். பீடத்துடன் சுமார் ஒன்பதடி உயரம் கொண்ட பெருமாளுக்கு நான்கு திருக்கரங்கள்.

மேல் வலக்கரத்தில் சங்கும், மேல் இடக்கரத்தில் சக்கரமும் (மற்ற தலங்களில் வலக்கரத்தில் சக்கரமும், இடக்கரத்தில் சங்கும் அமைந்திருக்கும்) தரித்து, கீழ்வலக்கரம் அபயஹஸ்தமாய் அருள, இடக்கரம் கதாயுதத்தைப் பற்றிய நிலையில் கதாஹஸ்தமாகத் திகழ்கிறது. பெருமாளின் திருமேனி அழகு நம்மை மெய் மறக்கச் செய்கிறது. பெருமாளைத் தரிசித்த பின்னர், கருவறை மண்டபத்திலேயே அமைந்திருக்கும் சிறிய சந்நதியில் ஆழ்வார் - ஆசாரியர்களைத் தரிசிக்கலாம்.

கருவறையை விட்டு வெளியே வந்து பிராகார வலம் வருகையில் தெற்குப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் செங்கமலவல்லித் தாயார் தனிக்கோயில் கொண்டு, அமர்ந்த நிலையில் திருக்காட்சி தருகிறாள். தாயாரை தரிசித்த பின்னர், வடக்குப் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் சந்நதி அமைந்திருக்கிறது. தீந்தமிழில் பாமாலை தொடுத்துச் சூட்டி மாதவனில் கலந்த இந்தக் கோதையைப் போற்றி வணங்குகிறோம்.

ஸ்ரீஜெயந்தி, திருக்கார்த்திகை, பவித்ர உற்சவம் 3 நாட்கள், திருப்பாவாடை உற்சவம் (புரட்டாசி பௌர்ணமியில்) ஆழ்வார், ஆசார்யாள் வருஷ திருநட்சத்திரம் (சாத்து முறைகள்) புரட்டாசி முதல் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் வீதி புறப்பாடு போன்ற விழாக்கள் இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

 இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டாலும், பிற்காலச் சோழ மன்னர்கள் பலர் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்ததுடன் பல வகையான தானங்களையும் அளித்திருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருத்தலத்திற்கு மதப்புரட்சி செய்த மகான் ராமானுஜர் எழுந்தருளியதாகக் கூறுகிறார்கள்.

அதற்கான சான்றுகள் இல்லையென்றாலும், சாத்தியம் இருக்கிறது. காரணம் எம்பெருமானார் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் திருத்தலம் இத்திருத்தலத்திற்கு அருகில்தான் அமைந்திருக்கிறது. நாடி வந்து வணங்குபவர்க்கெல்லாம் ராஜ போகங்களை நாளும் அருளும் ராஜகோபாலப் பெருமாளைத் தரிசித்து, நல்லன எல்லாம் பெறுவோம்.

சென்னை தாம்பரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. 55&என், 55-எஸ், எம்62-ஹெச், எம்-80 ஆகிய பேருந்துகளில் சென்று மணிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.

 - குரு சரண்

Related Stories: